![](pmdr0.gif)
ciRAppurANam of umaRup pulavar
canto 3 - hijURattuk kANTam part 2 (verses 608-1403)
(in tamil script, unicode format)
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்)
படலங்கள் 12-25 / பாடல்கள் (608-1403)
Acknowledgements:
Etext preparation: Mr. Govardhanan Ramachandran, USA & Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
or
ன Project Madurai 1999 - 2004
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
மூன்றாவது - ஹிஜூறத்துக் காண்டம்
படலங்கள் 12-25 / பாடல்கள் (607-1403)
3.12 | ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் | (608-619) | மின்பதிப்பு |
3.13 | ஓநாய் பேசிய படலம் | (620-648) | மின்பதிப்பு |
3.14 | வத்தான் படைப் படலம் | (649-695 ) | மின்பதிப்பு |
3.15 | பாத்திமா திருமணப் படலம் | (696-915) | மின்பதிப்பு |
3.16 | சீபுல் பகுறுப் படலம் | (916-930) | மின்பதிப்பு |
3.17 | புவாத்துப் படலம் | (931-950 ) | மின்பதிப்பு |
3.18 | அசீறாப் படலம் | (951-991) | மின்பதிப்பு |
3.19 | பத்னுன்னகுலாப் படலம் | (992-1006) | மின்பதிப்பு |
3.20 | பதுறுப் படலம் | (1007-1262) | மின்பதிப்பு |
3.21 | சவீக்குப் படலம் | (1263-1319) | மின்பதிப்பு |
3.22 | குதிரிப் படலம் | (1320-1331) | மின்பதிப்பு |
3.23 | தீயம்றுப் படலம் | (1332-1343) | மின்பதிப்பு |
3.24 | அபீறாபிகு வதைப் படலம் | (1344-1383) | மின்பதிப்பு |
3.25 | அசனார் பிறந்த படலம் | (1384-1403 ) | மின்பதிப்பு |
- வேறு
பருதி வானவன் விலகிய நெடும்பதி தனக்கு
நரலை போல்வளம் பெருகிய மதீனமா நகர்க்குந்
தெரிகி லாதுற நிமிர்ந்துமா றோல்தரத் திரண்ட
வரைக ளியாவையும் பதுக்கையுந் திடருறு வனமும்.
3.12.8
617 இருநி லம்பிதுங் கிடக்கட லலைகிடந் தெறிய
நிரைம ணிக்கதி ரெறித்திட நெடுங்கரத் தமிழ்த்தி
யொருநி லத்தள வாக்கியங் குறைந்தன ருடுக்கள்
செருகும் வானகங் கீண்டிட வருஞ்ஜிபு ரீலே.
3.12.9
618- வேறு
சூன்முகில் குலவிய வரையின் சுற்றெலாம்
வானவர் கோன்புவி யிடையின் மாட்டலாற்
பூநிமிர்க் ககுபத்துல் லாவும் பூணெனுங்
கானமர் தூதர்கண் காண லாயதே.
3.12.10
619 மதிதவழ் நெடுங்கொடி மதீன மாகிய
பதியினி லமைத்தவப் புதிய பள்ளியை
நிதிமதிட் ககுபத்துல் லாவி னேரதாய்
விதியொடுந் திரித்துப்பின் விளங்கக் கட்டினார்.
3.12.11
620 இருசுடர் விலங்கிட விலங்கு நீள்கொடி
நிரைதரும் பள்ளியை நோக்கி நீணபி
யொருவனைத் தொழுதிரந் துவக்குந் திங்களிற்
றெரிதரும் புதுமையொன் றெடுத்துச் செப்புவாம்.
3.12.12 - வேறு
- ஆகப் படலம் 12க்குத் திருவிருத்தம்...620
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.13 ஓநாய் பேசிய படலம் (621-648)
621 நலனுறு மக்கமா நகரைச் சுற்றிய
மலைகளி னொருவரை யடவி யின்வயி
னிலைகொளாப் பறழொடு நிறைந்த புள்ளிமான்
கலையொடுஞ் செறிந்துபுற் கறித்து நின்றதே.
3.13.1
622 வள்ளுகிர் முடங்குவால் வளைப்பற் றூங்குர
னுள்ளொடுங் ககட்டவோ னாயொன் றொண்ணுனை
முள்ளரைக் கானிடைக் கிடந்து மூரிவெம்
புள்ளிமெய்ப் பிணையினை நோக்கிப் போனதால்.
3.13.2
623 கல்லிரு புறத்தினுஞ் சிதற கால்வுறீஇ
வல்லுர னிலம்பட வளைந்து சென்னிதாழ்த்
தெல்லையில் பசியொடு மெதிர மானினம்
பல்பல திசையினும் படர்ந்து போயின.
3.13.3
624 பிணைக்குலந் திசைதொறுஞ் சிதறிப் போதுற
வணித்ததென் றொருபிணை யதனை நோக்கிவெண்
மணிக்கதி ரெனுமுகிர் நிலத்தில் வவ்வுறத்
துணித்தணு மம்மரிற் றொடர்ந்து போயதே.
3.13.4
625 வடித்தநீர் தூங்குநாச் சுணங்கன் வாயினிற்
பிடித்தெனத் தொடர்ந்து பெயரப் புள்ளிமா
னடித்தபந் தெனக்குதித் தரிதிற் சென்றபூ
நடித்திடுங் ககுபத்துல் லாவை நாடியே.
3.13.5
626 பட்டியின் வாய்நுனி படரு மானின்வாற்
றொட்டது காணெனத் தொடரு மெல்வையி
னெட்டெனுந் திசைபுகழ்ந் தேத்துந் தீவினைத்
தட்டறும் ஹறமெனுந் தலத்து ளாயதே.
3.13.6
627 இறையவ னமரர்க ளியற்றுஞ் சங்கையா
லறமெனுந் தலத்தின்மா னாய தீண்டினித்
தெறுகொலை விளைத்திட றீது செய்நெறி
முறையதன் றெனத்தனி முடுவ னின்றதே.
3.13.7
628 ஈனன பாசுபி யானு மின்பமு
மானமுந் தவிரபூ ஜகுலும் வன்கொலைக்
கானபஞ் சரசபு வானு மாண்டொரு
தானமீ தமர்ந்துநின் றவர்கள் சாற்றுவார்.
3.13.8
629 கானகச் சுணங்கன்வாய் கழிந்து போனதிம்
மானென விருந்தன மானு மொல்லையி
னானநல் ஹறமது ளாய தாலது
தானுநல் ஹறமதைச் சங்கை செய்தே.
3.13.9
630 வருந்திட நிதமுயிர் செகுக்கும் வன்சுணங்
கருந்திடும் பசிவெறுத் தறமைச் சங்கைசெய்
திருந்தது மானுமிவ் வெல்லை யுடபடப்
பொருந்திநின் றகம்புய போய தில்லையால்.
3.13.10
631 புதுமையிற் புதுமையீ தென்னப் பொங்கிநின்
றதிசயத் தொடுமவ ரவர்கள் கூறலும்
பிதிர்விர லுயர்ந்தபற் பிளந்த வாயினீர்
குதிதரு நெடியநா நீட்டிக் கூறுமால்.
3.13.11
632 கருத்தினிற் புந்தியற் றிருக்குங் காபிர்காள்
பெருத்திடும் ஹறமதைக் குறித்துப் பிந்தியீண்
டிருத்தலைப் புதுமையென் றிசைக்கின் றீரெனத்
திருத்தியே யுரைத்திட மறுத்துச் செப்புவார்.
3.13.12
633 குதிமறுத் தறமதைக் குறித்து நின்றதே
புதுமையென் றிருந்தனம் பொருவி லாதநன்
மதியொடு மின்றுநீ யுரைத்த வாசக
மதனினும் புதுமையென் றறைந்திட் டார்களால்.
3.13.13
634 குறித்துநின் றெதிர்ந்தியான் கூறும் வாய்மையெப்
புறத்தினு மறிகிலாப் புதுமை யென்கின்றீ
ரறத்தினுக் குரியவ னாணை யும்மிடத்
துறப்பெரும் புதுமையொன் றுளதென் றோதிற்றே.
3.13.14
635 கடத்துறை ஞமலிநீ காணொ ணாதெம
திடத்தினிற் புதுமையுண் டென்கின் றாயவை
திடத்துட னியாவர்க்குந் தெரியச் செப்பெனத்
தொடுத்தவர்க் கறிவுறச் சொல்லு கின்றதால்.
3.13.15
636 ஆதிதன் னொளிவினிற் றரித்த னாதிதன்
றூதென வுலகினிற் றோன்றி நின்றனர்
வேதமு மிறங்கின மெய்மை வேதத்தி
னீதமு நடத்தினர் நிகரு மில்லையால்.
3.13.16
637 அந்நபி நன்மறை யறைந்தீ மான்கொளாச்
சொன்னவை யனைத்தையு மறுத்துச் சூழ்தர
வின்னலைப் பொருந்தினி ரீத லாலினிப்
பன்னரும் புதுமையொன் றில்லைப் பாரினே.
3.13.17
638 முகம்மது நபியுரை மறுத்த மாற்றலர்
முகமதி நோக்குதன் முழுதுந் தின்மையென்
றிகலுறக் கொடுமொழி யெடுத்துக் காட்டிவிண்
புகுமலைக் கானினிற் சுணங்கன் புக்கதால்.
3.13.18
639 இணங்கிய நன்மொழி யெவர்க்குங் கூறியச்
சுணங்கன்வெங் கான்புகச் சூழ்ந்து நின்றிடுங்
கணங்களி லபூஜகல் கபடுங் கள்ளமும்
பிணங்கிய மனத்தினி னகைத்துப் பேசுவான்.
3.13.19
640 உடும்பைவன் பிணையினைத் தன்கைக் குட்பட
விடும்பினைப் பயிற்றிய முகம்ம தென்பவன்
கடம்படு ஞமலியின் கருத்துப் பேதுறப்
படும்படிப் பயிற்றுதற் பகர வேண்டுமோ.
3.13.20
641 அறத்தினுட் படுநகர் மாந்தர்க் கன்பிலா
திறத்தலைப் படுநினை வெடுத்த வஞ்சத்தான்
புறத்தொரு நகரிடைப் புகுந்து மாயங்கண்
மறுத்திலன் விளைத்தனன் முகம்ம தாங்கொலோ.
3.13.21
642 அயனகர்ப் புகுந்தன னகும தென்றியாம்
பயமற விருப்பது பழுது பற்றலார்க்
கியலுறு மிடங்கொடுத் திருத்தல் பாரிடை
வியனுறும் வீரத்தின் விழும மன்றரோ.
3.13.21
643 மருவலர் வலிகெட வுடைந்து மற்றொரு
பெருநக ரிருந்தன ராயிற் பேதுறப்
பரநகர் வேந்தராற் பகைகண் மூட்டியுங்
கருவறுத் தவர்பகை களைய வேண்டுமானால்.
3.13.23
644 திறைபல வழங்கினுஞ் சேர்ந்து கைகுவித்
திறையென நிற்பினு மினிது கூறினுங்
கறைகெழுங் கொடுமனக் கருத லார்தமை
யுறவென நினைத்திட லுணர்வுக் கீனமால்.
3.13.24
645 அடுத்துறைந் திலரென வெள்ள லன்றிக்
லெடுத்திடுங் கருதல ரிருந்து நாட்குநாட்
டொடுத்திடும் வினையமுஞ் செயலுஞ் சூழ்ச்சியும்
விடுத்திடு மொற்றராற் றெரிய வேண்டுமானால்.
3.13.25
646 வைகின னிந்நகர் வடுவுந் தீமையும்
பொய்யினின் முடித்தரும் புந்தி யோர்களை
வெய்யவ ராக்கினன் மேலுந் தீவினை
செய்கல னெனமனந் தேற லன்றரோ.
3.13.26
647 பவ்வமுற் றிடுநெடும் பாரி னீங்கலா
தெவ்வுழை யிருக்கினு முகம்ம தென்பவன்
செவ்விய னலனவ னூக்கஞ் சீர்கெட
வெவ்வினை விளைத்திசை நிறுத்த வேண்டுமானால்.
3.13.27
648 என்றவ னினையன வியம்பச் சூழ்தர
நின்றவர் கேட்டிவை நினைவி தாமெனக்
குன்றென விரும்புயம் வளர்ந்து கொண்டெழ
வன்றிறற் பெரும்பகை மனத்த ராயினார்.
3.13.28
649 ஈரமில் லபூஜகு லென்னு மன்னவன்
சார்பினி லுறவினிற் றக்க வேந்தரும்
பாரிடைச் சிறுகுடிப் படையின் மாந்தரு
மூரிடைப் படையொடு மொருங்கு கூடினார்.
3.13.29
- ஓநாய் பேசிய படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 13-க்குத் திருவிருத்தம்...649
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.14. வத்தான் படைப் படலம் (650-695)
650 மாறரு நெடுவரை மக்க மாநகர்த்
தேறல ரினையன நிகழ்த்துஞ் செய்கையைக்
கூறரும் பெரும்புகழ் கொண்டன் மானபி
வீறுடைத் திருச்செவி விளையக் கேட்டனர்.
3.14.1
651 அரிகடஞ் செய்கைக ளனைத்துங் கேட்டருள்
பெருகிய மனத்தினிற் பிரிய முற்றெழில்
வரிசைமன் னவர்களை யழைத்து வம்மென
வுரைசெயத் தூதுவ ரோடி யோதினார்.
3.14.2
653 விற்கர வலியபூ பக்கர் வெற்றிசேர்
மற்புய ருமறுது மானல் வாளலி
சொற்பெருந் தோழருந் தூதென் றோதுவோர்
முற்படு நபிதிரு முன்ன முன்னினார்.
3.14.3
653 மனனுறை யறிவென விருக்கு மன்னவ
ரனைவரு மடுத்துறைந் திருப்ப வாரணத்
தனிநிலை யுள்ளகந் ததும்ப நன்னபி
யினியன மொழிகொடுத் தியம்பு வாரரோ.
3.14.4
654 கொலைமனத் தபூஜகல் குழுவு மந்நகர்ச்
சிலைவய வீரருந் திரண்டு தீனவர்
மலைவுறப் பேரமர் வளர்க்க வேண்டுமென்
றிலைமலி வேலினீ ரிருக்கின் றார்களால்.
3.14.5
655 மாவிசும் பமரருக் கிறையவ ரிம்மதி
னாவினிற் போயமர் நடத்த வேண்டுமென்
றேவின னிறையென விசைத்த மாற்றமும்
போவதென் றிகல்கெடப் புரிதல் வேண்டுமால்.
3.14.6
656 வல்லவன் ஜிபுறயீ லுரைத்த வாய்மையிற்
செல்லவுந் தீனெறி விசயஞ் செய்யவும்
நல்லவை நமக்கிவை யன்றி நாட்டமொன்
றில்லையென் றிசைநபி யிசைத்திட் டாரரோ.
3.14.7
657 நாயகன் மறைவழி நடத்து நன்னபி
வாயகத் துதித்தசொன் மாற லின்றியே
சேயென நடப்பது திறமைத் தாமெனத்
தூயவ ரியாவருந் துணிவுற் றார்களால்.
3.14.8
658 போற்றிநின் றனைவரும் புந்தி யாமெனத்
தேற்றமுற் றியல்புடன் செப்ப நன்னபி
மாற்றல ரெனுங்குபிர் மாய்க்கும் பீசபீற்
கேற்றவை யாவையு மியற்று மென்றனர்.
3.14.9
659 கொற்றவெண் கவிகையுங் கோல மார்துகில்
சுற்றிய வட்டமுந் தூங்கு குஞ்சமுங்
கற்றையங் கவரியுங் கதிர்செய் மாமணி
வெற்றிவெண் டுவசத்தின் பேத வீக்கமும்.
3.14.10
660 தடமுறு பதலையுந் தவிலுந் தாளமு
மிடியென முழங்குபே ரிகையு மோர்புறத்
திடிமனுந் தகுணிதஞ் சிறந்த பீலியும்
வடிவுடைக் காளமும் வயிருஞ் சின்னமும்.
3.14.10
661 வட்டணந் தட்டிநீள் வள்ளித் தண்டைதோல்
கட்டிய தோற்பரங் கவசங் கீசகம்
புட்டில்கைக் சோடிணை தாக்குப் போர்வைவெண்
பட்டினிற் பஞ்சுவைத் தடைக்குப் பாயமும்.
3.14.12
662 பட்டையந் தோமரம் பரசு கப்பணஞ்
சொட்டைவா ளயிறனுச் சுரிகை முப்பிடி
நெட்டிலைச் சூலங்கோல் பால நேமிசூழ்
கட்டுபத் திரஞ்சரஞ் சுழற்று கைக்கண்.
3.14.13
663 ஆடலம் பரிபரிக் கணிக ளியாவையுந்
தேடின ரியற்றினர் சேனை காக்குதற்
கீடுடை யவரிவ ரென்ன நன்னபி
கூடிய பெயரினிற் குறித்துக் காட்டினார்.
3.14.14
664 அரண்டு கடகரி யனைய நால்வரு
முரணரி பொருவுமு ஹாஜி ரீன்களுந்
தரியல ருயிருணன் சாரி மார்களு
நரபதி நபியுட னிருக்கு நாளினில்.
3.14.15
665 செறுநர்வத் தானெனுந் தலத்திற் சேர்கிலாக்
குறைஷிகள் பலருங்க னானிக் கூட்டமு
மறமுடன் றிரண்டன ரென்னும் வாசக
மிறையவன் றிருநபிக் கெடுத்துக் கூறினார்.
3.14.16
666 மாற்றலர் முதற்படை திரண்டு வைகிய
கூற்றினை யுணர்வொடுங் குறித்தசு காபிகள்
சீற்றமுற் றவ்வயின் செல்கு வோமெனச்
சாற்றலு முகம்மதுந் தகுமென் றோதினார்.
3.14.17
667 நீட்டிய செழும்படைச் சேனை வீரரை
வீட்டிவெங் களத்திடைப் பருந்துக் கேவிருந்
தூட்டிய வேற்கையு பாத செய்தவங்
கூட்டிய தெனவுரு வெடுத்த கோலத்தார்.
3.14.18
668 காதலுற் றிரப்பவர் கருத்துத் தேக்குற
வீதலுக் கிசைந்தெடுத் தளிக்குஞ் செங்கையார்
போதமும் வீரமும் புகழுந் தூங்கிய
சாதன சகுதெனுந் தரும வேந்தரே.
3.14.19
669 அன்னவர் தமைமதி னாவிற் காதியா
மன்னபி முகம்மதங் கிருத்தி வைத்ததாள்
பின்னிடா தடுஞ்சரம் பெய்யும் வீரர்க
டுன்னிட வெழுந்தனர் துதிக்க யாவுமே.
3.14.20
670 குடைகளுந் துவசமுங் குழுமி யோங்கிடக்
கடுவிசைப் பரிக்குழாங் கலந்து முன்செலக்
சுடர்விடு படைக்கலஞ் சுமந்த கொற்றவர்
புடையெழத் திருநகர்ப் புறத்திற் றோன்றினார்.
3.14.21
671 படியிடத் தெழுந்துகள் புயலிற் பம்பவா
னிடியென முரசுபல் லியங்க றங்கக்கூர்
வடிநெடுங் கதிரயின் மலிந்து மின்னிடக்
கொடியவர் திசையினைக் குறுகி னாரரோ.
3.14.22
672 சேனையும் வாசியுஞ் செருமிச் சூழ்தரு
கானர ணனைத்தையுங் கடந்து சென்றுக
னானியர் குறைஷிக ணடுந டுங்கவத்
தானெனும் பெயருடைத் தலத்தைச் சுற்றினார்.
3.14.23
673 ககனவெங் கதிரவன் கரங்க டூளியிற்
புகவிட மிலையெனப் பொருந்து மன்னவர்
தொகுதியும் வாசியுஞ் சுற்றுஞ் சேனையு
மகுசிகண் டுளத்திடை மலைந்திட் டானரோ.
3.14.24
674 வருவதும் நிகழ்வதும் வகுத்துப் புந்தியிற்
பெருகிய தலைவருக் கெடுத்துப் பேசிநல்
லுரையினும் வழக்கினு மொத்த சூழ்ச்சியின்
புரவல னொருவனைத் தூது போக்கினான்.
3.14.25
675 சந்தென விடவருந் தலைமை மன்னவன்
வந்துநன் னபிபதம் வழுத்தி யூன்றிய
கந்தடு கடகளி றனைய காட்சியான்
சிந்தைகண் மகிழ்தர வெடுத்துச் செப்புவான்.
3.14.26
676 இறையவன் றிருநபி யுலகுக் கின்புறு
மறைவழி யொழுகியவ் வணக்க வாசக
முறைமையி னடத்தியா முழுது மிவ்வயி
னுறைகுவ தலதுவே றுறுதி வேண்டுமோ.
3.14.27
678 மகுசியென் றோதும்வத் தானி னேந்தலு
மிகுபடைத் தலைவரும் வேறு றாதொரு
தகைமையிற் பணிவது சரத மின்றுநீ
ரிகன்மறுத் தணிநகர்க் கெழுக வென்றனன்.
3.14.28
678 உற்றுறைந் தவனிவ ணுரைத்த வாசகம்
வெற்றியென் றியனபி போரின் வேட்கையிற்
சுற்றிய திறற்படைச் சூர ரியாரையு
மிற்றையி னெழுகவென் றேவி னாரரோ.
3.14.29
679 இங்கிதத் தொடும்பணிந் திசைத்த தூதுவ
னங்கலுழ் நபிமல ரடியி னிற்கரப்
பங்கயங் குவித்தரும் பதியிற் போயினன்
றிங்களங் குடையொடு மெழுந்த சேனையே.
3.14.30
680 ஒட்டிய செழுமுகிற் கவிகை யூடுற
நீட்டிய வெண்கொடி நிலவு கான்றிடத்
தீட்டிய படைக்கலஞ் செறியச் சென்றொரு
காட்டினி லிறங்கினர் கார ணீகரே.
3.14.31
681 இறங்கிய பாசறை யிருந்து வாரிபோற்
கறங்கிய சேனைமு ஹாஜி ரீன்களின்
மறங்கிள ரெண்பது பெயரை வாளொடு
நிறங்கிள ரயிலொடு நீக்கி னாரரோ.
3.14.32
682 கந்தமுங் கதிரும றாத காட்சியர்
கொந்தலர் புயத்துபை தாவைக் கூவிநற்
சிந்தையின் மகிழ்வுற விருத்தித் தேறிய
மந்திர மொழிசில வகுத்துப் பின்னரும்.
3.14.33
683 கூடுமெண் பதுபெய ருடனுங் கோதற
நாடிநீர் மக்கமா நகரைச் சூழ்தரு
பாடிக ளனைத்தும்பாழ் படுத்துஞ் சூறைக
ளாடியிங் கடைகென வறைந்திட் டாரரோ.
3.14.34
684 கரியினு மதர்த்தமு ஹாஜி ரீன்களை
மருமலர்ப் புயத்துபை தாவை மன்னபி
திருநய னங்களா னோக்கிச் சிந்தைவைத்
திருளறும் வெற்றி வெண் கொடியு மீந்தனர்.
3.14.35
685 கருதல ருறைபதி களைந்திட் டொல்லையின்
வருகென வினைஞரை விடுத்து வள்ளல்பாய்
துரகதக் குழுவொடுஞ் சேனை சூழ்தர
நரலையின் வளமதீ னாவை நண்ணினார்.
3.14.36
686 எண்ணொரு பதின்மரு மிலங்கு நீடொடை
வண்ணவொண் புயத்துபை தாவு மாறிலா
தண்ணறன் பதமலர் போற்றி யன்பொடும்
விண்ணெடுங் கடுவிசைப் புரவிமேற் கொண்டார்.
3.14.37
687 எதிரமர் தொறுந்தெழும் பிருந்த மெய்யினர்
கதிரயில் வாண்மற வாத கையினர்
விதியவன் மறைமுறை விளக்கும் வாயினர்
புதியவெம் பகைப்பதி யடுப்பப் போயினார்.
3.14.38
688 வெற்றிவெண் கொடியொடும் வேக வாம்பரிக்
கொற்றவர் குழுமிவந் தடருங் கொள்கையைப்
பற்றல ரறிந்துசீ றூரிற் பல்பல
தெற்றறக் குடியொடுஞ் சிதறிப் போயினார்.
3.14.39
689 இவுளியும் படையுமு ஹாஜி ரீன்களுந்
தவிசுறை யரசுபை தாவும் வந்தவை
யபுஜகல் மகனறிந் தரிய வேகத்தாற்
குவிதரும் படைக்கெதிர் கொண்டு நேர்ந்தனன்.
3.14.40
690 மதிவர வழைத்தவர் விடுத்த மன்னருஞ்
சதியபு ஜகல்தரு புதல்வன் றானையுங்
கதிபரி யொடுபடைக் கலத்தின் கையொடு
மெதிருமக் கெமக்கென விருக்குங் காலையில்.
3.14.41
691 சதிவைத்த கருதலர்த் தளத்தி னூடிருந்
திதமித்த நபிகலி மாவுக் கின்புறு
மதிவத்தி யெனுமிகு தாதும் வாம்பரி
யுதபத்தும் வந்துபை தாவைக் கூடினார்.
3.14.420
692 மாதவ ரிருவரும் வந்த போழ்தினி
லாதரம் விடுத்தம ரரிக டுன்புறப்
பூதலம் புகழுமுக் காசு புத்திரர்
காதகல் சகுதொரு கணைதொட் டாரரோ.
3.14.43
693 அடுத்துநின் றவரிசு லாமி லாயது
மெடுத்தொரம் பெய்தவ ரிருந்த வேகமுங்
கடுத்தலை யெடுத்தவர் கருத்துங் கண்டமர்
தடுத்தபூ ஜகல்மகன் றளம்பின் வாங்கினான்.
3.14.44
694 வெட்டுக்குத் தெனுமொழி விளம்பி லாதொரு
மட்டினின் றவர்கள்பின் வாங்கி னாரினித்
தொட்டமர் விளைத்திடல் சூழ்ச்சித் தன்றெனத்
தட்டல கயிலுபை தாவு நீங்கினார்.
3.14.45
695 மருவல ருடனிருந் திருவர் வந்ததும்
பொருசகு துக்கெதி ராது போயதும்
விருதுகொண் டிகலிடும் வெற்றிப் போரினும்
பெரிதெனக் குழுவொடும் பிரியத் தேகினார்.
3.14.46
696 மிகல்பெறும் வெற்றியின் பீச பீலுக்கா
யிகன்முதற் சரமுமொன் றெய்து மன்னவர்
முகிறவழ் கொடிசெலத் தானை மொய்த்திட
நகர்புகுந் தகுமது பதத்தை நண்ணினார்.
3.14.40
வத்தான் படைப் படலம் முற்றிற்று
ஆகப் படலம் 14-க்குத் திருவிருத்தம்...696
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.15. பாத்திமா திருமணப் படலம் (697-915)
697 திங்கள்வந் திறைஞ்சிப் போற்றி செகதிர் பேசப் பேசு
மங்குலங் கவிகை வள்ளல் வளம்பெறு மதீனாத் தன்னிற்
பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி
யெங்கணும் படரச் செங்கோ னெறியர சியற்று நாளில்.
3.15.1
698 விதியவன் மொழிம றாது விண்ணவர்க் கரசர் கூறும்
புதுமறை யவர்கள் போற்றப் பொருவில்வா னவர்கள் வாழ்த்தக்
கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம்
வதுவையின் வரலா றெல்லாம் வகுத்தினி துரைக்க லுற்றாம்.
3.15.2
699 ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீஜா வீன்ற
பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்து மொன்றாய்க்
கோதறத் திரண்டு சோதிக் கொடியென வுருக்கொண் டோ ங்கி
மாதர்க டிலத மென்ன மாநிலத் துதித்த பாவை.
3.15.3
700 அதிர்த்திரைக் கடற்பா ரெங்கு மமுதத்தீன் றிவலை சிந்தி
யுதித்தெழு முகம்ம தென்னுந் திங்களி லுதயஞ் செய்து
பதித்தலத் துவக்கு மாதர் பவக்கடற் றிமிர மோட்டுங்
கதிர்த்தடத் தீப மென்னக் கட்டழ கெறிக்குஞ் சோதி.
3.15.4
701 ஆதிநா ளொளிவு வாய்ந்த வழகெலாந் திரட்டிச் சேர்த்த
பாதியிற் பாதி நூற்றோர் பங்கினிற் செம்பொன் னாட்டின்
மாதரை வகுத்திம் மாததைத் திரட்டிய வண்ண மெல்லாந்
தூதுயிர்ப் புதல்வி யென்னப் படைத்தனன் சுருதி யோனே.
3.15.5
702 சுற்றிளம் பருதி வெய்யோன் சுவட்டடிச் சேப்புக் கேயப்
பெற்றனன் மடந்தை துண்டத் தழகினிற் பெற்றி லேனென்
றுற்றுள மொடுங்கக் கூனி யந்தரத் துலவி நாணி
மற்றுள கலையுந் தேய்ந்து நாட்குநாண் மறுகுந் திங்கள்.
3.15.6
703 எண்ணருந் தவமுங் கற்பும் புகழுநின் றிறைஞ்சி யேத்தும்
பண்ணரும் வேத வாய்மைப் படிதவ றாத வாக்கு
நண்ணருந் தரும மியாவுஞ் சொற்படி நடக்கு நாளுங்
கண்ணகன் புவியிற் பாவைக் கற்பெனு மரசுக் கன்றே.
3.15.7
704 சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கு மிம்பர்ப்
பூண்முலை யவர்க்கு மேக நாயகி யென்னப் பூவிற்
காணுதற் கரியோன் செய்தா னென்னிலிக் கவின்கொண் டோ ங்கு
மாணிழை மடந்தைக் குற்ற பெற்றியார் வகுக்க வல்லார் ?
3.15.8
705 எல்லையி லழகு வாய்ந்த வேந்திழை கதீஜா வீன்ற
நல்லியற் கனக நாட்டி னாரியர் திலத மன்னார்க்
கல்லடர் கரிய வாட்க ணகத்திடை வரிக ளோடிப்
பல்லவம் பசப்புற் றென்னப் பருவம்வந் திறுத்த தன்றே.
3.15.9
706 வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலுங்
கொடிமல ரதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலுங்
கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல் போலு
மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே.
3.15.10
707 வரிசையும் பேறும் வேத வாய்மையு முளர தன்றி
யரசருக் கரசர் செல்வத் தரும்பொரு ளனைய செல்வி
பெரியவ னருளால் வந்த பெண்ணினை வரைத லியானென்
றுரைகொடுப் பவரியா ரென்ன வுள்ளநெக் குருகு வாரும்.
3.15.11
708 தரியலர்ச் செகுக்கும் வெள்வேற் சதுமறைத் தலைவ ரீன்ற
வரிவிழிக் கரிய கூந்தன் மங்கைதம் வதுவை வேட்டுப்
புரிமுறுக் கவிழுந் தொங்கற் புயவரை யரசர் கூடி
யொருவருக் கொருவ ருள்ளிட் டுரைவெளிப் படித்து வாரும்.
3.15.12
709 வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும் பூத்த
கொடிமட மயிலைச் சோதிக் குலக்கொழுந் தனைய கற்பைப்
பிடிபடு மணத்திற் சேர்ந்து பேருல கனைத்தும் வாழ்த்தப்
படுமவ ரெவரோ வென்னப் பற்பல்காற் பகரு வாரும்.
3.15.13
710 பிறநக ரரசர் செல்வின் பெண்கனி வதுவை வேண்டி
யறைதிரைப் பரவை யாடை யம்புவி முழுதுங் காத்து
முறைசெயுங் கார ணீகர் திருமுன மொழிமி னென்றன்
றுறவின ரிடத்திற் றீட்டு மோலைக ளனுப்பு வாரும்.
3.15.14
711 எரிமணிக் கனகப் பூணு மிளநிலா வொழுகு முத்தப்
பெருமணி வடமு மெண்ணில் வெறுக்கையும் பெரிது முன்னர்த்
தருகுவம் வதுவை யெம்பா லளித்திடி லென்னத் தாழ்ந்து
கருதல ரரியே றன்னார் காதினி லோது வாரும்.
3.15.15
712 உரைபல ரினைய வண்ண முலகவ ரியம்ப யாணர்
மரைமலர் வதன வள்ளன் மங்கைதம் வதுவை வல்லோன்
றிருவுளப் படிய தன்றிச் செய்வதின் றென்னச் செவ்வி
தருமனத் திருத்தி யாருஞ் சாற்றுதல் பொருந்தி லாரால்.
3.15.16
713 இவ்வித நிகழா நிற்ப வியைதரு விதியின் பண்பான்
மவ்வலங் குழலார் வாழ்க்கைத் துணைவரு நயத்தை நோக்கித்
தெவ்வடர்த் தெறியும் வெள்வேற் சிங்கவே றனைய காளைச்
செவ்விய லலியார் காதல் சிந்தையி னாளும் பூத்தார்.
3.15.17
714 நகரவ ருரையுஞ் சூழ்ந்த நாட்டவர் விடுக்குந் தூதர்
பகருநன் மொழியு மற்றோர் தீட்டுபா சுரத்தின் கூறும்
நிகரரும் வள்ள லுள்ளத் திருத்திய நினைவு மோர்ந்து
வகையுறா தீற்றி னெண்ணத் தாலுளம் வருந்தி னாரால்.
3.15.18
715 மின்னுருக் கொண்ட கன்னி விளங்கிழை நலத்தை நாடி
மன்னர்க ளுளந்தே றாது வதுவையின் மயக்குற் றாரேற்
பன்னெடு நாளிற் காம மனத்தினுட் படுத்திப் பாவை
தன்னைவைத் திருக்கும் வேந்தர் கருத்தையார் சாற்ற வல்லார் ?
3.15.19
716 சூனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற்
கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி
நினைவுதித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த
நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்.
3.15.20
717 குயினுறை சிகர மேருக் குலவரை யனைத்தும் வென்று
வயிரவொண் வரையின் மீறு மாணெழிற் புயங்கள் சேந்த
கயிரவ மனைய செவ்வாய்க் காரிகை மம்மர் நோயால்
வெயில்படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த வன்றே.
3.15.21
718 விண்கணி னமரர் கோமான் மேதினிக் குரைத்த வேதப்
பண்கனிந் தொழுகுஞ் செவ்வாய்ப் பாத்திமா வென்னு மந்தப்
பெண்கனி யுருவத் தார்ந்த பேரெழிற் கடலி லாழ்ந்து
கண்களின் மறுத்துத் தோன்று முருவன்றிக் காண்கி லாரே.
3.15.22
719 கலிதடுத் துலகங் காக்குங் காவல ரினிதி னீன்ற
வொலிகட லமிர்த மொவ்வா வொண்டொடி முகத்தின் வாய்ந்து
மலிதருங் கருமை யுண்ட வரிவிழிக் கயல்கள் பாய
வலியெனும் வலிய வீர ரகக்கடல் கலங்கிற் றன்றே.
3.15.23
720 பற்றல ருடலந் தேய்த்துப் பஃறலைக் குருதி யூற்றும்
வெற்றிவா ளலியென் றோதும் வீரவெண் மடங்க னாளூ
மிற்றசின் மருங்குல் பாத்தி மாவெனு மிளமான் றன்னால்
வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்த தன்றே.
3.15.24
721 செறிகடற் பாரிற் றூண்டா மணியினுஞ் செவ்வி வாய்ந்து
நிறைதருங் கற்பி னல்லா ரிடத்தினி னிதமு மாறா
வறிவெனுந் தூது தன்னோ டகமெனுந் துணையும் போக்கி
வறியரிற் றமிய ராகி வாளலி மவுல லுற்றார்.
3.15.25
722 கனிந்தினி தொழுகும் பெண்மைக் கரும்பைத்தேன் கனியை வாசம்
புனைந்தபூங் கதுப்பிற் றுஞ்சும் வண்டெனப் பொருகண் ணாரை
மனந்தனிற் குடிகொண் டுற்ற வாழ்வையென் னிருகண் ணீங்கா
வனந்தனை யிறைவா வென்பா லளித்தியென் றுரைத்து நின்றார்.
3.15.26
723 வனைகழற் செருவாள் வள்ளன் மனத்துறுங் காமத் தன்பும்
பனிமலர்ச் செருகுங் கூந்தற் பாவைதம் மெழிலுஞ் சூட்ட
நனைதரும் வதுவை வேண்டி நாடொறுங் கெஞ்சிக் கெஞ்சித்
தனியெனுக் குரைத்தா ரல்லாற் பிறர்க்குரை சாற்றி லாரே.
3.15.27
724 அரிந்துவெங் குபிரை யோது மாதிநூற் கலிமா வித்தி
விரிந்ததீன் பயிரை யேற்றும் விறற்படை யலியாம் வேங்கை
பரிந்திரு கரங்க ளேந்திப் பற்பல்கா லிறையோன் றன்பாற்
கரைந்துநின் றிரந்த வெல்லா முறக்கபூ லாய தன்றே.
3.15.28
725 மூதிருட் படலஞ் சீக்கு முச்சுடர்க் கதிரு மொவ்வா
பாதலம் விசும்பு தூர்க்கும் படர்சிறைக் சுருணைச் செங்க
ணாதரம் பெருக வாதி யருளின்வா னிழிந்து மெய்மைத்
தூதரி னிடத்தில் வந்தார் துணையெனுஞ் ஜிபுற யீலே.
3.15.29
726 வந்தடுத் துறைந்து வண்மை முகம்மதே சலாமென் றோதிப்
பைந்தொடி கரிய கூந்தற் பாத்திமா பொருட்டால் வானி
லந்தமி லவன்றன் பாலி னிகழ்ந்தவை யனைத்துந் தேறும்
புந்தியின் மகிழ்வு பூப்பப் படிப்படி புகல லுற்றார்.
3.15.30
727 அரியவன் றிருமெய்த் தூதே யண்ணலே யிறையோன் சோதிக்
குருமணி யினத்தாற் போதாற் கொழுந்துகி லதனாற் செம்பொற்
றிருநகர் மனைக டோ றுஞ் சிறப்பிக்க வருளிச் செய்தா
னுரையருட் படியே வானோ ரும்பரின் விளக்கஞ் செய்தார்.
3.15.31
728 பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகரு நாட்டி
யென்னுட னிசுறா பீல்மிக் காயிலுஞ் சாட்சி யேயப்
பன்னரு மலியார்க் கின்பப் பாத்திமா தமைநிக் காகு
முன்னிய தருத்தூ பாவின் முடித்தன னிறைவ னன்றே.
3.15.32
729 இந்தநன் மொழியை நும்பா லியம்பென விறைவ னேவ
வந்தன னென்னப் போற்றி வானவர்க் கரசர் கூறச்
சந்தன கதம்ப மாறாத் தடவரைப் புயங்கள் விம்மக்
கந்தடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற் றாரால்.
3.15.33
730 அடலபூ பக்கர் வெற்றி யரியும றுதுமா னொன்னா
ரிடரற வருமு ஹாஜி ரீன்களன் சாரி மார்க
ளுடனுறை முதியோர்க் கும்ப ருற்றசோ பனத்தைச் செந்தேன்
வடிமலர்த் தொங்கற் றிண்டோ ண் முகம்மது வழங்கினாரால்.
3.15.34
731 கனகநா டதனி னுற்ற காரண வமுதந் தேக்கி
யனைவருங் களிப்பு வெள்ளத் தானந்தக் கடலின் மூழ்கி
யினையன நினைத்தோ மியாங்க ணினைத்தவை யிறையோன் செய்தான்
வனைகழ லலிதம் பேறின் மகிமையார் வகுக்க வல்லார்.
3.15.35
732 என்னுநன் மொழிகண் மிக்கோ ரினியன மகிழ்விற் கூறப்
பன்னகம் பேசப் பேசும் பார்த்திவ ரிறசூ லுல்லா
தன்னகத் திருந்த வண்ண முடித்தனன் ரனியோ னென்ன
மன்னபித் தாலி பீன்ற மணியினைக் கொணர்மி னென்றார்.
3.15.36
733 மருவலர் மதங்க டேய்க்கு மன்னவ ருரைத்த மாற்ற
மிருவர்கள் சென்னி மேற்கொண் டெழுந்தலி தம்மை முன்னிப்
பரிவின் சலாமுங் கூறிப் பாவலர் வறியோர் வாழச்
சொரிதருஞ் செங்கை வேந்தே சோபனம் வருக வென்றார்.
3.15.37
734 மதுமைகன் னவர்கள் கூறுஞ் சோபன வசனந் தன்னா
னிதயத்தி னிருந்த வண்ண முடிந்ததோ வென்ன வெண்ணிக்
கொதிநுனைப் பகுவாள் வள்ள லெழுந்திரு குவவுத் திண்டோ ட்
புதுநறாத் துளிக்குந் தொங்கல் புரடர விரைவின் வந்தார்.
3.15.38
735 ஆரண முழங்கும் பள்ளி வாயிற னவையி னண்ணிக்
காரணக் குரிசிற் கின்பக் கட்டுரை சலாமுங் கூறி
யூரவ ருடனு மோர்பா லுறைந்தன ருயர்ந்த வெற்றி
யேரணிந் திலங்கும் பைம்பூ ணிளஞ்சிங்க மிருந்த தொத்தே.
3.15.39
736 தமனியப் பதியிற் றூபாத் தருவயி னடந்த பேறு
மமரருக் கரசர் கூற நபியக மகிழ்ந்த வாறுந்
திமிரவெங் குபிரை யோட்டுந் தினகர னென்னுந் தூயோர்
கமைதரு சீற்ற வேங்கை யலிகயங் களிப்பச் சொன்னார்.
3.15.40
737 வானவர்க் கரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறுந்
தேனெனு மணத்தின் றீஞ்சொற் செவிவழி புகுத லோடுங்
கானமர் வேங்கை வள்ளல் கதிர்மணிப் புயமு நெஞ்சுத்
தானவ னருளீ தென்னத் தடப்பெரும் புளகம் பூத்த.
3.15.41
738 திருத்திய கனகப் பைம்பூண் சேயிழை வதுவை வேட்டு
வருத்தமுற் றுணர்வு போக்கி நாடொறும் வருந்து நெஞ்சிற்
பொருத்துற நினைத்த வண்ண முடிந்ததென் றுரைபுக் காலக்
கருத்தினிற் பெருகா னந்தக் களிப்பையார் கணிக்க வல்லார்?
3.15.42
739 அகலிடம் விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு
மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னப்
பகரருங் கற்பின் மிக்க பாத்திமா செவியிற் சாற்ற
விகலுறும் வேத வாய்மை முகம்மதங் கிசைத்தா ரன்றே.
3.15.43
740 அருமறை முதியோ ரேகி யிறையவ னலியார்க் கின்பத்
திருமண முடித்தா னென்ன ஜிபுறயீ லுரைத்த வாறு
மருமலர் வாகைத் திண்டோ ண் முகம்மது மகிழ்ந்த வாறும்
புரிகுழ னவ்வி பாத்தி மாமுனம் புகன்றிட் டாரால்.
3.15.44
741 மறையவ ருரைத்த மாற்ற மதிநுதன் மடந்தை கேட்டின்
றிறையவன் முடித்த வாறு மியனபி மகிழ்ந்த வாறு
முறையெனத் தலைமேற் கொண்டேன் முன்னர்நூன் முழுதும் வல்லீ
ரறைவதொன் றுளது கேண்மி னெனுமுரை யருளிச் சொல்வார்.
3.15.45
742 சினவுவே லபித்தா லீபு சேயெனும் புலிக்கி யானே
மனையினிற் குரிய ளானேன் மகரிர சிதமைந் நூறென்
றுனைமொழி பொருத்த மில்லே னென்னுளத் துறைந்த வண்ண
மினிதுற வருள வேண்டு மெனுமுரை விளங்கச் சொன்னார்.
3.15.46
743 மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம்
படர்ந்தகேள் வியர்கள் வந்து நபிமுனம் பகரக் கேட்டுக்
கடந்தசெங் கதிர்வே லேந்துங் காவல ரெவரு முள்ளத்
திடந்தனி மலைவு தோன்றி யிருந்தனர் பெரிதின் மன்னோ.
3.15.47
744 அவ்வயி னிமையா நாட்டத் தமரருக் கரச ராதி
செவ்விய மொழியி னோடுஞ் செகதலத் திழிந்து கூறா
நவ்விமுன் னெதிர்ந்து பேசு நாயக சலாமென் றோதிக்
கவ்வையங் கடலின் மிக்காங் களிப்புறக் கருதிச் சொல்வார்.
3.15.48
745 பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றுநும் புதல்வி யுள்ளத்
துறைகின்ற மகரைக் கேட்டு வருகவென் றும்பர் போற்று
மிறையவ னருளிச் செய்தா னென்றுரைத் தனரம் மாற்ற
முறைவழி விளக்கத் தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே.
3.15.49
746 மேலவன் வரிசைப் பேறாய் விளம்பிய மாற்றங் கேட்டு
நூலெனு மருங்குற் பேதை நுவலரு முவகை யெய்தி
ஞாலமும் விண்ணு நிற்க நாட்டிய தம்ப மென்னச்
சீலமுற் றறிவினோடு மொருமொழி செப்ப லுற்றார்.
3.15.50
747 இறுதியிற் பவத்தின் மாத ரென்ஷபா அத்தீ டேற்றம்
பெறமன்றாட் டருள வேண்டிப் பேரருட் கபூல்செய் தானேல்
உறுதிநன் மகர்பெற் றேனென் றுரைத்தன ருரைத்த மாற்றஞ்
சிறைகுலாம் வள்ளலாதி திருமுன்விண் ணப்பஞ் செய்தார்.
3.15.51
748 நபியைமான் பாத்தி மாவை நரர்புலி யலியை யெந்தப்
புவியினு முவந்தோர் செய்யும் பிழைபொறுத் திடுவ தாக
வவியும்பிற் கால மன்றாட் டருளுவ னென்ன வாதி
கவினுறச் சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார்.
3.15.52
749 வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர்
தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார்
பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந்
தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால்.
3.15.53
750 கோதைய ருரைத்த மாற்ற மிஃதெனக் கொண்டல் கூற
மாதவர்க் குதவி கூறுஞ் ஜிபுறயீல் மகிழ்வி னேகிப்
பூதலத் துறைந்த யாக்கை யுயிர்தொறும் பொருந்தி வாழு
மாதிமுன் னுரைத்து நின்றா ரருட்கடை நோக்கி யன்றே.
3.15.54
751 பாவைய ருரைத்த வண்ணம் பச்சையங் கடுதா சின்கண்
மேவரக் கனக மையால் வரிபட விளங்கத் தீட்டிச்
சேவையி னினைவு மாறாச் செவ்விய ஜிபுற யீல்பா
லீவதீ தென்ன வோதி யிறையவ னளித்திட் டானால்.
3.15.55
752 வரைந்தபா சுரத்தை யேந்தி வானிழிந் தமரர் கோமான்
கருந்தடங் கண்ணார்க் கென்ன நபிதருக் சுரத்தில் வைத்தார்
விரிந்தபூங் கமல மன்ன மென்முகஞ் சேர்த்தி முத்திப்
பரிந்தொரு துணைவர்க கீந்து பாசுரம் விளக்கென் றாரால்.
3.15.56
753 கொடுத்தபதி திரத்தை வாங்கிக் கொழுமலர்க் கண்ணி லொத்தி
விடுத்ததை விரித்துப் பைம்பொன் வரிமுறை விளங்க நோக்கி
யடுத்தவர் பிறர்மற் றுள்ளோ ரியாவரு மறிய வல்லே
தொடுத்தொரு மொழிவ ழாது வாசகஞ் சொல்ல லுற்றார்.
3.15.57
754 என்னடி யவரின் மிக்கா முகம்மதி னினிதி னீன்ற
பொன்னிழை தனக்கு மென்ற னலியெனும் புலிக்கு மின்ப
மன்னிய வதுவைக் கான மகரென விசுலா முற்ற
பன்னிகள் பவத்தி னுற்றோர் பல்லர்க்குங் குறைக டீர.
3.15.58
755 இறுதிநா ளினின்மன் றாடித் தன்ஷபா அத்திலீ டேற்ற
மறைதொறும் விளங்கச் சொல்லு முகம்மதுஞ் ஜிபுற யீலு
மறநெறி மீக்கா யீலுஞ் சாட்சிய தாக நானே
மறுவறக் கபூல்செய் தேனென் றிருந்ததை வாசித் தாரால்.
3.15.59
756 பாரினின் முதலோன் வாய்மைப் பத்திரம் வரவ ளாகப்
பேருல கினிலிப் பேறு பெற்றவ ருளரோ வென்ன
வீரவெண் மடங்க லன்ன விறலுடை வள்ள லோடுஞ்
சீர்பெறு முதியோ ரியாருஞ் சிலிர்த்தன ருடல மன்றே.
3.15.60
757 செவியகங் குளிரப் பொன்னாற் றீட்டுபத் திரத்தை யேந்தி
யவையகம் விடுத்துப் பாத்தி மாவணி மனையை நண்ணிக்
கவினுறு மயிலே யென்ன வாசித்துக் காண்பித் தன்பி
னவமிவை யென்னப் போற்றிச் சிலமொழி நவில லுற்றார்.
3.15.61
758 வரத்தினி லுயர்ந்த பேறே மகுசறு வெளியி லென்றன்
கரத்தினி லளிக்க வேண்டுங் காரண மதனா லீதை
யொருத்தருந் தீண்டா வண்ண முயிரென வோம்பி யோர்பா
லிருத்துமென் றிறசூ லுல்லா விளந்தளிர்க் கையி லீந்தார்.
3.15.62
759 அந்தநன் மாற்றங் கேட்ட வரிவையர்க் கமுத மன்னார்
செந்தளிர்க் சுரத்தி னேந்திக் சென்னிமேல் விழிமேற் கொண்டு
மந்திரப் பொருளைச் செம்பொன் மணிச்செப்பி னடைத்துக் கிட்டாப்
புந்தியு முயிரு மென்னப் போற்றுதல் பொருந்தி னாரால்.
3.15.63
760 பரம்பொருள் விருப்பி னீந்த பத்திர மகள்கைக் கீந்து
வரம்பெறும் வள்ளல் பள்ளி வாயிலி னைவையி னண்ணி
யரம்பொருந் திலங்கும் வெள்வே லபூபக்கர் முதலா யுள்ள
தரம்பெறுந் தோழர்க் கெல்லா மினியவை சாற்று வாரால்.
3.15.64
761 மதுரமென் கனிக்குஞ் சீர்த்தி வாளலி தமக்கு மேன்மை
முதலவன் மணநிக் காகு முடித்தன னதனை யெந்தப்
பதியினுஞ் சிறப்பு வாய்ப்பப் பற்றல ரொடுங்க மேலு
மிதமுற வியற்றற் கேற்ற யாவையு மியற்று மென்றார்.
3.15.65
762 பேறுய ராதி யாலி லாஞ்சனை பெற்ற சிங்கங்
கூறிய வசனங் கேட்டுக் கொற்றவ ருவகை யெய்தி
மாறிலா வளமை யோங்கு மதீனமா நகரை யின்னே
வீறுயர் சிறப்புச் செய்ய முறையனை விளிமி னென்றார்.
3.15.66
763- வேறு
குழுவின் மன்னவர் விளித்தன ரெனக்குறித் தெழுந்து
தொழுது நின்றெவை பணியென வலிமணந் துலங்க
முழுது மிந்நக ரறிந்திட மணமுர சறைக
வெழுக வென்றலு மெழுந்தனர் கடிமுர சினரே.
3.15.67
764 கடிகொள் வெண்சுதை சோகங்கள் கவினுறத் தடவி
நெடிய சுந்தரத் தினின்மலர் மாலைக ணிரப்பி
யிடியின் மிக்கதிர் முரசுக ளெடுத்தெடுத் தேற்றிப்
படிய ளந்திடுந் தெருத்தலை தொறுந்தொறும் படர்ந்தார்.
3.15.68
765 எடுத்த பேரொலி முரசொடு மொட்டகத் திருந்து
பிடித்த நன்மறைத் தீனொடு பெருந்துனி யாவு
முடித்த நல்வழித் தொழுகையின் விழிவழி முயன்று
தொடுத்து நாடொறும் வாழ்கவென் றினையன துதித்தே.
3.15.69
766 இறைய வன்றிருப் புலிக்குநந் நபியிளங் கொடிக்கு
மறுவி லாத்திரு மங்கலச் சோபன வசனஞ்
செறியும் பேரெழி றதும்பிய திருநகர் மதீனத்
தறிவ ராடவ ரியாவரு மறிகவென் றறைவார்.
3.15.70
767 கனந்த ருங்கொடை முகம்மதைக் கவினலிப் புலியைச்
சினந்த வேல்விழி பாத்திமா வெனுஞ்செழுங் குயிலை
நினைந்த கவ்வைக ளெவ்வையுந் தனிநிறை வேற
மனந்த னிற்றினம் புகழொடு முவப்புவைத் திடுமின்.
3.15.71
768 சுருதி நேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின்
வரிசை நன்னினை வொடும்சதக் காவழங் கிடுமின்
பெருகு நல்லறி வினர்துஆப் பேறுகள் பெறுமின்
றரையின் மீதுற வாழ்ந்துச லாமத்தும் பெறுமின்.
3.15.72
769 அருவி நன்னதி யாடிநல் லாடைக ளுடுமின்
புரிகு ழற்ககில் புகைத்துவெண் புதுமலர் புனைமின்
சொரிக திர்ப்பணி பலகளத் திடைசுமத் திடுமின்
விரைசெய் சந்தனங் குங்குமக் கலவைமெய்க் கிடுமின்.
3.15.73
770 இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமி
னலங்கொ ளாடைவி மானங்க டோ ரண நடுமின்
விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின்
பொலன்கொ ணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின்.
3.15.74
771 மதுர முக்கனி தேனெய்பா றயிரொடும் வழங்கிப்
புதுவி ருந்தினர்க கிடுமின்க ளெனப்பல போற்றி
முதிரு நன்னகர்த் தெருத்தொறு முகிலிடை முழங்கி
யதிரும் பேரொலி யிடியெனக் கடிமுர சறைந்தார்.
3.15.75
772 முரச றைந்துவள் ளுவர்தெருத் தலைதொறு மொழிந்த
வுரைசெ விப்புக நகரவர் பலருமுள் ளுவந்து
வரைசெய் மாடமுங் கூடமு மனைகளு மறுகும்
விரைசெ யும்படி புதுக்கிடத் துணிந்தனர் விரைவின்.
3.15.76
773 பொழிந்த பொற்பொறிச் சுணங்கலர் பூண்முலைக் கணிந்து
வழிந்த சந்தமுங் கூந்தலிற் கழித்தெறி மலரு
மழுந்து கூடலி லூடலிற் களைந்தபொன் னணியு
மெழுந்து கட்பட லந்தர வாரிநின் றெறிவார்.
3.15.77
774 சிறுது ளைக்கதிர்ப் பொற்பல கணிநிரை செறிந்து
பிறையு மங்குலு முடுக்களுஞ் செருகிடப் பிணங்கி
நிறையு நெற்றிய மாடமு நிவந்தமே னிலையுந்
துறும வூட்டகிற் பழம்புகைக் களங்கறத் துடைப்பார்.
3.15.78
775 தெரிந்த வெண்மணி நீற்றினைக் கரைத்தறத் தெளித்துப்
பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்றுப் பதைப்ப
விரிந்த பூங்குழ லார்கள்கண் ணாடியின் விளங்க
விருந்த வாய்தொறு முருத்தெரி தரமெழுக் கிடுவார்.
3.15.79
776 மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின்
பிறங்கி நீடரு கலைகளு மோரிடம் பிரியா
தறங்கி டந்தநன் னகர்மதி டொறுமணி யணியா
யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார்.
3.15.80
777 நெருங்கிச் சேந்தமென் விரலெனத் தளிர்களு நீண்ட
கருங்கண் போற்செழுங் குவளையு முககம லழும்போன்
றொருங்கு பூத்தசெவ் வாயென வாம்பலு மொசியு
மருங்குல் போற்சிறு கொடிகளு மெழுதுவர் மடவார்.
3.15.81
778 சந்த னத்திர டருக்களை கவையுறத் தறித்துப்
பந்தி பந்தியி னிறுவியொள் ளகில்வளை பரப்பிச்
சிந்து வெண்கதி ரிரசிதக் கிடுகுகள் செறித்து
மந்த மாருத முலவிடக் காவணம் வகுப்பார்.
3.15.82
779 கழிக ளிற்பொதிந் தகுமது நபிதிருக் கலிமா
வெழுது சித்திரப் பொற்கொடி யணிநிரைத் திடுவார்
வழுவி லாதபொன் மலையின்வி மானங்கள் வகுப்பார்
பொழுது போம்வழி யில்லெனத் தோரணம் புனைவார்.
3.15.83
780 கதிர்ம ணிக்கரும் பிளங்கமு கருங்கனிக் கதலி
பதிக மாதளை தாழைமுட் புறக்கனிப் பனசம்
விதிரு மென்றளிர் மாச்செழும் பழக்கொழு விஞ்சி
மதுர மூறிய கனியொடுந் தூண்டொறும் வனைவார்.
3.15.84
781 பிரச மூறிய பன்மலர்த் தொகுதியின் பிறங்கி
விரிக திர்ப்பல திரண்மணி வடத்தினும் விலையி
னரிய பொன்னிழைத் துகிலுனும் பல்பல வணியாய்த்
திருந கர்ப்புற மெங்கணு மியற்றினர் சிறப்ப.
3.15.85
782 பூந்து ணர்ப்பசுங் காயொடும் பழத்தினைப் பூகஞ்
சேர்ந்த பந்தரிற் றென்றலி னுதிர்ப்பன திரட்டி
வாய்ந்த பொன்னையு மரகத மணியையும் வாரி
யீந்த மேலவர் போன்றன வீதிக ளெங்கும்.
3.15.86
783 அரத்த வாடையின் பசியமென் றுகிறொடுத் தணியா
நிரைத்தி ருப்பது மாமணித் தூண்டொறு நெடுவான்
றரித்த கொண்டலி னிடம்விடுத் திந்திர சாபம்
விரித்த பந்தரிற் புகுந்திருந் தெனப்பல விளங்கும்.
3.15.87
784 வெடித்த தாமரை மலரொடும் விரிந்தவெண் டாழைத்
தொடுத்துப் பந்தரிற் றுயல்வரத் தூக்கிய தோற்றம்
வடித்த நன்னறை யல்லியை யிதழொடும் வாயி
னெடுத்து மென்சிறை யெகினங்கள் படர்ந்தென விருந்த.
3.15.88
785 வேரி யஞ்செழு மலர்களுந் தளிர்களும் விளங்கச்
சாரு நன்கதிர்ப் பன்மணிக் குலங்களுந் தயங்கக்
கூரு மாந்தர்தம் மனத்தினி னினைத்தவை கொடுப்பப்
பாரிற் கற்பக வனைத்தையொத் திருந்தன பந்தர்.
3.15.89
786 தரள மாமணி யரும்பின மீன்றுதா ரணியின்
பரிவு பெற்றிடும் பொன்னிதழ்ப் பன்மலர் பூத்து
மரக தச்செழு மணித்திரட் காய்க்குலை வளர்த்துப்
புருட ராகங்கள் பழுத்தன போன்றன பந்தர்.
3.15.90
787- வேறு
காத்திர முசல நீள்கைக் கடகரிக் குலமு மாவும்
பூத்துணர் பொதுளு மாந்தர்த் தொகுதியு மெதிரிற் போதலல்
வாய்த்தமெல் லிழையார் தீற்று மணியொளி மறுகு தோறுஞ்
சூத்திரப் பாவை போன்றும் வயின்வயின் றுலங்கு மன்றே.
3.15.91
788 புதுமலர்த் தார்க ணாற்றிப் பூந்துகிற் கொடிகள் சேர்த்திக்
கதிர்மணி குயிற்றிக் கும்பக் கனகமா மகுடஞ் சூட்டி
விதிரிள நிலவு கான்ற மேனிலை மாட மியாவும்
வதுவையின் புதுமை நோக்க மலைகள்வந் திருந்த தொத்த.
3.15.92
789 சீதசந் திந்து காந்த நீரினிற் றேய்வை பன்னீ
ராதிமான் மதங்கற் பூர மளறெழக் கலக்கி வாரி
வீதியு மதிளு மாட வாயிலுந் தெளித்து வீசக்
கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம்.
3.15.93
790- வேறு
சொரிந்த பூங்குழன் மதிநுதற் கயல்விழித் துவர்வாய்
முரிந்த தோவெனு மருங்கினர் முருகுகொப் பிளிப்ப
விரிந்த சந்தகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கிப்
பரந்து போர்வையின் மூடின நீள்பெரும் பதியை.
3.15.94
791 அங்க ராகமும் வரியளி மலரிடை யறுகாற்
றங்கி வீழ்தரு துகளுங்குங் குமச்செழுந் தாது
மெங்க ணும்பரந் திருநிலந் தெரிகிலா திருத்தல்
பொங்கு பொன்னிலம் வதுவையிற் சமைத்தன போலும்.
3.15.95
792 குதித்த தேன்குழன் மடந்தைய ராடவர் குழுமிப்
பதித்தெ ருத்தொறுங் கலவையிற் சேறுகள் படுத்தி
விதித்த காரண வதுவையின் மணவிதை விதைத்து
மதித்தி டும்பெருஞ் சிறப்பெனும் பயிரினை வளர்த்தார்.
3.15.96
793 சிந்து செங்கதிர் மணிதெளித் தொழுதுசித் திரத்தின்
கந்த மான்மதங் கமழ்தலின் கதலிகை வனத்தின்
விந்தை விந்தைசெய் தோரணத் தொகுதியின் வியப்பி
னந்த மானக ரல்லன போன்றிருந் ததுவே.
3.15.97
794 மின்னி னந்திரு வில்லொடு முகிலொடும் விரைவிற்
பொன்னந் தாமரை வாவியிற் புகுந்தெனப் புகுந்து
மன்னு விற்புரு வக்கருங் குழற்கொடி மருங்கா
ரின்ன லந்தர மூழ்குவ ராடுவ ரெங்கும்.
3.15.98
795 இலகு பொன்னொடு வெள்ளிவெண் பானைக ளேற்றி
நிலவு கான்றெனும் பாலினில் வாலரி நிறைத்திவ்
வுலகி னூன்முறை யடுதொழிற் புதுமண மூட்டி
யலகி லாப்பெரு நகர்தொறு மமலைக ளடுவார்.
3.15.99
796 கனியி னுஞ்செழுங் காயினும் பூவினுங் கலவாப்
புனித நெய்யினில் வெண்மலர்க் கரியபூங் குழலார்
சுனித மாகிநற் பாகொடு மறுசுவை தூங்க
வினிமை கூர்தர மணத்தொடுங் கறிசமைத் திடுவார்.
3.15.100
797 தேன வாந்தொடை மடந்தையர் குழலினுஞ் செருகி
நான மார்புய மாந்தர்க ணாசியு மமட்டித்
தான மானக மேனிலை யாவையுந் தடவி
வான மீதினுங் கமழ்த்தின பொரிக்கறி வாசம்.
3.15.101
798 நனிவி ருந்தினர்க் கன்புட னெதிர்நடந் தழைத்துப்
பனிம லர்ச்செழும் பாயலி னிருத்திமெய் பணிந்து
மினுமி னென்றமுப் பழத்தினைத் தேனொடும் விரவி
யினிதி னூட்டுவர் வலிதினி லடிக்கடி யெவரும்.
3.15.102
799 உலவு பூம்புகை பொற்குடங் கமழ்தர வூட்டிச்
சொலவ ருந்தடத் தெளிதரு புதுப்புனல் சொரிந்து
பொலனி றத்தகுங் குமமுதன் முடிந்ததிற் புகட்டி
யிலகு வீதியின் முன்றில்க டொறுநிரைத் திடுவார்.
3.15.103
800 மருங்குன் மின்னுக்கு மின்னுபொன் னிழைத்துகில் வனைவார்
நெருங்கு பூண்முலை மலையின் மலைவுற நிரைப்பார்
கருங்கு ழற்கருங் குங்குமக் கண்ணிகள் புனைவா
ரருங்க ரங்களி லரங்கொளுங் குருகெடுத் தணிவார்.
3.15.104
801 மாவ ருக்கையிக் கரம்பைபூங் கமுகுடன் வனைந்த
காவ கத்திடை மயிலெனக் குயின்மொழிக் கனிவாய்ப்
பூவை யன்னவர் கலவையும் பரிமளப் பொடியுந்
தாவ வெற்றுவ ரொருவருக் கொருவரைச் சருவி.
3.15.105
802 விரிசி கைக்கதிர் மணிவெயி லெறித்திட விடுபூச்
சொருகு கூந்தலின் மாலைக டுயல்வரத் துடிபோ
லருகு நுண்ணிடை யொடிந்திடு மெனும்படிக் கசையத்
திருகு ரும்பைக ளாடுவர் வயின்வயின் சிறப்ப.
3.15.106
803 பாடு வார்சிலர் குயிலெனப் பாடலுக் கெதிரி
னாடு வார்சிலர் மயிலென வாடலுக் கழகாய்க்
கூடு வார்சிலர் கிளியெனக் கூடலின் குறிகண்
மூடு வார்சிலர் விரிதருங் கமலமென் முகத்தார்.
3.15.107
804 பூசு வார்சிலர் கலவையிற் புதுவிரை கலக்கி
வீசு வார்சிலர் வீசலின் மெய்வழி வழியக்
கூசு வார்சிலர் கூசுவ தென்னெனக் குழைந்து
பேசு வார்சிலர் சிறுநுதற் பெரியகண் மடவார்.
3.15.108
805 பொருவி லாநக ராடவ ரரிவையர் போற்ற
மரும லர்ப்புய முகம்மதை யலிதமை வாழ்த்திக்
கருத லர்க்கரி யேறெனுங் காளையர் கூடித்
தெருவெ லாமணப் பைத்துகள் சொலிச்சொலித் திரிவார்.
3.15.109
806 புகரி னன்னிரி யாசங்கண் முதலிய புகைத்துப்
பகரு நன்மறை முதியவர் பலபல திரளா
நகர மெங்கணும் வேதங்க ளோதிய நாத
மகர வாருதி திரையொலிக் கலிப்பினை மலைக்கும்.
3.15.110
807 கலிக்கு மாமறை முதல்வனிக் காகினைக் கருதி
யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழச்
சிலைக்கை வீரர்க ணகரத்தி னியற்றிய சிறப்பை
யொலிக்கு மாகடற் புவியினி லெவரெடுத் துரைப்பார்?
3.15.111
808- வேறு
மரைமல ரெகின மிரவியின் சிரசின்
- மதிவதிந் தெனத்தனி வயங்கத்
திரைமணி கொழிக்கும் வாவிசூழ் மதீனத்
- திருநகர் சிறப்பியற் றியபின்
றருவெனு நபியு மூவரும் பெருகு
- சதுமறைத் தலைவருந் திரண்டு
வரியளி முரலுஞ் செழுந்தொடைத் திரடோ ண்
- மன்னவ ரலிமனை புகுந்தார்.
3.15.112
809 எரிகதிர் வனச மணிபதித் திழைத்த
- விரணியக் கடத்தினி லெடுத்து
முருகலர் நறையூற் றிருந்தண் ணீரை
- மறையிய முழக்கொடு முதியோர்
மரகதப் பலகை நடுவுறை வயிர
- மடங்கலே றலிதமை வாழ்த்திச்
செருகிய நீலக் கதிர்குடி யிருந்த
- சென்னியிற் சொரிந்தன ரன்றே.
3.15.113
810 வெள்ளைமென் றுகிலாற் சிரசிடம் புலர்த்தி
- வில்லுமிழ் மெய்யினும் விளக்கித்
தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுக்
- செய்தெனுந் துகிலிடைக் சேர்த்திக்
கொள்ளைவெண் டரளங் குவித்தென வீரம்
- புகழொடுங் குடியிருந் தென்ன
வொள்ளிய சவிக டிரண்டெனச் சருவந்
- தொளிதரச் சென்னியிற் றரித்தார்.
3.15.114
811 பேரெழிற் பயிரில் வனமுலை மடவார்
- கண்ணெனு மானினப் பெருக்கம்
பாரினிற் புகுதா வேலியி னமைத்த
- படிகொலோ மரைமலர்ச் செழுங்கண்
வீரவெண் மடங்கன் மரகத வளையுட்
- புகுந்ததோ வெனத்திறல் வியப்ப
வேரணிந் திலங்கும் பசியகுப் பாய
- மெடுத்தினி தணிந்திடுஞ் சிறப்பே.
3.15.115
812 மண்ணினிற் குபிரர் குலங்கரு வறுத்து
- வருமுயிர்ச் சுவையினை யறிய
வெண்ணிலா விடப்பன் னாகத்தி னாப்போ
- லியற்றிய விருபகுப் புடைவா
ளண்ணலார் மருங்கி லெழிறர விருத்தி
- யணிமணி யுதரபந் தனமும்
விண்ணிலாக் கதிரின் கச்சின்மேற் படுத்தி
- விசித்தனர் திறல்வய வீரர்.
3.15.116
813 மரகத வரையிற் சந்தொடு மருவி
- வந்ததோ வளைந்தபைங் கடலிற்
றிரைகொலோ வணிந்த சருவந்து கான்ற
- செவ்விகள் வழிந்தொழு கியதோ
பொருவிலா வரிசைப் புலியலி மணத்திற்
- போர்த்திடும் பசியகஞ் சுகியிற்
றரளவெண் மணியி னிரைநிரை வடங்க
- டயங்கொளி தரவணிந் ததுவே.
3.15.117
814 வண்ணவொண் புயப்பைங் கஞ்சுகி யிடத்தின்
- வான்மணித் தரளமா லிகையின்
வெண்ணறை மலர்மா லிகைபு னைந்தரிய
- மான்மதம் விதிர்த்திடுந் தோற்றந்
தண்ணறும் பசுங்கற் பகமல ரிடையிற்
- சாலிக டுளித்திடத் ததைந்து
பண்ணிசை மிழற்று ஞிமிறின மிருந்த
- பான்மையொத் திருந்தன மாதோ.
3.15.118
815 அம்புய மலரிற் சேந்துசெவ் வரியார்ந்
- தருளுடை கிடந்தகட் கடையின்
வம்பவிழ் சுறுமா வுரைத்தமை யெழுதி
- மணிவடங் கிடந்தபொன் மார்பிற்
கொம்பலர் மரவஞ் சந்தொடுங் குழைத்துக்
- குளிர்தரத் திமிர்ந்துகை விரலிற்
பம்பிய திரைவா ருதியினிற் பிறந்த
- பருமணி யாழியுஞ் செறித்தார்.
3.15.119
816 அலங்கரித் தயினி சுழற்றிநூ லவர்கட்
- கருநிதி மணியொடும் வழங்கி
யிலங்கிழை மடவா ரடைப்பைக்கோ டிகஞ்சாந்
- திருமருங் கினுமெடுத் தேந்தத்
துலங்கிய கவரி வெண்ணிலா வெறியச்
- சுருதிவல் லவர்துஆ விரப்ப
நலங்கிளர் தீன்தீன் முகம்மதென் றேத்த
- நார்புலி யலியெழுந் தனரால்.
3.15.120
817 மலரணைப் படுத்த துகிலின்மே னடந்து
- வானவர் மகளிரேத் தெடுப்பச்
சிலைவல ரபித்தா லிபுமனைக் குரிய
- திருநபி தமைவளர்த் துவந்து
பலனுறும் பாத்தி மாவெனு மடமா
- னிருவிழிப் பாவைகண் களிப்ப
விலகிய மடவார் குரவைக ளியம்ப
- வெழிலலி வாசிமேற் கொண்டார்.
3.15.121
818 பேரிகை திமிலைக் குடப்பறை தடாரிப்
- பீலியார் திண்டிம முரசோர்
பாரிசப் பதலை யிடக்கைதட் டியநீள்
- பண்வம்வா ரணிதட மொந்தை
பூரிகை நவுரி காகளஞ் சின்னம்
- போர்வயிர் கொம்புகைத் தாளம்
வாரியு மலைப்பப் பேரிடி மயங்க
- மண்ணதிர் தரமுழங் கினவால்.
3.15.122
819 பரிதியின் கதிரான் மதியையேந் தினபோற்
- பவளக்கால் வெண்குடை நிழற்றத்
திரடருந் துவசம் வெளியறச் செருகச்
- செம்மணித் துகில்செயா லவட்ட
மிருபுற நெருங்க விசிறிசாந் தாற்றி
- யிரைகடற் ரிரையென மலிய
வருபடை நாப்ப ணெறிந்தபா வாடை
- வானமின் னெனத்திசை மலிய.
3.15.123
820 வரையிழி யருவி யெனக்கவுட் கரட
- மதங்கரைத் திருபுறம் வழிய
வெரிமணி வயிரக் கிம்புரிப் பெருங்கோ
- டிணைவளைப் பிறையினு மிலங்கத்
திரள்பனை நெடுங்கைத் துளைவழித் திவலை
- தெருத்திசை மழையெனச் சிதறக்
கருவுடை மயிர்வாய்ப் பிடிக்கணந் தழுவிக்
- கடகரிக் குலநெருங் கினவால்.
3.15.124
821 மாருத மலைக்கும் விசையின விருபான்
- மலிந்தபக் கரையின வதிரப்
பாரினை யுடைக்குங் குளம்பின பொற்பூப்
- பலநிரை கேசபந் தியின
போரடர் சீரா வணியின பாகர்
- புந்தியி னமைந்தன பதினெண்
சாரிகை நடனப் புரவியின் கணங்க
- ளெண்ணில தலைமயங் கினவே.
3.15.125
822 மணிக்கண நிரைத்து வைத்திடுங் குடுமி
- வானகத் திரவியின் மிளிரப்
பிணித்தபொற் காந்தி யுமிழ்தருங் கொடிகள்
- பெருந்துகட் படலங்க டுடைப்பப்
பணித்தலை நெளியத் தரைத்தலங் குழியப்
- பரியொடுந் திசைபறப் பனபோற்
கணித்துரைக் கடங்காத் தெருத்தலை நெருங்கக்
- கலித்தகோ லாரிவண் டில்களே.
3.15.126
823 பத்தியி னெடும்பொற் சட்டக மமைத்துப்
- பருவயி ரம்பல பதித்து
முத்தணி நிரைத்துத் துகிர்மணிச் சிறுகான்
- முறைபட நிறுவிப்பைங் கதிரார்
சித்திரப் படமேல் விரித்தணி யலர்கள்
- செறிதர மாலைக ணாற்றி
வைத்தபொற் சிவிகை பலபல மருங்குஞ்
- சிறந்திட வீதியின் மலிந்த.
3.15.127
824 வடிநற வருந்தி வரியளி சிலம்பு
- மலர்தொடைப் புயத்தபூ பக்க
ருடனும றெனும்பே ரடலரி யேறு
- முலம்பொரு தோளுது மானுங்
கடமலை கடவி நிலம்பிதிர்த் தெறியுங்
- கவனவாம் பரிகளிற் கவினா
ரிடுகொடை கவிப்பக் குழாத்தொடு மலித
- மிருபுடை யினுஞ்செறித் தனரால்.
3.15.128
825 இயன்மறை நபித மவயவ மெனலா
- யின்புறு முஹாஜிரீ னென்னும்
பெயர்களு மன்சா ரிகளெனும் வரிசைப்
- பேறுடைத் தலைவர்மன் னவரும்
வயவரிக் குழுவுங் கொடுவரித் திரளு
- மலிந்தெனத் தெருமிசை மலிந்து
முயலகன் மதியின் குடையொடு கொடியு
- மொய்த்திடச் செறிந்த ரன்றே.
3.15.129
826 கருதல ருயிருண் டூன்மறா நெடுவேற்
- காவல ரொருபுற நெருங்கப்
பரிசையு மேக மின்னென வொளிரும்
- பட்டையத் தவரொரு மருங்கும்
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு
- நெடுங்கடல் படர்ந்தெனப் பரக்க
வரசருஞ் சூழ வலியெனு மரியே
- றாடலம் பரிநடத் தினரால்.
3.15.130
827 ஆரணக் கிழவர் பேருடைத் தலைவ
- ராடவர் காளையர் சிறுவர்
வாரணி களபக் குவிமுலைக் கதிர்ப்பூண்
- மங்கைய ரவரினின் முதியோ
ரூரினி லிருந்த நாற்குலத் தவர்மே
- லுரிமையர் தொழும்பினுள் ளவருங்
காரணக் குரிசி லலிவரும் பவனிக்
- கடலிடைக் கடலெனக் கலந்தார்.
3.15.131
828- வேறு
பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக்
கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர்முலைப் பணிகண் மின்னப்
புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர
மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார்.
3.15.132
829 ஆடலம் பரிக்கு வேந்த ரலிவரும் பவனி வேலை
யூடுறை யமுதந் தானோ வமுதத்தின் வேர்விட் டோ டிக்
கூடுறும் பவளச் செவ்விக் கொடிக்கிளைத் ததுவோ வென்ன
வேடவிழ் மலர்ப்பூங் கூந்த லிங்கிழை யவர்கண் மொய்த்தார்.
3.15.133
830 கண்ணெனுங் கயல்க டாவக் களமெனுஞ் சங்க மார்ப்ப
வெண்ணகைத் தரள நக்க விரிஇதழ்ப் பவள மின்ன
வொண்ணிறப் பசலை கால வொளிர்நுரை மாலை சிந்தப்
பெண்ணெனுங் கடலந் தானை யிடனறப் பெருகிற் றன்றே.
3.15.134
831 சவிவிரற் றளிர்க ளீன்று தண்ணகை யரும்பு பம்பித்
திவளொளி வதனம் பூத்துத் தேனளி முரல மாதர்
குவிபெருந் தானை நாப்பண் கூண்டவை யலியென் றோதும்
பவனியின் றருவை நோக்கிப் பலகொடி படர்ந்த தொத்த.
3.15.135
832 நிறைமணி குயிற்றும் பொன்மே னிலைவயி னெருங்கு மாத
ரறைசிலம் பலம்பச் செஞ்சீ றடிநிலந் தோயா தாலு
நறைமலர் புலரா தாலு நாட்டங்க ளிமையா தாலு
மறைமுத லவன்பொன் னாட்டு மங்கையர் போல நின்றார்.
3.15.136
833 முறைமையி னணிய நின்றார் வதுவையின் முழக்கங் கேட்டுப்
பொறைபொரு தனத்திற் சூட்டும் பொன்னணி யொருகை யேந்திக்
கறையளி முரலுங் கூந்தற் கண்ணியோர் கையி லேந்தித்
திறையிடு பவர்கள் போலச் சிலர்தெருத் தலையின் வந்தார்.
3.15.137
834 அல்லெனுங் கூந்தல் கையா லடிக்கடி முடித்து வாய்த்த
தில்லென மறுத்து நெற்றித் திலகந்தொட் டியற்றும் போழ்திற்
கல்லெனு மோதை கேட்டுக் கடுப்பினிற் கைக்கண் ணாடி
யொல்லையி னெறிந்து நாணிச் சிலரொளித் தொருங்கு நின்றார்.
3.15.138
835 விள்ளருஞ் செக்கர் வான்போல் விரிதருங் கலைகள் வீக்கித்
தெள்ளுசெஞ் சாந்தும் பூசிச் செம்மணிக் கலன்க டாங்கி
வள்ளறன் னழகைக் கண்ணாற் பருகிய மாத ராகத்
துள்ளுறுங் காமத் தீமே லொளிர்வது போல நின்றார்.
3.15.139
836 கடற்பெருஞ் சேனை சூழக் கடகரி மலைக ணாப்பண்
சுடர்க்கதி ரவனை யொப்பத் தோன்றிய வலிதருஞ் செவ்வித்
தடப்புதுப் புனலி னஞ்சந் தரும்விழிக் கயல்கள் போக்கி
யெடுத்தணி வளையும் வீழ்த்திச் சிலரிட ரிடைப்பட் டாரால்.
3.15.140
837 சிற்றிடை யொசியப் சோதிச் சிறுநுதல் வெயர்ப்ப வாய்ந்த
முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப
வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து
பொற்றொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார்.
3.15.141
838 மாயிரு ஞாலம் போற்று மன்னபித் தாலி பீன்ற
சேயலி மெய்யின் வாய்ந்த திருவடி வழகை நோக்கிப்
பாயரிக் கருங்கட் செவ்வாய்ப் பாவையீ ரிமையா நாட்டத்
தாயிரங் கண்கள் வேணு மெனெச்சில ரறிவிற் சொல்வார்.
3.15.142
839 குவிதருங் கடலந் தானைக் குபிர்க்கட லுடைக்கத் தோன்று
மவிர்கதிர் வடிவாட் செங்கை யலிதிரு மணமென் றோதுங்
கவினுறுங் கனக நாட்டுக் காட்சியைப் பாத்தி மாவா
லவனியின் மாந்தர் காண வரும்பலன் கிடைத்த தென்பார்.
3.15.143
840 வரமுறுஞ் சுவன மாதர் மலரடி பரவிப் போற்ற
வரசுவீற் றிருக்குஞ் செவ்வி யணிவிழா காணப் பெற்றோங்
கருமுகிற் கவிகை வள்ளல் கனகநா டதனி னாளை
வருபவ னியுமியாங் காண்போ மெனச்சிலர் மவுலு வாரால்.
3.15.144
841 பேரொளி யழகு வாய்ந்த பெண்ணினை மணப்பப் பூவி
னாரெழி லவரென் றெண்ணி யிருந்தன மிவரை நோக்கின்
சீரணி பெறுமம் மங்கைச் செவ்விக்குச் செவ்வித் தூயோன்
பாரிலெண் மடங்க தாகப் படைத்தனன் காணு மென்பார்.
3.15.145
842 அருமறை மணத்த வாயு மருளடை கிடந்த கண்ணுந்
திருமதி முகமு நீண்ட திரண்மணி வயிரத் தோளுந்
தருவெனச் சிவந்த கையுந் தாமரைத் தாளும் வாய்ப்பப்
பெருகிய வழகை யெல்லா மொருத்தியோ பெறுவ ளென்பார்.
3.15.146
843 வீதியி னழகோ வந்த வேந்தர்கோ னழகோ சூழ்ந்த
மாதவ ரழகோ யாது பெரிதென மதித்துச் சொல்வா
ராதிதன் றூத ரீன்ற வரிவைதம் மணத்தின் கோலம்
பேதமொன் றின்றிக் காணப் பெற்றதே யழகென் பாரால்.
3.15.147
844 எயிறுக ணிறையா மார்பி னிளமுலை முளையாக் கண்க
ளயிலென வரிகள் சேரா வளகமு முடியிற் கூடா
தொயில்வரை மெய்யிற் பூழ்தி பூத்ததுந் துடையாக் காமப்
பயிரெனத் தோன்றும் பேதைப் பருவத்தி னொருத்தி வந்தாள்.
3.15.148
845 கனைகடற் படையு நீண்ட கவிகையுங் கொடியுஞ் சூழ்ந்த
வனைகழ லரசர் நாப்பண் வருந்திற லலியு நோக்கிப்
புனைமணிப் பரியின் மீது புரவல ரிடத்திற் கூட
வெனையும்வைத் திடுமி னென்ன விருவிழி பிசைந்து நின்றாள்.
3.15.149
846 ககனமும் புவியும் போற்றுங் காவலன் புலியைச் செவ்வி
யகுமதின் மருக ரான அலியெனு மரசை யாக
மகிழ்வுறப் பரித்தல் செய்யும் வாசிமே லிருத்த னம்மாற்
றகுவதன் றென்று சாற்றித் தாயர்க ளணைத்துப் போனார்.
3.15.150
847 கரும்பெனு மொழியா ளாசைக் கவின்முளைத் தென்னத் தோட்டுட்
குரும்பையின் முலையாண் மாயங் கொலைகள வென்ப சற்றே
யரும்பிய விழியைப் போலு மகத்தின ளமலை மாறாப்
பெரும்படைப் பவனி நோக்கிப் பெதும்பையென் றொருத்தி வந்தாள்.
3.15.151
848 பருந்தெழுங் கதிர்வாள் வள்ளற் பதுமமென் முகத்தை நோக்கிக்
கருந்தடங் கண்ணு நெஞ்சுங் களிப்புற நாணின் மூடித்
தெரிந்தொரு வடத்தை யேந்திச் சேவகர் மார்பிற் பூட்டி
யிருந்ததி லிவையும் பூட்டென் றொருத்தியோ டிசைத்து நின்றாள்.
3.15.152
849 புத்தமு துகளும் வாயும் புதுமதி முகமுஞ் சேர்ந்த
கொத்தலர்க் குழலுஞ் செம்பொற் குவிமுலைச் சுணங்கு நூலி
னெய்த்தசிற் றிடையுங் காந்தி வளைநிரைத் தெடுத்த கையின்
வைத்தொரு கிளியு மேந்தி மங்கைய ளொருத்தி வந்தாள்.
3.15.153
850 வள்ளறன் வதன நோக்கி மதிமயக் குற்றுக் காம
முள்ளுறுந் தீயான் முத்தஞ் சுடச்சுட வொருங்கு சிந்திக்
கள்ளவிழ் கோதை நல்லீர் கதிர்மணி முத்த மென்ப
தெள்ளள வெனினும் பூணா தெறிமின்க ளெறிமி னென்றாள்.
3.15.154
851 வாரறுத் தெழுந்து வீங்கும் வனமுலைப் பூணுஞ் சாந்துங்
கூரயில் பொருது நீண்ட கொடிவரி விழியின் மையுங்
காரெனத் திரண்ட கூந்தற் காட்டினில் வரிவண் டார்ப்பப்
பேரணி மடந்தை யென்னுங் பெண்கொடி யொருத்தி வந்தாள்.
3.15.155
852 வாங்குவிற் றடக்கை வேந்தர் வாளலி வதன நோக்கிப்
பூங்கொடி வருந்தி நெஞ்சத் தறிவெலாந் துயரம் போர்ப்பக்
கோங்கிள முலையின் செம்பொற் கொடியென வென்னைச் சூழ்ந்த
பாங்கிய ரெங்கே யென்னப் பாங்கியர் தம்மைக் கேட்டாள்.
3.15.156
853 காழ்த்தடக் களிறு சூழ வந்தகா வலரை நோக்கி
வீழ்த்தன ளறிவை நாண விருப்பினான் மெல்ல மெல்ல
வீழத்தனள் வாரா தாலோ வென்னையோ பாலிற் சூழ்ந்து
வாழ்த்திநின் றவரை யெல்லாம் வைதுகொண் டரிவை நின்றாள்.
3.15.157
854 பெரும்படைத் தலைவர் சூழ வரும்பிரான் வதன நோக்கி
யரும்பிய துயர வெள்ள மடிக்கடிப் பெருக லாலே
வரம்பெறு நாணும் போக்கி மதிமயக் குற்றிவ் வள்ளற்
றிரும்பலிற் சொல்வே னென்னச் சினந்தொரு தெரிவை போனாள்.
3.15.158
855 குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைக டதும்ப வந்து
மலிதருந் தொடையல் சிந்த வடகங்க டுயல நோக்கி
யலியினைச் சேரா மாத ரலியென விருத்த னன்றென்
றொலிதர வுரைத்துச் செவ்வி யொழுகுபே ரிளம்பெண் போனாள்.
3.15.159
856 எய்த்தநுண் ளிடையீர் வேந்த ரேறலி யகலா தென்றன்
மைத்தடங் கண்ணு ளானார் மறுகினின் மறுகி நீவிர்
கொத்தலர் தூற்றி வாழ்த்திக் கூண்டவை குறிக்கிற் பேதைப்
புத்தியென் றிருகட் கையாற் பொதிந்தொரு பூவை போனாள்.
3.15.160
857 சொரிநிலாக் கவிகை நீழற் சுடரவன் கடுப்பத் தோன்று
மரசகே சரியை நோக்கி யழகெலாம் விழியா லுண்டு
வருதுயர் வெறியின் மீறி வாயிதழ் வெளிறக் கண்சேந்
திருள்குழன் மாலை சோர விதயநொந் தொருத்தி போனாள்.
3.15.161
858 இன்னன மடவார் கூறி யிதயநெக் குருகுங் காலைப்
பின்னிய கொடியும் வீசுங் கவரியும் பிறங்கத் தாங்கும்
பன்னகம் வருந்தத் தூளிப் படலமேழ் கடலுந் தூர்ப்ப
மன்னவ ரலியுல் லாவு மற்றொரு மறுகு சார்ந்தார்.
3.15.162
859 பல்லிய முகிலி னார்ப்பப் பரிக்குழாம் பரந்து பொங்கச்
செல்லுழற் கரடக் கைமாத் தெருத்தொறு மலிய மாறா
நல்லியன் மறையோர் போற்ற நடனவாம் பரியின் மீது
வல்லிய மலியுல் லாவும் வானவர் வாழ்த்தப் போந்தார்.
3.15.163
860 நரர்புலி யலியார் வந்தார் நபிதிரு மருகர் வந்தா
ரரியபித் தாலி பீன்ற வாணினி லழகர் வந்தார்
பரிவலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார்
திருவுலா வென்னப் போற்றித் திருச்சின்ன மியம்பிற் றன்றே.
3.15.164
861 கள்ளவிழ் மரவ மாலைக் காளையர் பலரும் போற்றப்
பள்ளியின் வாயற் புக்கிப் பாத்திஹா வினிதி னோதி
யள்ளிலை வேற்கட் பாத்தி மாவெனு மழகு வாய்ந்த
தெள்ளுதே னமுத மன்னார் திருமணப் பந்தார் வந்தார்.
3.15.165
862 அரம்பொரும் வேற்க ணல்லா ராலத்தி களித்து நிற்பக்
குரவையெம் மருங்குஞ் சூழ்ந்த குரைகட லென்னப் பம்ப
முரசுட னெளரி கொம்பு விண்முக டுடைத்துப் பொங்கப்
புரவல ரலியுல் லாவும் புரவிவிட் டிறங்கி னாரால்.
3.15.166
863 அடிமிசைப் பனிநீர் சிந்தி யம்பொன்மென் றுகிலா னீவ
வடிமறை யவர்கள் வாழ்த்த வானவ ராமீன் கூறக்
கடிமல ரமளி போந்து ஹபீபுகண் களிப்பச் செவ்வி
யிடுசுடர்த் தவிசின் மீதி லலியினி திருந்தா ரன்றே.
3.15.167
864 அலங்கலும் பணியுஞ் சாந்து மாடகத் துயிலு மேந்திச்
சிலம்புகள் சிலம்பப் பைம்பொற் சேயிழை யவர்கள் கூடிக்
கலன்கதி ரெறிப்ப வேதக் காரணர் மனைவி யாகப்
பலன்பெறுங் கதீஜா வீன்ற பாத்திமா விடத்திற் புக்கார்.
3.15.168
865 இறையவன் றூத ரீன்ற விருவிழி மணியைச் சோதி
மறைபடா விளக்கைச் சேணின் வானிடத் துறையா மின்னைக்
கறைபடா மதியை நாளுங் கவின்குடி யிருந்த கொம்பைப்
பொறையென வளர்ந்த கற்பைப் பூம்புன லாட்டி னாரால்.
3.15.169
866 மின்னைவெண் சோதி சுற்றிக் கிடந்தன துகிலை வீக்கிப்
பன்னருங் கருமே கத்தின் வெண்முகிற் படர்ந்த போல
நன்னெடுங் கூந்தற் காட்டி னறும்புகை கமழ வூட்டித்
தென்னுலா மணியின் சோதிச் சீப்பிட்டுச் சிறப்பிட் டாரால்.
3.15.170
867 முகமதிக் கிடைந்து சுற்றி மூதிருட் படல மியாவும்
புகுமிட மிதுவென் றோதும் புரிகுழ லதனிற் சாந்துந்
தகரமும் விரவி வெண்பூத் தனித்தனி சிதறி வாய்ந்த
சிகழிகை முடித்து வாசச் செழுமலர்த் தொடையல் வேய்ந்தார்.
3.15.110
868 நுதற்பிறைக் கதிர்க ளோடி மேகத்தி னுளைந்த தென்னப்
புதுக்கதிர்த் தரளச் சுட்டி புனைந்துமேற் சாத்துஞ் சாத்திக்
கதத்தடற் படைவாள் வள்ளற் கவினறாப் பருக நாளு
மதர்த்தரி படர்ந்த கண்ணின் மையெடுத் தெழுதி னாரால்.
3.15.172
869 மடற்றிகழ் காதிற் செம்பொன் மணிப்பணி நிரையிற் சேர்த்தி
மிடற்றெழில் கவர வந்த மின்னென மிளிர்ந்து தோன்றுஞ்
சுடர்ப்பிறை வடத்தைச் சூடிச் சொரிகதிர் வடங்கள் சேர்த்துக்
கொடிக்கரும் பெழுது தோண்மேற் கொழுமணிக் கோவை சேர்த்தார்.
3.15.173
870 ககனமும் புவியு மில்லாக் கவின்பழுத் தொழுகுங் கையின்
மகிதல முழுதும் விற்கும் வச்சிரக் கடகம் பூட்டிப்
பகிரொளி காந்த ளங்கை விரலெனும் பவளக் கொப்பின்
முகிழலர் பூத்த தென்ன முத்துமோ திரங்க ளிட்டார்.
3.15.174
871 நதிக்கரை கடற்குட் பாரின் விளைந்தநன் மணிக ளெல்லாஞ்
செதுக்கிப்பொன் னிழையிற் கோத்த வடத்தொடுஞ் சேர்வை யாக்கிக்
கதிர்க்கட வுளும்வான் பூத்த கணங்களுஞ் சசியுங் கூடிப்
புதுக்குடி யிருந்த தென்னப் பொருந்துமே கலையுஞ் சேர்த்தார்.
3.15.175
872 வடிநறா வனசப் போது மாவிளந் தளிரு மொவ்வா
வடிமிசை யூட்டும் பஞ்சி னலத்தக மலர்த்தி நாளும்
பிடியின நடையைக் கற்பான் பெட்புறும் பதத்திற் செம்பொற்
சுடர்மணிச் சதங்கை தண்டை பாடகஞ் சூட்டி னாரால்.
3.15.176
873 பொன்னினு மணியி னாலும் பூந்தொடைக் கற்றை யாலு
மின்னினை மறைத்துச் சற்றே வெளியிடை கிடந்த தெல்லாந்
துன்னிய களபச் சேற்றாற் றடவிமெய் துலங்கச் செய்து
கன்னியர் சூழ்ந்து வாழ்த்திக் கண்ணெச்சில் கழித்திட் டாரால்.
3.15.177
874 மரகதச் சுடரைச் சேந்த மாணிக்கக் கொழுந்தைப் பூவிற்
பிரிவுறாப் பொன்னை மின்னைப் பெண்ணலங் கனியை யெய்தாப்
பரகதிப் பேறை வாழ்வை பாத்திமா வென்னு மந்த
வரசிளங் குயிலைப் பூவி னணைமிசை நடத்தி னாரால்.
3.15.178
875 அணிக்கலங் கலவைச் செப்புக் கோடிக மடைப்பை யேந்திப்
பிணைக்கருங் கண்ணார் சூழப் பிறங்குசா மரைக டூங்கக்
கணிப்பிலாத் துஆவு மாமீ னெனுஞ்சொலுங் கடல்போ லார்ப்ப
மணக்கடி முரச மார்ப்ப முகம்மது மகளார் வந்தார்.
3.15.179
876 வந்தபொன் மயிலை யின்ப மறைநபி யென்னும் வள்ளற்
சிந்தையுங் கண்ணு மாரச் செழுங்களி பெருகி யோடச்
சுந்தர வருவி மாறாச் சுடர்வரை யிடத்திற் றோன்ற
வந்தரத் திழிந்த மின்போ லலியிடத் திருத்தி னாரால்.
3.15.180
877 மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல
அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ
ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவ ரெவருஞ் சூழ்ந்து
பலனுற வாழ்த்தி வாழ்த்திப் பாத்திஹா வோதுங் காலை.
3.15.181
878 மெய்யொளி பரப்புஞ் சோதி விரிசிறை யொடுக்கி யார்க்குந்
துய்யவ னருளின் மேன்மை ஜிபுறயீ லென்னுந் தோன்ற
லுய்யுமா நிலத்தின் மாந்தர்க் குற்றதோ ருவகை கொண்டு
வையகம் விளங்குந் தீனின் முகம்மதி னிடத்தில் வந்தார்.
3.15.182
879 தருமுகம் மதுவுக் கின்ப சலாமெடுத் துரைத்து மேலாம்
பொருளெனு மிறையோன் றன்னாற் பொன்னுல கதனி னுற்ற
வரிசையும் வானோர் வாழ்த்து மகிழ்ச்சியின் கூறு லீன்கள்
பெருகுமா னந்தத் துற்ற பெற்றியுங் கூறு வாரால்.
3.15.183
880 இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு
முற்ரினுஞ் சிறப்பித் தன்பாய் முறைமுறை வானோ ரியாரும்
வெற்றிவா லளிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி
சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ.
3.15.184
881 வல்லவ னுரைம றாம லெண்ணில்வா னவர்கள் கூண்டு
சொல்லருஞ் சுவன நாட்டுச் சுடர்மணி மனைக டோ றும்
பல்லவத் துணர்ப்பைங் காவும் வீதியும் பல்பல் கோடி
யெல்லவ னிருந்த தென்ன மணிவிளக் கியற்றி னாரால்.
3.15.185
882 வானவர் மகளி ரெல்லா மணவினைக் கோலஞ் செய்து
தானவன் பெயரின் வண்ணப் பயித்தொடுஞ் சலவாத் தோதிப்
பானமுங் கனியுங் கொண்டு பன்மணி யூச லேறித்
தீனவர் தமையும் வாழ்த்திச் செறிந்தனர் விண்ணி னம்மா.
3.15.186
883 மறைமொழிக் கலிமாத் தீட்டும் வாயின்மா ளிகையி னுள்ளுள்
ளறைதொறுந் திறந்து வன்ன பேதபட் டாடை கோடி
முறைமுறை யெடுத்துத் தேனார் முகிழ்நனை யிருந்த செவ்வி
நறைமலர்த் தொடையும் வாய்ப்ப நன்மணிக் கரத்திற் கொண்டார்.
3.15.187
884 மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹாவென்
றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி
மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாராச்
சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றிநின் றெறிந்திட் டாரால்.
3.15.188
885 புதுநறும் பனிநீர் சந்தம் புழுகுமான் மதங்கற் பூர
மதுவிரிந் தொழுகும் பொற்பூ வானவர் மகளி ரேந்திக்
கதிர்மணிக் கதீஜா வீன்ற கன்னியை யலியைப் போற்றி
விதமுறத் திசைக டோ றுஞ் சிதறினர் விளங்க வன்றே.
3.15.189
886 பெருந்தரு வடியிற் றிட்டி கழித்தெறி பிடவை யெல்லா
மருந்தவ முடைய வள்ள லகுமதே யுமக்கீ மான்கொண்
டிருந்துபின் கணவ ராக வருமவர்க் கீவோ மென்ன
வருந்திலா தமரர் மாத ரெடுத்துவைத் திருக்கின் றாரால்.
3.15.190
887 நறைவிரி கனக நாட்டி னடந்தசோ பனங்க ளீதென்
றறிவுற வானோர் கோமா னுரைத்தன ரதனைக் கேட்டு
மறைநபி களிப்பா நந்த வாருதி தன்னை மூழ்கி
யிறையவன் றன்னைப் போற்றி யாவர்க்கு மியம்பி னாரால்.
3.15.191
888 அருளபூ பக்கர் வெற்றி யடலரி யுமறு கத்தாப்
தெருளுறு முதுமான் மற்றச் செவ்வியோ ரெவருங் கேட்டுப்
பெருகிய புதுமை யென்னப் பேரலி தமையும் பெண்மை
யரசையும் பெரிது வாழ்த்தி யகக்களி பெருகி நின்றார்.
3.15.192
889 முகம்மது நயினார் வாழ்த்த மற்றமன் னவர்கள் வாழ்த்தப்
புகலருங் கற்பின் மிக்க பூவைய ரெவரும் வாழ்த்த
நகுமணிக் கொம்ப னாரு நரர்புலி யலியு மின்ப
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகி னாரால்.
3.15.193
890- வேறு
இருவரு மணவறை புக்கி யின்புறப்
பெருகிய மகிதலத் துறைந்த பேரிருள்
வெருவுறத் திசைதிசை யொளிப்ப வெவ்விய
பருதிவா னவன்கதிர் பரப்பத் தோன்றினான்.
3.15.194
891 அடிதிரை வளைமணி யெறியு மாவிவாய்க்
கடிமரை விரிதர விடிந்த காலையிற்
படியினும் பெரும்பொறை பாத்தி மாதிரு
வடிவுறும் புதுமணக் கோல வாயிலின்.
3.15.195
892 தடியுலர்ந் துடனரம் பெழுந்து தாங்கிலா
மிடியினன் பசியடைத் திருக்கு மெய்யினன்
பிடிவிர லுருவிலாப் பீற லாடையன்
கொடுகிய குளிரின்வந் தொருவன் கூயினான்.
3.15.196
893 கூயவ னியாவெனன் றெழுந்து கோதையர்
நாயகி யெதிர்ந்துபக் கீறை நன்குறச்
சாயிபு பதமலர் வருந்தத் தக்கவென்
வாயிலின் வந்ததென் மவுலு வீரென்றார்.
3.15.197
894 கடிமனை யிஃதெனக் கருதி வந்தனன்
வடிவுறு மயிலனீர் வயிற்று றும்பசிக்
கொடுமையுந் தவிர்த்துடற் குளிரு நீங்கவோர்
பிடவையு மருள்கவென் றெடுத்துப் பேசினான்.
3.15.198
895 வறியவ னுரைத்தசொற் கேட்டு மாமயி
லறுசுவைக் கறியுட னன்ன மீந்துமேற்
குறையற வியற்றிய புதுக்குப் பாயமும்
பெறுகவென் றளித்தன ரறிவின் பெற்றியால்.
3.15.199
896 இகலுறு மனத்தவ ரீந்த போசன
மகமகிழ் தரவயி றார வுண்டுநற்
றுகலையு மொல்லையிற் புனைந்து தோமறும்
புகழொடும் வாழ்த்திபக் கீறு போயினான்.
3.15.200
897 ஆதுல னகன்றபி னாதி தூதெனு
மாதவ முகம்மது மருவ லார்தமைக்
காதபூ பக்கரு முமறுங் கல்வியி
னேதமில் குணத்துது மானு மியார்களும்.
3.15.201
898 இனையன பெயரும்வந் தெய்த நன்மலர்
புனைதரும் பாத்திமா வென்னும் பூங்கொடி
தனியெதி ரெழுந்து சலாமென் றோதினா
ரனைவரு மறுமொழி கொடுத்தன் புற்றனர்.
3.15.202
899 மணியொளி முகம்மது மகவை நோக்கிநன்
கிணைமணிப் பணியொடும் புதிய தின்றியே
பணிமொழி யீரொரு பழங்குப் பாயத்தை
யணிவதென் னெமக்கடுந் தருளு வீரென்றார்.
3.15.203
900 தந்தையீர் துகிலிலாச் சஞ்ச லத்தினால்
வந்தன னொருபக்கீர் வழங்கி னேனென
விந்தெனு நுதலிய ரியம்பச் செவ்விய
மந்தரப் புயநபி மறுத்துக் கூறுவார்.
3.15.204
901 இரவல ரிடத்தினிற் பழைய தீந்துநற்
புரியிழை மென்றுகிற் புதுக்குப் பாயத்தை
மருமணக் கோலத்தின் வனைய வேண்டுமென்
றுரைதர மறுமொழி யுரைப்ப தாயினார்.
3.15.205
902 அழகிய தெவையுமல் லாவுக் காகவே
விழைவுடன் கொடுத்திட வேண்டு மென்றுநும்
பழமறை வாக்கினாற் பகர்ந்த தாலரோ
மழைதவழ் கொடையனீர் வழங்கி னேனென்றார்.
3.15.206
903 பாத்திமா வெனுமயில் பகரக் கேட்டலர்த்
தேத்தரு புயநபி மகிழ்ந்த செய்கையால்
கோத்திரத் தவர்செழு முகங்கள் கோதறப்
பூத்தசெந் தாமரைக் காடு போன்றவே.
3.15.207
904 ஆண்டகை யலிமனைக் கம்ம நின்னையான்
கூண்டவ ருடனுமே கூட்டிச் செல்வதற்
கீண்டுவந் துறைந்தன னென்ன யாவருங்
காண்டருங் காரணர் கழறி னாரரோ.
3.15.208
905 தந்தைய ருரைதரத் தரும வீடெனுந்
சிந்தையிற் களித்தொளிர் செவ்வி யோங்கிய
விந்தெனு நுதன்மனை யிருந்த யாவையு
மந்திரக் கிழவர்முன் வைத்து நின்றனர்.
3.15.209
906 மாணெழி லரியபீங் கானும் வார்தலை
காணியும் பாயலுங் கதிர்கொள் வெள்வளைப்
பாணியிற் றிருகையும் பரம தானியும்
பூணிழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார்.
3.15.210
907 வயவரி யலிதிரு மனையிற் சேறுதற்
குயர்மறை முகம்மது மொளிர்செங் கையினால்
வியனுறுந் திருகையை யேந்தி னாற்விற்
லியலபூ பக்கரும் பாயை யேந்தினார்.
3.15.211
908 உற்றவர்க் குதவிய வுமறு வெள்ளிழை
நற்றலை யணையினை யேந்தி னாருயர்
வெற்றிசே ரடலுது மானு மெய்மனப்
பற்றொடு மெடுத்தனர் பரம தானியே.
3.15.212
909 கதிர்தரு பெரியபீங் கானைக் கையினின்
மதிவல ரெனுமு சாமா வெடுத்தனர்
பதுமமென் மலர்முக பாத்தி மாபதம்
பொதிதரு கபுசுடன் புறப்பட் டாரரோ.
3.15.213
910 வல்லிய மெனுமலி மனையின் வள்ளலார்
செல்லெனு மொல்லையின் விரைவிற் சேணிழிந்
தெல்லவன் கதிரினுஞ் ஜிபுற யீலெழின்
முல்லைவெண் ணகைமயின் முன்றி னண்ணினார்.
3.15.214
911 பரவர சரியலி மனைக்கும் பாத்திமா
திருமண மனைக்கும்பா வாடை செய்தென
வரகதி ஜிபுறயீ லென்னும் வள்ளறம்
விரிகதிர்ச் சிறையினை விரித்து நின்றனர்.
3.15.215
912 மன்னவ ரியாவரு மருங்கு சூழ்வரக்
கன்னியுந் தொடும்பதக் கபுசு தன்னொடு
மின்னிய சிறையெனு மாடை மீதினி
னன்னலங் கனிதர நடந்து போயினார்.
3.15.216
913 மறைநபி மகடமை யலிதம் வாயிலிற்
சிறையினி னடத்துதல் செய்து வானவர்க்
கிறைககன் புகுந்தன ரியாரு மின்புறப்
பொறையெனு மனைவயின் பொலிய வைகினார்.
3.15.217
914 கொணர்ந்தவை யாவையுங் கொடுத்து மன்னவர்
மணந்தரு மலியையு மையிலன் னாரையு
மிணங்கிடப் போற்றிவாழ்த் தெடுத்தவ் வில்லிடந்
தணந்தவ ரவருறை சார்பிற் சார்ந்தனர்.
3.15.218
915 சலிலமுஞ் சீரமுந் தழீஇய தன்மைபோ
லொலிகடற் புவியினீ டூழி வாழ்கென
வலியையு மகவையும் வாழ்த்தி யன்பொடு
மலிபுகழ் முகம்மது மனைபுக் காரரோ.
3.15.219
916 சொல்லுடன் பொருளெனக் சுருதி நூன்முறை
யில்லுறைந் தொருவருக் கொருவ ரின்பமுற்
றல்லெனுங் கூந்தலு மரசர் சீயமு
மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார்.
3.15.220
- பாத்திமா திருமணப் படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 15-க்குத் திருவிருத்தம்..... 916
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.16 சீபுல் பகுறுப் படலம் (917-931)
917 இறையவன் றூதரு மியார்க ணால்வரு
மறைவழி பெருக்கிய மன்ன ரியாவரு
நிறைதர விருக்குமந் நாளி னேரல
ருறைபதி யிடத்திருந் தொற்ற ருற்றனர்.
3.16.1
918 கடற்கரை சீபுல் பகறுவென் றோதிய
விடத்தினி லபூஜகு லுடன்முன் னூறிய
லடற்பரி கபடமா யடைந்த தின்றென
மடற்றுளைச் செவிப்புக வாழ்த்திச் சொல்லினார்.
3.16.2
919 ஒற்றர்க ளுரைத்தவை யுணர்ந்து தீனிலை
வெற்றிசேர் வேந்தருக் குரைத்து வேறுகொள்
பற்றல ரெனுமிருள் பருகும் வெங்கதிர்க்
கொற்றவ ரடல்ஹமு சாவைக் கூவினார்.
3.16.3
920 புடவியிற் பறப்பன போலு முப்பஃ
தடல்வயப் பரியுட னயில்வில் லேந்திய
மிடலுடை வீரர்கள் சிலரும் வெண்ணிலாச்
சுடர்விடு துவசமுந் தொகுத்திட் டாரரோ.
3.16.4
921 வயிரொலித் திடப்படை மன்னர் சூழ்வர
வயிலொடுஞ் சென்றவ ணடர்ந்த பூஜகல்
செயுமமர் வலிகெடச் செயித்து வம்மென
வுயிரெனுஞ் சிறியதந் தையருக் கோதினார்.
3.16.5
922 கருதலர்ச் செகுத்திவண் கடிதின் வம்மென
வரசர்நா யகநபி யளித்த வாசகஞ்
சிரசின்மேற் கொண்டமு சாவுஞ் சேணுலாய்
வரும்விசைப் பெருந்திறல் வாசி மேற்கொண்டார்.
3.16.6
923 பரகதிப் படையொடும் படைக்கு ழாத்தொடும்
வரமுறு முகம்மதை வாழ்த்தி வாண்மறாக்
கரதல ரெனும்ஹமு சாபெய் கார்முகிற்
பொருதிரைக் கடற்கரை யிடத்திற் போயினார்.
3.16.7
924 உவமையின் மிடல்ஹமு சாவந் துற்றவை
யபுஜக லறிந்தடற் பரியுஞ் சேனையுங்
குவிதரப் பொருமமர்க் கோலந் தன்னொடும்
புவிதுக ளெழவெதிர் புறப்பட் டானரோ.
3.16.8
925 தவிசுறை முகம்மதின் சிறிய தந்தையும்
பவுரிகொள் கவனவெம் பரியும் வீரருந்
துவசமுந் துலங்கிடச் சூழி மாகரி
யபுஜகல் வருமிடத் தெதிர்வ தாயினார்.
3.16.9
926 இருவர்தஞ் சேனையு மெதிருங் காலையிற்
றிருகுநெஞ் சபூஜகல் சேனை புக்கிருந்
தரிதினிற் றனித்தமு சாவென் றோதிய
மருமலர்ப் புயத்தின ரிடத்தில் வந்தன.
3.16.10
927 மறைநபி முகம்மதி னிடத்தும் வன்குபிர்
செறுநர்க ளிடத்தினுஞ் சேர்ந்த பண்பினன்
கறைகொள்வஞ் சகங்கப டடைந்த கல்பின
னிறுமொழிச் சூதினன் மசுதிய் யென்பவன்.
3.16.11
928 தருத்தனை யுறழ்நபி சிறிய தந்தையர்
கருத்தினுக் கேற்பவைக் கபடந் தோன்றிலா
திருத்திநன் மொழியொடு மிசைவ தாகவே
பொருத்தினன் றவிர்ததனன் போரின் கோலமே.
3.16.12
929 உள்ளுற வஞ்சகத் துறுதி கூறியே
தெள்ளிய னெனவெழுந் தரிதிற் சென்றுபி
னள்ளிலை வேலபூ ஜகுலுஞ் சேனையும்
புள்ளுவத் தவர்தலம் புகுத்திப் போயினான்.
3.16.13
930 தடத்திரட் புயத்தமு சாவுந் தண்டுறைக்
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கிநீள்
கொடித்திர ளொடுங்குர கதங்கண் முன்செல
வடற்படை கொடுமதி னாவி லாயினார்.
3.16.14
931 எறிதிரைக் கடற்கரை யிடத்திற் சென்றதுஞ்
செறுநர்வந் துற்றது மசுமதி செய்கையு
முறைமையின் முகம்மது முன்பு கூறினார்
சிறியதந் தையரெனுஞ் செவ்விச் சீயமே.
3.16.15
- சீபுல்பகுறுப் படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 16-க்குத் திருவிருத்தம்.....931
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.17 புவாத்துப் படலம் (932-950)
932 சீபுல்ப குறுவெனுந் தலத்தின் செய்தியைக்
காவலர் முகம்மதங் கறிந்து கல்விசேர்
நாவல ருடனினி திருக்கு நாளினில்
வேவுகொண் டொருவர்வந் திறைஞ்சி விள்ளுவார்.
3.17.1
932- முன்னர்நம் முன்னல மொழிந்த பூஜகல்
தன்னுடன் பொருந்தியங் கவனைத் தப்பவிட்
டொன்னலர் தமக்குயி ருடலும் போன்றவ
னின்னைநாட் புவாத்துவி னிருக்கின் றானென்றார்.
3.17.2
933 ஒற்றர்வந் துரைத்தவை யுணர்ந்து நந்நபி
நற்றவ முடைமையீர் நன்று நன்றுநம்
வெற்றிசே ரியார்களும் பரியின் வீரரு
மிற்றையிற் பகற்பொழு தெழுக வென்றனர்.
3.17.3
934 அகிலமன் புறுமதி னாவுக் காதியாச்
சகிமன சாயிவைத் தனிய தாகவைத்
திகல்படைக் கோலங்க ளியற்றி யாவரும்
புகழ்நபி முகம்மது புறத்தி லாயினார்.
3.17.4
935 அறைதவில் பேரிகை முரசு மார்த்தெழ
முறைமுறை கொடிப்படை படர்ந்து முன்செலக்
சுறவெனும் வீரரும் பரியுந் துன்னவே
யிறைநபி முகம்மது மெழுந்து போயினார்.
3.17.5
936 உண்ணுநீர் காவத முலவித் தேடினுங்
கண்ணினிற் காண்பரி தான கானகம்
விண்ணினிற் புதுப்புன லன்றி வேறொரு
மண்ணினிற் கூவலி லாப்பு வாத்துவே.
3.17.6
937 தொடரறுங் கேண்மையின் மசுதிய் யென்னுமக்
கொடியவ னுறைந்தபு வாத்துக் கோட்டையைச்
சடிலமுஞ் சேனையுஞ் சதுரின் சுற்றிட
வடிவுறு நபியவண் வைகி னாரரோ.
3.17.7
938 உய்யுநன் மதியில னுறைந்த வூரினை
வையகம் புகழ்நபி வளைந்த காலையில்
வெய்யவன் பூதலம் விளக்கி நீள்கதிர்க்
கையினை யொடுக்கிமேற் கடற்புக் கானரோ.
3.17.8
939 இரவினிற் படைவளைந் திருப்பக் கீழ்த்திசை
விரிதர வெளுத்தது விரவி னன்நபி
யரியவற் றொழபஜ றடுத்த தீம்புனற்
றருகவென் றுரைத்தனர் சாபிர் தன்னையே.
3.17.9
940 ஏடலம் பியபுய நபியி சைத்தலு
மூடிய கடங்களுந் துருத்தி மூட்டையுந்
தேடின ரில்லெனத் திசையும் பாடியு
மோடினர் நீருறை யொருங்கு காண்கிலார்.
3.17.10
941 மீண்டனர் சடுதியின் வேத நாயக
கூண்டவிப் பதிபுறங் குறுகி யெங்கணுங்
காண்டில னீரெனக் கழற நன்னபி
யீண்டுநீர்த் துருத்தியைக் கொணர்மி னென்றனர்.
3.17.11
942 தருகெனு முறைவழி சாபி றொல்லையிற்
பருகுநீ ரற்றதோற் றுருத்திப் பையினைத்
திருமுனம் வைத்தனர் தொட்டுச் செவ்வியோர்
சுருமதிந் திரத்தினிற் றுஆச்செய் தாரரோ.
3.17.12
943 மண்ணுறும் பாண்டமொன் றெடுத்து வம்மென
வண்ணலா ருரைத்தலு மோடி யவ்வயின்
றண்ணுறுந் தொடைப்புய சாபிர் மன்னவ
ருண்ணிறை களிப்பொடு முவந்து வைத்தனர்.
3.17.13
944 புதுநுறும் பானையின் வாயிற் பொற்புறப்
பதுமமென் கரவிரற் பரப்பு மூடிநின்
றிதமுறுந் துருத்தியை யெடுத்துக் கையின்மேல்
விதமுறக் கவிழ்த்தென விளம்பி னாரரோ.
3.17.14
945 விடுமென வுரைத்தலும் வெறுந்து ருத்தியைக்
கடநிறை விரலின்மேற் கவிழ்ப்ப வுள்ளுறைந்
திடுதுளி யொன்றின்மே லின்றி வீழ்ந்தது
படுமிட நீரெனும் பான்மை தோன்றவே.
3.17.15
946 கையின்மே லொருதுளி கான்ற போழ்தினின்
மெய்யொளி முகம்மது பிசுமி லோதினர்
செய்யமென் விரலிடை நான்கிற் சேணதி
பெய்யுநல் லருவிபோற் பிறந்தெ ழுந்ததே.
3.17.16
947 சுருதிவல் லவனருள் சுரந்த நன்னபி
விரலிடை நதியெனப் பிறந்த வெள்ளத்தாற்
பரலழற் பாலையைப் போக்கிப் பண்ணைசூழ்
மருதநன் னிலமென வளமுண் டாயதே.
3.17.17
948 பரிகளொட் டகஞ்சுமை பரித்த நந்திக
ளரிதினிற் குடித்தரு மயாவுந் தீர்ந்தன
திருநபி முகம்மதுஞ் சேனை வீரரும்
வரநதி யிடத்தினிற் றொழுது வாழ்த்தினார்.
3.17.18
949 இவ்வண்ண மூன்றுநா ளிருக்கு மெல்வையின்
மைவண்ணத் துள்ளத்து மசுதிய் யென்பவன்
செவ்விய ரறிகிலா தொளித்துத் தேடருங்
கவ்வைசெய் நெடிபடு கானம் போயினான்.
3.17.19
950 ஓங்கிய நெடுங்கடத் தொளித்துப் போயின
னீங்கிருந் தென்பல னென்ன நன்னபி
தாங்கரும் புரவியுந் தானை வீரரும்
வாங்குமி னெனமதி னாவில் வந்துற்றார்.
3.17.20
ஆகப் படலம் 17க்குத் திருவிருத்தம்.....950
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.18. அசீறாப் படலம் (951-991)
951 வானவர் பரவிய வள்ள னந்நபி
தீனெனும் பெரும்பெய ரரசு செய்யுநா
ளீனவன் குபிரவ ரியற்றுஞ் செய்கையைத்
தானறிந் தொருவர்வந் தவையிற் சாற்றுவார்.
3.18.1
952 வரைசெறி மக்கமா நகரின் மாற்றலர்
திரகமு மணிகளுஞ் செம்பொ னாடையுந்
தரளமு மிகுவிலைச் சரக்குந் தாங்கிய
பரிகளு மெருதுமொட் டகத்தின் பந்தியும்.
3.18.2
953 காமரி னிரைநிரை காவ லாளரு
மாமதி வலசில வணிக மாக்களும்
பூமணஞ் செறிதரு பொழில்கள் சுற்றிய
ஷாமினுக் கனுப்பினர் சமய மீதென்றார்.
3.18.3
954 உற்றுள வறிந்தவவ் வொற்ற ரீதெனச்
சொற்றவை செவிப்புகத் தூயன் றூதுவர்
வெற்றிகொள் வேலினர் வியப்ப விம்மொழி
பெற்றன மெனத்தனி மறையிற் பேசினார்.
3.18.4
955 தலைவருக் கிம்மொழி சாற்றி வேதநூன்
மலிதருங் கேள்வி யபாசல் மாதமைப்
பலவளங் கெழுமதி னாவிற் பண்புற
நிலைதர முதன்மையி னிறுத்தி னாரரோ.
3.18.5
956 விரிகதிர் வேலினர் வளைந்த வில்லினர்
கரிகைபட் டயமழுச் சுமந்த தோளினர்
பொருவினூற் றைம்பது புரவி தம்மொடும்
வரநபி யெழுந்தன ரமரர் வாழ்த்தவே.
3.18.6
957 அறைதவில் பம்பை தடாரி யார்த்தெழ
முறைமுறை காகள முழக்க மோங்கிட
மறுவறும் வெண்கொடி யுலவி வள்ளலார்
சிறியதந் தையர்முனஞ் செல்லச் சென்றனர்.
3.18.7
958 உள்ளகங் களித்தமு சாவென் றோதிய
வள்ளல்வெண் கொடியுடன் மகிழ்ந்து முன்செலப்
புள்ளினு நனிவிசைப் புரவி சூழ்வரக்
கள்ளவிழ் மலர்ப்பொழில் கடந்து போயினார்.
3.18.8
959 அடவியும் பாலையு மருவிக் குன்றமுங்
கடகரி வனங்களுங் கடந்து போயிகல்
படுகொலை மருவலர் நடத்தும் பாதையி
னிடனசீ றாவெனுந் தலத்தி னெய்தினார்.
3.18.9
960 வற்றுறாப் பெரும்புகழ் மக்க மாநகர்ப்
பற்றலர் ஷாமினுக் கேகும் பாதையிற்
சுற்றினு மிறங்கின சுருதி வாசகக்
கொற்றவ னபியொடும் படைக்கு ழாங்களே.
3.18.10
961 இலக சீறாவினி லிரண்டு நாளிருந்
துலவிய வொற்றரா லுணரு மொல்லையிற்
பலபல திசையவர் படர்ந்து சாவியே
நலனுறு முகம்மது நபிமு னெய்தினார்.
3.18.11
962 முதல்வநம் படைவர மூன்று நாட்குமுன்
பொதியெரு தொட்டகம் புடையிற் பொங்கவே
நிதியொடும் போயின நிகரில் ஷாமெனும்
பதியினுக் கெனப்பதம் பணிந்து சொல்லினார்.
3.18.12
963 பரதிசை திரிபவர் பகரக் கேட்டவண்
கரநதி தருநபி யிருக்குங் காலையிற்
பெருகுமவ் விடத்தவர் கூடிப் பெட்புற
மரைமல ரிணைப்பதம் வந்து நண்ணினார்.
3.18.13
964 பேர்பனீ முத்லசு வென்னும் பேருட
னார்பனீ லமுறத்தென் பவரு மாண்டுறப்
போரறத் தன்மையிற் படுத்திப் பொற்புடன்
றார்கெழும் புயநபி தருக்கின் மீண்டனர்.
3.18.14
965 முரசமும் பேரிபு முழங்கத் தாவிய
பரிகளு மன்னவர் பலருஞ் சூழ்வர
நரலையை நிகர்திரு நகரை நோக்கியே
வரும்வழி யினிலொரு வசனங் கேட்டனர்.
3.18.15
966 துறுமலர்ப் பொழிறிகழ் மதீனஞ் சுற்றிய
சிறுகுடிப் பாடிக டிடுக்குற் றேங்கிடப்
பெறுநிரை யனைத்தையும் பிடித்துத் தெவ்வரிற்
குறுசெனு மவன்கொடு போயி னானென்றே.
3.18.16
967 குரைகட லெனநிரை கொண்டு போயதோர்
தருமுகி றவழ்சபு வானென் றோங்கிய
வரையடி வாரத்தை நோக்கி மானபி
பொருவில்வெம் படையொடும் போயி னாரரோ.
3.18.17
968 இறையவ னுரைவழி யியற்றுந் தூதுவர்
மறைமுதிர் படையொடும் வருகின் றாரெனக்
குறுசெனு மவனிரைக் குழுவு மூரும்விட்
டுறைவதில் லெனவொளித் தோடி னானரோ.
3.18.18
969 வலனுற வடுஞ்சபு வானெ னும்பெரூ
மலையடி வாரத்தின் வந்தவ் வூரிடை
நிலைகொளு நிரையெலாங் கொண்டு நீணபி
சிலையயிற் படையொடுந் திரும்பி னாரரோ.
3.18.19
970 கல்லடை திடருமுட் காடுங் கண்ணறாச்
செல்லடை நெடுவரைத் திகரிச் சூழலு
மெல்லவன் கதிர்கிடந் தெரியும் பாலையு
முல்லையுங் கடந்தொரு பொழிலை முன்னினார்.
3.18.20
971 சேந்தன செழுங்கனி சிதறச் சிந்திய
வீந்தடர் பொழிலிடத் திறங்கி நந்நபி
யாய்ந்தநல் லறிவின ரமச்ச ரின்புற
வாய்ந்ததோர் பத்திரம் வரைந்து கட்டினார்.
3.18.21
972 அகிலமன் னப்துல்முத் தலிபுக் கன்புறு
மகள்மகன் அப்துல்லா வென்னு மன்னரை
யிகலறு மனத்தவ ரிருத்தி முத்திரைத்
தகுதியிற் பத்திரங் கொடுத்துச் சாற்றினார்.
3.18.22
973 பாடிபத் துனுநகு லாவிற் பாங்குறக்
கூடியங் குறைந்துகைக் கொடுத்த பத்திர
மூடிய முத்திரை முறித்துப் பாசுரஞ்
சூடிய வுரைவழி துணிமி னென்றரோ.
3.18.23
974 கண்ணெனப் பிரிவின்மு ஹாஜி ரீன்களி
லெண்மரை யவர்மொழிக் கிணங்கச் சேர்த்தினி
துண்மகிழ் தரவவ ணுறைகு வீரென
மண்ணகம் புகழ்முகம் மதுவ னுப்பினார்.
3.18.24
975 நாயக ருரைத்தவை யுளத்தி னாட்டிநற்
றூயவ ரெண்மரும் பரிவிற் சூழ்வரப்
பாயரித் துவசமுன் படரப் போயினர்
சீயமொத் தப்துல்லா வென்னுஞ் செம்மலே.
3.18.25
976 தந்தைதம் முன்னவ டருமத் தால்வரு
மைந்தரை யவணிடை யனுப்பி மன்னர்கோன்
சிந்திடத் துயர்வரை சிதறத் தாக்கிக்கைப்
பந்தென வருந்திறற் பரியின் மேற்கொண்டார்.
3.18.26
977 திறல்வய வீரருஞ் சேனை மன்னரு
மறையொலி திசைதர வருமவ் வேளையி
லறபியி லொருவன்வந் தடுத்தி யாவர்க்கு
மிறையவன் றூதர்மு னியம்பு வானரோ.
3.18.27
978 முன்னவர் மும்முறை மொழியி னீறினி
னன்னபி யொருவருண் டென்னு நாட்டத்தாற்
சென்னிலந் தொறுந்தொறுந் திரிந்துங் காண்கிலா
திந்நிலத் தெதிர்ந்தன னூழி னேவலால்.
3.18.28
979 மண்டலம் புகழ்தரு முகம்ம தேநிழற்
கொண்டலங் கவிகையுங் குறிப்புங் காட்சியுங்
கண்டவன் பொருட்டுயர் கார ணீகமொன்
றுண்டெனி லெனக்குவே றுறுதி யில்லையால்.
3.18.29
980 என்றவ னுரைத்தன னேகன் றூதுவர்
வென்றிகொ ளறபியை விளித்துச் சேணிடை
நின்றவத் தருவினைக் கூவி நின்னிடத்
தொன்றுமென் றிசைதர வுரைத்திட் டாரரோ.
3.18.30
981 தூதுவ ருரைவழி யறபி தூரத்தின்
மாதரு நிலையினை நோக்கி வாவெனக்
கோதறக் கூறினன் கூற வத்தருப்
பூதலம் விரிதரப் புறத்தெ ழுந்ததால்.
3.18.31
982 எழுந்தருப் பணர்சினை யாவும் பின்னரின்
விழுந்திட வேரைமுன் னீட்டி மேதினி
யழுந்திட வூர்ந்ததி சயிப்ப வாசலச்
செழுந்தொடைப் புயநபி திருமுன் னின்றதே.
3.18.32
983 வந்துநின் றத்தரு மண்ணுள் ளோர்களு
மந்தரத் தமரருங் கேட்ப தாகவே
சுந்தரம் பெறச்சலாஞ் சொல்லி யிந்நிலத்
துய்ந்தன னெனக்கலி மாவு மோதிற்றே.
3.18.33
984 இருவகை மொழியுங்கேட் டறபி யீங்குறை
தருவினை முன்னுறை தானஞ் சேர்தர
வருளுகென் றுரைத்தன னாதி தூதரு
மொருமொழி செல்கென வுவந்து கூறினார்.
3.18.34
985 வடவரைப் புயநபி வசனங் கேட்டலு
முடைமர மிலையிலொன் றுதிர்த ராமலே
படர்பணர் துயல்வர சலாம் பகர்ந்தக
மடைவபோ லேகிமுன் னிடத்தி னாயதால்.
3.18.35
986 தருப்புது மைகடரத் தந்த நந்நபி
திருப்பதக் தினிற்சிரஞ் சேர்க்கத் தன்மன
மொருப்படச் செழுங்கலி மாவை யோதிநல்
விருப்பொடு நெறியிசு லாமின் மேவினான்.
3.18.36
987 காரணக் குரிசில்நுங் கமல மாமல
ரீரடி யினுஞ்சஜ தாச்செய் தேத்தியிப்
பாரிடைப் பலன்பெறப் பரிவி னோர்விடை
தாருமென் றுரைத்தனன் றழைத்த புந்தியான்.
3.18.37
988 அறபியிவ் வுரைதர வழகின் பேறுறத்
தறைசிரம் படசஜ தாச்செய் தேத்துவ
திறைவனுக் கல்லது மாந்தர்க் கில்லென
முறைமையின் மறைவழி மொழிந்து காட்டினார்.
3.18.38
989 துன்னிதழ்த் தாமரைப் பாதந் தொட்டியா
னென்னிரு விழிசிர மேத்த வாயினு
முன்னுளத் திசைந்தரு ளுரைசெய் வீரெனப்
பொன்னகங் காவலர் பொருந்தி னாரரோ.
3.18.39
990 அருமறை முகம்மதி னம்பொற் றாளிணை
யிருவிழி வைத்துமுத் தாடி யாவர்க்கும்
பிரியமுற் றொருசலா மோதிப் பெட்புடன்
வரிசைபெற் ற்றபிவாழ் பதியிற் போயினான்.
3.18.40
991 வழிபடு மவனைநல் வழியி லாக்கிமேற்
சுழிபடு புரவியும் படையுந் துன்னவே
யழிபடாப் பெரும்புக ழரசர் கேசரி
பழிபடா திருந்துவாழ் பதியை நண்ணினார்.
3.18.41
அசீறாப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 18க்குத் திருவிருத்தம்.....991
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.19 பத்னுன்னகுலாப் படலம் (992-1006 )
992 மழைதவழ் கவிகை வள்ளன் முகம்மது தீனைப் போற்றி
யெழில்பெறு மப்துல்லாவு மெண் மருங் கூண்டு சுற்றிச்
சுழியெறி யாறுங் கானுஞ் சுரங்களுங் கடந்து செந்தேன்
பொழிதரக் கனிக டூங்கும் பொழிலிடை யிறங்கி னாரால்.
3.19.1
993 நபிதமை விடுத்து மூன்றா நாளினி லிறங்குங் காவிற்
கவினுற வெழுதிக் கட்டித் தருங்கடு தசை யேந்திப்
புவிபுக ழப்துல் லாநற் புரவல ரெவருங் கேட்டுச்
செவியினின் மகிழ்ச்சி கூரத் தெரிதர வாசித் தாரால்.
3.19.2
994 மக்கநன் னகரார் ஷாமுக் கனுப்பிய முதலு மற்று
மிக்கவத் திரியு மாவு மீண்டவண் வருநாண் மட்டும்
புக்கியங் குறைந்து கானிற் போவதற் கிடங்கொ டாமற்
றிக்கறப் பறித்து வெட்டித் திரும்புமென் றிருந்த தன்றே.
3.19.3
995 விரிந்தவா சகத்தைக் கேட்டு விரைந்தெழுந் தரச ரியாரும்
பரிந்ததா யிபுக்கு மக்க மெனும்பதி தனக்கு நாப்பண்
வரந்தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா வென்னும்
புரந்தனி லிறங்கிப் பாதைப் புறந்தொருங் காவல் வைத்தார்.
3.19.4
996 பாயரி போன்று சின்னாட் பாதைகாத் திருப்பச் சாமிற்
போயின சரக்கு மாவு மொட்டகைக் குழுவும் பொங்கித்
தாயிபுக் கிப்பாற் பட்ட தெனுங்குறிப் பறிந்து தத்த
மாயுத மெடுத்துச் சேர்த்துப் புரவிமே லாயி னாரால்.
3.19.5
997 பொன்னுநன் மணியுந் தூசும் புரவியொட் டகத்தி னேற்றிக்
கொன்னுறைக் கதிர்வா டாங்கிக் குமரரும் வருத னோக்கி
மின்னிலங் கியவேற் செங்கை முகம்மது விடுத்த வேந்தர்
பன்னக நெளியத் தத்தம் பரியொடு மெதிர்ந்து கொண்டார்.
3.19.6
998 செயலறு மருவ லாருந் தீனவர் படையுந் தாக்கிக்
கயினுறை கழித்த வாளின் கண்கடீக் கனலக் காதி
வெயிலவன் கதிரிற் றூண்டும் வெஞ்சரந் தொடுத்து நீண்ட
வயிலொடு மயில்க ணீட்டி யடுஞ்சமர் விளைத்து நின்றார்.
3.19.7
999 அமரிடை வெகுண்டு சீறிக் காபிரி லம்றென் றோதுங்
குமரன்முன் னெதிர்ந்து தாவக் கோளரி யப்துல் லாகண்
டிமைசுட விழித்து முன்ன ரேகித்தம் வாளால் வாசிச்
சுமைகெட விரண்டு துண்டம் படவுட றுணித்து நின்றார்.
3.19.8
1000 மருவல னம்றென் போனு மாண்டபி னிருவர் தாக்க
விருவருக் கிருவ ரேகி யெதிர்ந்துமற் போரிற் சேர்ந்து
தரையிடை வீழ்த்தி வெளவிக் கட்டுத றனைக்கண் டேங்கி
யொருவனு மோடி னான்மற் றுளர்திசை சிதறி னாரால்.
3.19.9
1001 தாரையி னெதிர்ந்த நான்கு தலைவரி னொருவன் வீந்தான்
வீரர்க ளிருவர் தீனின் வேந்தர்கை யினிற்கட் டுண்டார்
போரெதி ராது மற்ற வொருவனும் புறத்திற் போனான்
வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகி னாரால்.
3.19.10
1002 ஒட்டகத் திரளு மேறும் புரவியு மொளிரச் சேர்த்த
பெட்டகத் தொகையுஞ் செல்லப் பிடித்தவ ரிருவர் செங்கைக்
கட்டுட னடத்திச் செவ்வேற் காளைய ரினிது சூழ
மட்டவி ழலங்கற் றிண்டோ ண் மன்னவர் புறப்பட் டாரால்.
3.19.11
1003 எண்ணொணாத் திரகங் கைக்கொண் டெண்மரு மிலங்கும் வேற்கை
யண்ணலென் றிசைக்குங் கீர்த்தி யப்துல்லா வென்னும் வேந்தும்
விண்ணினுந் திசையுந் தீன்தீ னெனுமொழி விளங்கக் கூறிப்
பண்ணெலாம் விழையாட் டெய்தும் பதியெனு மதீனஞ் சேர்ந்தார்.
3.19.12
1004 அறைகட லவனி காக்கு மகுமதி னிடத்தை நண்ணி
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த
சிறையுடன் பொதியிற் செய்த திரகத்தின் றொகுதி காட்டித்
தறுகிலா தெழுந்து போற்றி யவரவர் சார்பிற் சார்ந்தார்.
3.19.13
1005 பூசலிட் டடைய லாரைப் பொருதுவெல் லுவதற் காகா
மாசபே தத்திற் பொன்னை வைத்தனர் சின்னாட் பின்ன
ராசிலான் கருணை கூர வாய்த்தொன் றிறங்கை யாலே
பாசமுற் றவர்கேட் கெல்லாம் பகுந்தினி தளித்திட் டாரால்.
3.19.14
1006 பிடித்தருஞ் சிறையிற் பட்ட பெயர்தலை விலைய தாகக்
கொடுத்தரும் பொன்னான் மக்கா புரத்தவர் கொண்டு போனார்
வடித்தசொன் மறையோர் வாழ்த்த மன்னவ ரினிது போற்றத்
தொடுத்ததீன் விளங்கச் செய்து தூதுவ ரிருந்தா ரன்றே.
3.19.15
பத்னுன்னகுலாப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 19-க்குத் திருவிருத்தம்....1006
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.20 பதுறுப் படலம் (1007-1262)
1007 நெறியொடும் புறுக்கா னன்னேர் நிகழு மன்வருடந் தன்னிற்
பெறுகதி றமலா லென்னப் பெருகிய நோன்பு தன்னை
யுறுதிகொண் டெவர்க்குஞ் செவ்வி யுறபறு லாக்கி னேனென்
றிறையவ னருளி னாயத் திறங்கிய தெவர்க்கு மன்றே.
3.20.1
1008 உள்ளுறைந் தெவர்க்குந் தோன்றா துலகெலா நிறைந்த மேலோன்
விள்ளுதற் கரிய வேத வழிமுறை விதித்த நோன்பை
வள்ளனந் நபியு நாலி யார்களு மற்று ளோருந்
தெள்ளிய மனத்தி னோடுஞ் சிறப்புடன் முடித்து வந்தார்.
3.20.2
1009 பறுலெனு நோன்பு நோற்று வருகையிற் பதினே ழாய
குறைவற வெள்ளி நாளிற் குத்துபாத் தொழுத பின்னர்
மறுவறு மொற்றர் தம்மில் பசுபசா வென்னும் வீரர்
முறைவழி தவறா வள்ளன் முன்பணிந் தெழுந்து நின்றார்.
3.20.3
1010 வியர்வுமெய்த் தொய்வும் பூண விசித்தகச் சையுமா கத்தி
னயர்வொடும் விரைவின் வந்தா யாதிதன் தீனை மாறுங்
கயவர்தஞ் செய்கை யாது கண்டனை யென்ன மார்க்கத்
துயர்நபி முகம்ம தின்பா லொதுங்கிவாய் புதைத்துச் சொல்வார்.
3.20.4
1011 மருக்கமழ் சோலை சூழு மக்கமா நகரின் வாழ்வு
பெருக்கிநந் தீனை மாறு பேசிய தலைவர்க் குற்ற
வுரக்கமு மணியுந் தேச வாணிபத் துறுதி யான
சரக்குகள் சின்னாண் முன்னர் ஷாமுக்குப் போய தன்றே.
3.20.5
1012 அந்நக ரடைந்தி லாப மிரட்டிக்கு மதிக மாறிப்
பின்னரிந் நாட்டுக் கேய பெறுஞ்சரக் கனைத்துங் கொண்டு
மன்னிய புரவி யேறு வரிநெடுங் கழுத்தலி யாவுந்
துன்னிடச் சுமைக ளேற்றித் தொகுதிக டொகுதி யாக.
3.20.6
1013 இருநிதிச் செல்வர் நாற்ப திலக்குறுந் தலைவர் சூழ
மருமலர்த் தொடையல் வேய்ந்த வரைப்புயன் கறுபு மைந்த
னருளறம் பயிலாச் சிந்தை யபாசுபி யானு மாகத்
தெரிவருஞ் செம்பொற் குப்பைத் திரளொடும் வருகின் றாரால்.
3.20.7
1014 ஈதுபோ னமக்கு வாய்த்த திலையொரு காலத் தேனு
மாதவ விஃதென் றோதி வாய்புதைத் தொருங்கு நின்றார்
சூதர மொழியார் சிந்தை தொட்டமெய் யெழில்சேர் வள்ளல்
காதினுட் புகுந்து மாற்றங் கருத்தையும் வியத்திற் றன்றே.
3.20.8
1015 தனுச்சர வேக மானும் பசுபசா சாற்று மாற்ற
நனைச்செழுந் தொடையல் வேய்ந்த தோழர்நால் வருக்குங் கூறித்
தொனிச்சதிர் கடலந் தானைத் தொகைப் படைத் தலைவரியாரு
மினிச்சடு தியினென் முன்னர் வருகவென் றிசைமி னென்றார்.
3.20.9
1016 அடையல ரிடியே றன்ன அபாலுபா னாவைச் செம்பொன்
மடறிகழ் கமல வாவி மதீனமா நகர்க்கு மற்றப்
புடைபடு நகர்க்குஞ் செங்கோற் புரந்தர ரிவரே யென்ன
விடையறா மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டிருத்தி னாரால்.
3.20.10
1017- வேறு
பழுதி லாதெமெய் முதலவன் பறுலெனப் பணியுந்
தொழுகை நேரிமா மெனச்செயுந் தொழின்முறை சிறப்பப்
பொழியு நன்மறை நாவினர் புகலுநா லெவையும்
வழுவி லிபுனும்மி மக்த்தூமைத் தலைமையா வைத்தார்.
3.20.11
1018- வேறு
வீரவெண் மடங்க லென்னும் விறலபூ பக்கர் வேக
மாருத மடங்கத் தாவும் வயப்பரி யுமறுஞ் சேந்த
கூரயி றாங்குஞ் செங்கைக் கோவுது மானும் வெற்றித்
தார்கெழும் வடிவா ளேந்துந் தடப்புய அலியும் வந்தார்.
3.20.12
1019 இயன்மறை தெரிமு ஹாஜி ரீன்களெண் பத்து மூன்று
பெயருமன் சாரி மாரிற் பேர்பெறுந் தலைமை மிக்கோ
ருயரிரு நூற்று முப்பத் தொருபெய ரவருங் கைவா
ளயருறா வெற்றி வீரத் தவருட னீண்டி னாரால்.
3.20.13
1020 இருபுறக் கரட தாரை மதசல மிறைத்து நிற்கும்
பொருகரிக் கணங்க ளென்னப் புலிக்குழாந் திரண்ட தென்ன
வரையிடை கிடந்து சீறு மடங்கலேற் றினங்க ளென்ன
விரிகடற் றானை சூழ வேந்தர்க டிரண்டு மொய்த்தார்.
3.20.14
1021 திரைக்கடற் கடுப்ப வேந்தர் சேனைகொண் டீண்டத் தாவும்
பரிக்குழா நெருங்கச் சேர்ந்த படைக்கலன் செறிந்து மின்ன
மருக்கமழ் படலைத் திண்டோ ண் மலையென வளர வள்ள
லருக்கனொத் தெழுந்து வெம்போ ரணிகல னணிய லுற்றார்.
3.20.15
1022 தண்ணொளி விலகி வீசுஞ் சபூகெனுந் தலைச்சோ டிட்டு
வெண்ணிலாக் கதிரிள் கற்றை மின்னினைப் பொதிந்த தென்ன
வண்ணவெண் சறுபாற் றொட்டு மருங்கினிற் சுருக்கி வீக்கிக்
கண்ணொளி கவருஞ் சோதிக் கஞ்சுகி கவினச் செய்தார்.
3.20.16
1023 ஒலியல்மே இருத்திச் செவ்வி யொளிருங்குற் றுடைவா னென்னுங்
கலிபினைச் சேர்த்த காட்சி கருதல ருயிரை நாளும்
பலியெனக் கருள்வீ ரென்னப் பருமணிக் கச்சின் கையான்
மலிபுகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்ற தன்றே.
3.20.17
1024 திருநபிக் கேவல் யானுஞ் செய்குவ னென்ன வெய்யோன்
வெரிநிடத் துறைந்த போல விளங்குகே டகத்தைச் சேர்த்துத்
சொரிகதிர் வயிர மாலைத் தோள்வரை யிடத்திற் றோன்றி
யொருபிறை கிடந்த தென்னத் தனுவொரு புறத்திற் கொண்டார்.
3.20.18
1025 வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை
யையனுக் கொன்று நூறா யிரமென வமைந்த வேவல்
செய்வன திகாந்த மட்டுஞ் செல்வன திறத்த வெண்ணில்
பெய்சரக் காபூ றென்னுந் தூணிபிற் புறத்திற் சேர்த்தார்.
3.20.19
1026 மறுவிலு கைபத் தென்னு மரவயி ரத்திற் செய்த
குறுசூனுந் தண்ட மேந்திக் குலக்கொழுந் தனைய கற்பிற்
பொறைமயில் கதீஜா வீந்த பொலன்மணி வேலுந் தாங்கி
யிறைவனை வாழ்த்தி யேத்தி முகம்மது மெழுந்தா ரன்றே.
3.20.20
1027 தாவிடின் மனத்தை யொக்குந் தாக்கிடி னிடியே றொக்கு
மேவிடிற் றிகிரி யொக்கு மெதிர்ந்தவர்க் கெரியை யொக்கும்
பூவிடத் தடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென் றோது
மாவினைக் கொணர்மி னென்ன முகம்மது சரணம் வைத்தார்.
3.20.21
1028 கடலினைக் கலக்க வென்றோ கதிர்துகள் படுத்த வென்றோ
வடவரை தகர்க்க வென்றோ மண்ணிலம் பிளக்க வென்றோ
வடையலர் பதியை யின்னே யந்தரத் திடுக வென்றோ
தடமுறுங் கடினவாசி தாள்பெயர்த் திட்ட தம்மா.
3.20.22
1029 உவரியுண் டெழுந்த காரி னொலித்தவொட் டகத்தின் பேரி
புவியிட மதிரப் பொங்க முரசங்கள் புடையி னார்ப்ப
நவுரிகா களங்கள் சின்ன நரலையின் கலித்து விம்மப்
பவுரிகொள் பரிமுன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம்.
3.20.23
1030 பரிசைகே டகம்வாள் சொட்டை பட்டயஞ் சுரிகை தண்ட
மெரிசெய்வேல் சவளங் குந்த மிடுசரத் தூணி வல்வில்
வரிசையி னிரையி னேந்தும் வயவரும் பரியு மற்றும்
விரலிட மின்றி யெங்கு நெருங்கின படையின் வெள்ளம்.
3.20.24
1031 மண்களி லரசு வைகும் வன்குபிர்க் களைக டீர்த்துப்
பண்கெழு மிறசூல் வேதப் புகழ்முனம் படர்ந்த தென்னக்
கண்களித் தமரர் வாழ்த்தக் கடிதினு காபென் றோதும்
வெண்கதிர் வெள்ளை வெற்றிக் கொடியைமுன் விரித்திட் டாரால்.
3.20.25
1032 மிடலுறும் வெற்றி யுக்கா பெனுங்கொடி மிசஃபு கைக்கொண்
டடனபி முன்பு செல்ல வலிமுனங் கொடியொன் றேகத்
தடமுறு மதீனா வேந்தர் தம்முனங் கொடியொன் றேக
விடனறக் கவிகை வெள்ள மெங்கணும் பரந்த தன்றே.
3.20.26
1033 பரந்தகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி
விரிந்தவப் படல தூளி மறைத்தன கொடியின் வீக்க
நிரைந்தன கொடியின் வீக்க மறைத்தன கவிகை நீத்தஞ்
சொரிந்தன கவிகை நீத்த மறைத்தன கவரித் துள்ளல்.
3.20.27
1034 படர்திரைக் கடலி னோதை கடந்தன படையி னோதை
புடைபடும் படையி னோதை கடந்தன புரவி யோதை
கடுவிசைப் புரவியோதை கடந்தன கரியி னோதை
தடவரைக் கரியி னோதை கடந்தன சலவாத் தோதை.
3.20.28
1035 உலம்பொரு தோளிற் றுன்னு மாலைக ளுகுத்த தேனுங்
கலன்பல வணிந்த மெய்யி னழிந்திடுங் கலவைச் சேறும்
விலங்கலின் புறத்துந் தாவும் வெம்பரி விலாழி நீரு
நிலன்படப் பிறந்த சேற்றா னெடும்பணை போன்ற தன்றே.
3.20.29
1036 கடிமலர்க் குவளைக் காடுங் கமலமு நெரிந்து சிந்தக்
குடைகொடி செறிந்த தொப்பக் குருகின மிரியல் போகப்
புடைபடுங் கதலிச் சூழல் பூங்கரும் படவி மாய
மடைசெறி தடங்கள் சூழ்ந்த மருதம்விட் டகன்று போனார்.
3.20.30
1037 நீட்டிலை மிடறு சாய்த்த நெடுங்கதிர்த் தினையின் சார்பிற்
கோட்டலர் கமழுங் கூந்தற் குறத்தியர் கவண்கல் லேந்திப்
பாட்டிசை மிழற்றுஞ் செவ்வாய்ப் பசுங்கிளி கடியு மோதை
கேட்டினி தாமாத் துஞ்சுங் கிளைவரைச் சாரல் போந்தார்.
3.20.31
1038 ஆம்பலங் குழலின் வாய்வைத் தாயர்க ளிசைக்கு மோதைத்
தேம்பினி மதுரத் தீம்பால் செவிமடுத் தினிது மாந்தி
வாம்பரி வீர ரியாரு முகம்மதின் சலவாத் தோதிப்
பூம்பொழிற் கொன்றை வேலி முல்லையுங் கடந்து போனார்.
3.20.32
1039 விரிபரற் பொரிசெம் பாலை வெறுநிலங் கடந்து விம்மி
முரிதருந் திவலை தூற்று முகிற்குடை நிழலி னேகி
யெரிவிழிப் பேழ்வாய் வெண்பன் மடங்கலேற் றினங்கள் போன்றோர்
வரையிடை வயவர் சூழ முகம்மதுற் றிறங்கி னாரால்.
3.20.33
1040 வடிசுதை தீற்று மாட மதீனமா நகரின் வள்ளல்
கொடுவரி யினங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண்
படைகொடு முறைந்தா ரென்னும் பருவர லொற்றர் கூற
வடலபா சுபியான் கேட்டோ ரடவியி னிறங்கி னானால்.
3.20.34
1041 எண்ணிறத் தனைய செம்பொ னிடுஞ்சுமைத் தொகுதி யாவுங்
கண்ணென வொருங்கு சேர்த்துக் காவலி னிருந்து நேமி
மண்ணகம் பரவு மக்கா மாநக ரரரசர்க் கெல்லாம்
விண்ணபத் திரத்தைக் தீட்டி விரைவுட னனுப்பி னானால்.
3.20.35
1042 பத்திரஞ் சிரசி னேந்திப் பாதைவிட் டொருபாற் சென்று
குத்திரப் புறங்க ணீந்திக் கொடுமரச் சரத்தி னேகிப்
புத்தொளி விரிக்கு மாட மக்கமா புரத்தின் வேந்தர்
மொய்த்தபே ரவையி னண்ணி வைத்தனன் முடங்க லன்றே.
3.20.36
1043 அபுஜகல் முதன்மற் றுள்ளோ ரனைவரும் திரண்டு வைகிப்
கவினுறும் ஷாமுக் கேகி வருமவர் கடிதிற் றீட்டி
யிவண்விடுத் தனுப்பு மோலை தனைவிரித் தியம்பு கென்னச்
செவிவழி புகுதக் கேட்டோ ர் செவ்வியன் வாசிக் கின்றான்.
3.20.37
1044 ஷாமெனும் பதியை நீந்தித் தலவர்நாற் பதின்மர் சூழ
வேமமும் பண்டமியாவுங் கொண்டியான் வருவ கேட்டு
மாமதி னாவின் வைகு முகம்மது படைகோ டெய்திப்
பூமனு முபய மார்க்கப் பொறையிடத் திறங்கி னானால்.
3.20.38
1045 இன்னணம் பதியி லுள்ளோ ரியாவருந் திரண்டு பூவிற்
பன்னரும் படைகொண் டீண்டிப் பாதையி னாப்பண் வைகு
மன்னவன் முகம்ம தென்போன் வலிகெடுத் தவனை வீழ்த்தி
நந்நிலை யெடுத்துச் சீர்த்தி நாட்டுத றுணிதல் வேண்டும்.
3.20.39
1046 இல்லெனி லெம்மோ டுற்றோ ருயிர்செகுத் தெனையு மாய்த்துச்
சொல்லரும் பணியும் பண்டத் தொகுதியுங் கவர்ந்து வாரி
யொல்லையிற் கொடுபோய்த் தன்னூ ருறைகுவ னுறுதி யென்ன
மல்லலம் புயத்தான் றீட்டும் பாசுரம் வாசித் தானால்.
3.20.40
1047 ஓலைவா சகத்தை கேட்டங் குயர்பதித் தலைவ ரியாரு
மாலையும் புயமும் வாகு வலயமுங் குலுங்க நக்கிச்
சீலமு மறனுந் தேய்த்த சிறுவரி லொருவ னின்னே
சாலவும் வலிய னென்றாற் சாற்றுவ தென்கொண் மாதோ.
3.20.41
1048 அடவியற் கரந்து பாதை யவர்களைத் தடிந்து முன்ன
ருடைமைகோ டுறைந்தா னம்மாற் காப்பதொன் றின்மை யாலே
படையொடு மின்னும் வந்தா னினிப்பகை தவிர்த்தி டேமாற்
புடவியின் முகம்ம தென்போன் புகழ்நிலை நிறுத்து வானால்.
3.20.42
1049 அருநிதிக் கிடையூ றாய்வந் தடுத்தவன் றன்னை யின்னே
பொருதடர்ந் தவனை வீழ்த்தி யாவிவிண் புகுத்தே மாகிற்
பரவைசூழ் நிலத்தி னந்தம் படைக்கலன் சுமந்த கையி
னுரமென்னாம் வீர மென்னா முயர்குடித் தலைமை யென்னாம்?
3.20.43
1050 எனவெடுத் திசைத்த மாந்தர்க் கெதிரிருந் தகத்தி னக்கி
வினையமுற் பவித்த புந்தி யபூஜக லென்னும் வீரன்
மனமுமுள் ளறிவு முட்க வயிரமு மறனும் பூணச்
சினமொடுங் கண்கள் சேப்ப வொருமொழி தெரிந்து சொல்வான்.
3.20.44
1051 பிறந்தநாட் டொடுத்து வாய்வீண் பேசுவ தலது நம்மான்
மறந்தரப் புகழே தேனும் வாய்மையின் முடித்த துண்டோ
அறந்தவிர் நமர்கட் கெல்லா மாண்மையின் பெயரு முண்டோ
வெறுந்தரை தடவன் மாற்றம் விடுமின்கள் விடுமி னென்றான்.
3.20.45
1052 ஆட்டிறத் தனைய வீர னபூஜகு லுரைத்த மாற்றங்
கேட்டலுந் தலைவ ரெய்தாக் கோபத்தீக் கிளரப் பொங்கி
நீட்டிய வுயிர்ப்பு வீங்கி நெடுங்கரம் பிசைந்து விம்மித்
தோட்டுணை வரைக ணோக்கி வீரத்திற் றுணிந்து நின்றார்.
3.20.46
1053 மறித்தெதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை யின்னே
தறித்தபா சுபியான் றுன்பந் தவிர்த்திடே மாகி லியார்க்குங்
குறித்துயிர்க் குயிராய் நின்ற குபலெனுந் தம்பி ரானை
வெறுத்தழற் குழியில் வீழும் வீணர்க ளாவே மென்றார்.
3.20.47
1054 தனதுயிர்த் தலைவ ரிந்த வஞ்சினஞ் சாற்றத் தீமை
புனையபூ ஜகுலென் றோதும் புன்மையன் றானும் வாளான்
முனைமுகம் மதுவை வீழ்த்தி முடிதுகள் படுத்தே னாகின்
மனைவியைப் பிறருக் கீந்த மதியிலி யாவே னென்றான்.
3.20.48
1055 அரசபூ ஜகல்சொன் மாற்ற மனைவர்க்கு மிஃதே யென்னப்
புரவல ரெவரு மொத்துப் பொருபடை யாவுந் தத்த
நிரையொடும் வருக வென்ன முரசநீண் மறுகு தோறும்
விரைவொடு மறைக வென்றா ரன்னது விளக்கி னாரால்.
3.20.49
1056 முரசதி ரோதை கேட்டு மொய்ந்ந்க ருள்ளோ ரெல்லாம்
விரிகதி ரெஃகங் கூர்வாள் வின்மழுச் சவளங் குந்தங்
கரதலத் தேந்தித் தாவுங் கடும்பரித் திரளி னோடு
மிருளறுங் ககுபத் துல்லா வெனுமிடத் தெய்தி னாரால்.
3.20.50
1057 கேடக மருங்கு சேர்த்துக் கிளரொளி வடிவாட் டாங்கிச்
சோடணிந் தரிய செம்பொற் சுடர்மணிக் கடகம் பூண்டு
தேடரும் வெற்றி மாலை சென்னியி னிலங்கச் சூடி
யாடலம் பரியி னேறி சைபத்து மவணின் வந்தான்.
3.20.51
1058 வெஞ்சின மடங்க லென்ன வெகுளியி னெழுந்து சேந்த
கஞ்சுகி யணிந்து சந்தக் கதம்பமான் மதங்கள் பூசிச்
செஞ்சுடர் மணித்தண் டேந்தித் திரண்மணிப் புயங்கள் விம்ம
வஞ்சினங் கூறித் தாவும் வாசிமே லுமையா வந்தான்.
3.20.52
1059 மணியணி பலவுந் தாங்கி வச்சிர வுடைவாட் சேர்த்துக்
கணைசொரி தூணி வீக்கிக் கார்முகங் கையி னேந்தி
யணியணி வீரர் சூழ வாலயம் புகுந்து தாழ்ந்து
பணிதர குபலைப் போற்றி யுத்பத்தும் பரியின் வந்தான்.
3.20.53
1060 சுரிகையை மருங்கு சேர்த்துச் சொரிகதி ரிலைவே லேந்திக்
குரகத நடத்தி வெல்வேற் குமரர்கள் பல்லர் சூழ
வரியென வெகுளி பொங்கி யாண்மையும் வலியுங் கூறி
விரிதருங் கவிகை நீழ லபூஜகல் விரைவின் வந்தான்.
3.20.54
1061 இன்னன வேந்த ரோடு மெண்பஃ தரசர் மொய்ப்ப
வந்நக ரறபிக் காபி ராயிரம் பெயர்கள் சூழ
மன்னிய சீறூ ருற்ற மைந்தர்க ளெவரு மீண்ட
பொன்னக ரென்னு மக்கா புரத்தினிற் புறத்துற் றாரால்.
3.20.55
1062 காணுதற் கிறுதி யில்லாத் திறத்தினர் கவலும் வெற்றிப்
பூணின ருயிரை யீந்து புகழினை நிறுத்தும் பொற்பார்
மாணுறுங் கிரியுங் கீறி வகிர்ந்தெடுத் தெறியும் வல்லார்
சேணுற நிவந்த வூழித் தீயையு மவிக்கு நீரார்.
3.20.56
1063 புடவிதொட் டெழுந்து வானிற் போவன போன்று மேன்மேற்
படர்திசை யெட்டு மெட்டிப் பறப்பன போன்றுந் துள்ளிக்
கடிதிரை யுவரி யேழுங் கடப்பன போன்று வாகை
விடுவிடென் றதிர்ந்து தாவும் வெம்பரிக் குழுவின் வேகம்.
3.20.57
1064 பரிகளிவ் வண்ணஞ் சான்ற நிலம்பரப் பின்றித் தோன்ற
வெரிவிழி கலுழ வேந்த ரிளையருங் குழாங்கொண் டீண்ட
வரமுறும் வெற்றி வள்ளன் முகம்மதை வெல்வே னென்னப்
பொருபடைப் பெருக்க நோக்கி யபூஜகல் பூரித் தானால்.
3.20.58
1065 வயிரொடு சின்ன மார்ப்ப வலம்புரி முழங்க வாரி
பெயுமுகி லிடியே றென்னப் பேரிகைக் குழாங்கள் பொங்க
வெயிலவன் கதிர்க டோ ன்றா வெள்ளைவெண் கவிகை மொய்ப்பத்
துயல்வருங் கொடிக டுன்னத் துரகத நடத்தி னாரால்.
3.20.59
1066 கதக்கடல் பரந்த தென்னக் கடந்தெழுஞ் சேனை வெள்ளப்
பதத்துக ளெழுந்து மேகப் படலங்க ளனைத்து மூடி
மதித்தவெண் டிசையுந் திக்கும் வானினுஞ் செறிந்து நாளு
மதிர்த்திரைப் பரவை வேலை யலையையுஞ் சுவற்றிற் றன்றே.
3.20.60
1067 பவளங்கள் குலைசாய்த் தென்னப் பழுத்தசெஞ் சாலிக் காடுந்
தவளவெண் டரளஞ் சிந்துஞ் சலஞ்சலத் தடமுங் காவுந்
திவளொளிக் குவளைக் காடுந் திசையெலாம் வழிய தாக
விவளவென் றெண்ண வொண்ணா தெழுந்தன சேனை வெள்ளம்.
3.20.61
1068 அடவிக ணெரியக் கானி னாறுகள் சேற தாகப்
புடைபடு மிறும்புங் கல்லும் பொடி படு நூறதாகத்
திடரிடங் குழிய தாகக் குழியிடந் திடர தாகப்
படர்கொடி விசும்பு தூண்டப் படைக்கட னடந்த தன்றே.
3.20.62
1069 கவிகையி னெருக்க மென்கோ கவரியி னெருக்க மென்கோ
சிவிகையி னெருக்க மென்கோ செழுங்கொடி நெருக்க மென்கோ
குவிபரி நெருக்க மென்கோ கொற்றவர் நெருக்க மென்கோ
சவுரியர் நெருக்க மென்கோ யாதெனச் சாற்ற மாதோ.
3.20.63
1070 விரிபெருங் கடலந் தானை வெள்ளமீக் கெழுந்து பாலைப்
பரல்வழி கடந்து வேற்றுப் பாடிக ளகன்று முட்சார்
பொரியரைக் காடு நீந்திப் பொருப்பிட மனைத்தும் போக்கி
யிருளறற் கொழிக்குங் கான்யாற் றிடத்தினி லிறுத்த தன்றே.
3.20.64
1071 அரியுளைக் கேச பந்தி யாடலம் பரிக ளியாவு
நிரைநிரை நிரைத்துப் பேரிச் சுமைநெடுங் கழுத்தல் சேர்த்து
முருகுமிழ் வெற்றி மாலை முரட்படை வேந்தர் வீரர்
வரிவயப் போத்துச் சூழ்ந்த மடங்கலின் வகி னாரால்.
3.20.65
1072 விண்கணி னமர ரியாரு மெல்லடி பரவி போற்று
மொண்கதி ருருவ வள்ளற் குறுபகை யாகிக் கூண்ட
புண்கதி ரெஃக மேந்தும் புரலவர் முகநோக் காது
கண்களைப் புதைத்து வெய்யோன் மேற்றிசைக் கடலு ளானான்.
3.20.66
1073 கதிரவன் கடலிற் புக்கான் கங்குலங் காலைப் போழ்தி
னதிர்கட றுயிலு மாறா யனைவருந் துயில்வ தானார்
சதிவர வறியாச் சிந்தை யபூஜகல் தானு மற்றக்
கொதிநுனை வேலி னோருங் கொடுங்கன வடுப்பக் கண்டார்.
3.20.67
1074 வெருவருங் கனவு தோன்ற விழித்தெழுந் தரச ரியாரு
மொருவருக் கொருவர் விள்ளா துள்ளத்தி னொடுக்கா நின்றா
ரெரிகதிர்ப் பரிதி வெய்யோ னெழுந்தன னெழுந்த பின்னர்
முரசுசங் கொலிப்பப் பொங்கி யெழுந்தது மூரித் தானை.
3.20.68
1075 கடுநடைப் புரவி வெள்ளத் தொட்டகங் கலித்துப் பொங்க
மிடலுடைக் கதிர்வெள் வேலும் வில்லொடு மிடையத் தாங்கிப்
படரரி யினங்க ளென்னக் காளையர் பல்ல ரேக
விடுகொடை கவிப்ப மன்ன ரேகியோர் புறத்தி லானார்.
3.20.69
1076 ஷாமினின் றெழுந்த பின்னர் தம்படை யலது வெற்றி
மாமதிட் புரிசை மக்கா மாநகர்ப் படையி னோடு
மாமதி யறியாச் சிந்தை யபூஜகல் வந்த வாறுந்
தோமறு மொற்றர் வள்ளன் முகம்மதுக் கறியச் சொன்னார்.
3.20.70
1077 இருவ கைப்பெரும் படையும்வந் தடுத்ததென் றிசைப்ப
மரும லர்ச்செழும் புயநபி முகம்மது கேட்டுத்
திருகு வெஞ்சினத் திருநிலம் பிளந்துமண் சிதறப்
பொரும றாமத கயமென விருக்குமப் போழ்தில்.
3.20.71
1078 முகிற்ப ரப்பிய நிழல்வரு முகம்மது தமக்குப்
பகுப்ப தற்கிட மில்லெனும் பரம்பொரு ளருளா
லிகற்ப டும்பகை யிரண்டிலொன் றுமதுகை யிடத்தி
னகப்ப டுத்தின னெனுமொழி யிறங்கிய தன்றே.
3.20.72
1079 ஒக்க லின்புக ழபூபக்கர் தமையர சுமறை
மிக்குத் தாதைமற் றுளமதி யரையெதிர் விளித்துப்
பக்க லின்புற விருத்திவெண் ணினும்புகழ் பரப்புந்
தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவ ரன்றே.
3.20.73
1080 படரும் வெம்பகை யிரண்டிலொன் றுமதுகைப் படுமென்
றுடைய நாயக னாயத்து மிறங்கின துலவிச்
சுடரும் வேற்படை யபூஜகல் தனைத்துணி துணிப்பப்
புடவி மேலமர் விளப்பதோ வல்லது புகழீர்.
3.20.74
1081 அரும்பு மென்மலர் வாவிசூழ் ஷாமிருந் தடுப்ப
வரும்பெ ரும்பொரு ளனைத்தையும் படையுடன் வளைந்து
கரம்ப டுத்திடத் துணிவதோ கருத்தினிற் றெளிந்து
விரும்பி ரண்டிலொன் றுரைமின்க ளெனுமொழி விரித்தார்.
3.20.75
1082 வனையு நீண்முடி முகம்மது முரைப்பவண் டரளம்
புனையு மார்பினர் கருத்தினுண் மதியெலாம் பொருத்தி
நினைவி னேர்வழி யிஃதுமுத் திரையென நிறுத்திக்
கனைகொள் வாம்பரி மன்னபூ பக்கர்கட் டுரைப்பார்.
3.20.76
1083 அறமு மின்பமும் வளர்த்திடு முலகெலா மளிப்பத்
திறன ளித்திடுஞ் சேரலர் பகையையுஞ் சிதைக்கும்
வெறுமை கண்டவர் தம்மைமேன் மையரென வியந்து
நிறையி லாப்பெரும் புகழ்தரு முலகினி னிதியே.
3.20.77
1084 என்னு நீர்மையிற் சாமினி லிருந்திவ ணடைந்த
பொன்னை யாம்வசப் படுத்துத னன்கெனப் புகழு
மன்ன தோற்றுதெற் கெனவினி துரைத்தனர் மகிழ்வி
னன்ன தேகருத் தெனவிரு வருமறைந் தனரால்.
3.20.78
1085 மாது லன்முதன் மூவரும் வழங்கிய வசனங்
காதி னுற்றருங் காரணர் கருத்தினுட் படுத்திச்
சீத நன்மொழி யொடும்பல ருடனினந் தெரிந்து
போத மின்புறச் சொலுமின்க ளெனுமொழி புகன்றார்.
3.20.79
1086 மந்தி ரத்தினிற் றலைவரு முரிமைமன் னவருந்
தந்தி ராதியன் ஸாரிக ளெனுந்தகை மையரு
நந்தம் புந்தியி னடத்துதற் பழுதென நடுங்கிக்
கந்த மென்புய நபிதிரு முனங்கழ றுவரால்.
3.20.80
1087 மேலே வன்றிரு மொழிவழி யுலகினை விளக்கிக்
கோன டாத்திய செழுமுகிற் கவிகையங் கோவே
கால மூன்றையுந் தெரிந்தநுங் கருத்தினுக் கிசைவ
போலும் புந்தியிற் சொலுமவ ரெவரிரும் புவியில்.
3.20.81
1088 அடிகள் புந்தியி னிருந்தவை யுரைக்கிலவ் வழியே
முடியு மெங்களா லுரைப்பதென் ? முரணடை யலரைத்
தடிமி னென்றலுந் தடிகுவ மெமர்கடம் முயிரை
விடுமி னென்றலும் விடுகுவ நுந்திரு வுளத்தால்.
3.20.82
1089 உயிர்க்கு றுந்துணை யவர்களிவ் வுரையெடுத் துரைப்பக்
குயிற்கு லங்கவி தருநிழல் வருபெருங் குரிசில்
வெயிற்ப டுங்கதி ரவனென தீனிலை விளக்கக்
கயிற்ப டும்பொரு ளெனவொரு மொழிகழ றுவரால்.
3.20.83
1090 பந்தி நீடிய தெருத்தொறும் பலமணி குயிற்றி
யிந்து தீண்டிய மேனிலை ஷாமினி லிருந்து
வந்த பொன்னொடு மாந்தரைச் செலும்வழி மறித்து
நந்தத் தாக்குத லிருப்பப்பின் னொருமொழி நவில்கேன்.
3.20.84
1091 மக்க மாநகர ரவரபூ ஜகுலுரை வழியி
னொக்கல் கூட்டுற வறபிக ளெவரும்வந் துறைந்தார்
புக்கி யங்கவர்ச் செகுத்துநம் புகழ்நிலை நிறுத்தற்
கிக்க ணந்துணி வதுபெருங் கருமமென் றிசைத்தார்.
3.20.85
1092 மதித்தி டாப்பெரும் பொருளொளி வினில்வடி வழகா
யுதித்த நன்னபி யுரைத்தலு முயிரெனு முரவோர்
கதித்த மாக்கட லெனும்படி யகங்களிற் களிப்ப
விதித்த திம்மொழி துணிவது மிவையென விசைத்தார்.
3.20.86
1093 புடைக்கும் பேரொலிப் பல்லியந் தொடுகடற் பொருவக்
கொடிக்க ணந்திரண் டிருவிசும் பிடைவெளி குறைப்பப்
படைக்க லத்தொடு மெழுந்துபோய் பதுறெனும் பதலை
யடிக்குக் கீழ்புறத் தெல்லையி னிறங்கின ரன்றே.
3.20.87
1094 ஆதி நீண்மதிள் ஷாமினி லிருந்துவந் தவரும்
பாத வத்திட முகம்மதன் றிறங்குபா சறைக்குக்
காத மாமெனக் கடற்கரைப் புறத்தினிற் கடிதி
னேத மின்றிய பெருநிதி யொடுமிறங் கினரால்.
3.20.88
1095 விரைசெய் மெய்நபி பாசறை யடுப்பத்தென் மேல்பா
லருவி யாறும்வன் பொருப்புமுண் டதற்குமப் புறத்திற்
பரியுஞ் சேனையு மிடைதர வபூஜகல் படையு
மொருவ ருந்தெரி யாவண மவணில்வந் துறைத்த
3.20.89
1096 வரையி டத்தினுங் கடற்கரை யிடத்தினும் வனத்தும்
பெருகுஞ் சேனைகொண் டிறங்கிவெம் பேரமர் விளைப்ப
வொருவர் தம்படைச் செய்தியங் கொருவர்தம் படைக்குத்
தெரிகி லாதிருந் தனர்செழுந் திறல்வய வேந்தர்.
3.20.90
1097 பற்ற லாருறை யிடந்தெரி தரச்சில பகுப்பா
யொற்ற ரைத்திசை திசைவிடுத் தனரவ ரோடி
வற்று றாப்பெரு நதிகளும் வனங்களு மலையுஞ்
சுற்றிப் பார்த்தவர் வரும்வழி தனிலொரு சுரத்தில்.
3.20.91
1098 நறவு தூற்றிய பொழிறிகழ் மக்கமா நகரி
னறபிக் காபிர்கள் பெருஞ்சுமைத் திரளினொட் டகமும்
பிறவுங் கொண்டிவண் வருதல்கண் டிமைப்பினிற் பிடித்து
வெறிக மழ்ந்தமெய் முகம்மதின் றிருமுனம் விடுத்தார்.
3.20.92
1099 இறுங்கு கோதும்பை நென்முத லியபல வேற்றிப்
பிறங்க லின்வனம் விடுத்தரும் பெருஞ்சுர வழியின்
புறங்க டந்தெவ ணேகுவிர் புகலிட மியாதென்
றறங்கி டந்தசொன் முகம்மதங் கவர்களைக் கேட்டார்.
3.20.93
1100 பருகு றாக்கொடும் பாலையிற் பெரும்புனல் படுத்து
முருக றாதமெய் முகம்மது திருமுக நோக்கி
யிருகி றாமலை மக்கமா நகரிடத் திருந்து
வருகி றோமென வுரைத்தன ரறபிவங் கிடத்தார்.
3.20.94
1101 விலகு நீள்கதிர்ச் சுதைநிலைச் சாமினை விடுத்துக்
குலவு மொட்டகத் திரளொடும் பலருடன் கூடி
யிலகும் வேற்கைய பாசுபி யானெவ ணுறைந்தான்
சொலுமி னீவிரென் றுரைத்தனர் நபியிற சூலே.
3.20.95
1102 துடவை சுற்றிய ஷாமினைத் துறந்தவ ருறைந்த
விடமு மெல்லையு மறிகில மபூஜகு லென்போ
னுடனெ ழுந்துத் பத்துசை பத்துமை யாவும்
படையும் வெம்பரிக் குழுவுட னிறங்கினர் பரிவின்.
3.20.96
1103 பதுறு மாமலைக் கப்புற மிருக்குமன் னவர்க்குப்
புதிய போசன வருக்கங்க ளிவைகொடு போந்தே
மிதுகொ லியாமறிந் தவையென வறபிக ளியம்பச்
சுதின மின்றென வுரைத்திறை யவன்றனைத் துதித்தார்.
3.20.97
1104 அறபிக் காபிர்க டமையொரு தலத்தினி லாக்கிப்
புறம டைந்தக லாதுவன் காவலிற் புகுத்தி
யிறுகக் கட்டிய வொட்டகைச் சுமைகளை யிறக்கி
மறுபு றத்தினி லிருத்துமென் றனர்முகம் மதுவே.
3.20.98
1105 வலிய வீரர்க ளெழுந்து நந்நபிமொழி வழியே
பொலிவு றுஞ்சுமை யனைத்தையு மொருபுறத் தாக்கிக்
கலின வாம்பரி யறபிக டமையுமக் கணத்தி
லொலிகொள் பாசறைக் குள்ளுறப் புகுத்தின ரொருங்கே.
3.20.99
1106 கவசம் போலுங்கண் போலுநற் காயத்தி னுறைந்த
நுவலு தற்கரு முயிரெனுந் துணைவரை நோக்கி
நபிக ணாயக மகக்களி நனிகனிந் தொழுக
மவுல லுற்றனர் தெரிதர வொருதிரு வசனம்.
3.20.100
1107 கூறு மக்கநன் னகரவர் குழுவுடன் கூடி
மாறு கொண்டிவ ணடைந்தன ரொல்லையின் வளைந்து
பாறு கொண்டுண வெஞ்சமர்க் களத்திடை படுத்தற்
கீறி தன்றிப்பின் வேறொரு சமயமு மிலையால்.
3.20.1010
1108 இற்றைப் போதினில் வாய்த்ததிங் கடலிறை யோனும்
வெற்றி தந்தனென் றாயத்து மிறக்கினன் விரிநீர்
வற்று றாக்கடற் புவியினில் தீன்பயிர் வளர்க்கப்
பெற்ற மென்றிய னபிமனம் பிரியமுற் றுரைத்தார்.
3.20.102
1109 ஈது முத்திரைப் பொருளென யாவரு மிசைந்து
மோது பேரலை மடுக்களுஞ் சுனைகளு முருகார்
தாது குத்தவெள் ளருவியு மலையடிச் சார்புங்
காது மாற்றலர்க் கிடமறக் காவலிற் பொதிந்தார்.
3.20.103
1110 அற்றைப் போதுபுக் கடைந்தபின் பாசற யனைத்தும்
பற்ற லார்க்கிட மறத்தலைக் காவலிற் படுத்தி
வெற்றி வேந்தர்க ளிருந்தன ரிருளற விளக்கி
யொற்றை யாழிவெய் யவன்கதிர் விரித்துதித் தனனால்.
3.20.104
1111 விடிந்த காலையி லபூஜகு லெனுமடல் வீர
னடைந்த பாசறை யெழுகவென் றெழுமுர சதிரக்
கடந்த தும்பிய களிரெனு மரசருங் கணமும்
படர்ந்த வெம்பரிக் குழுவுட னெழுந்தனர் பரந்தே.
3.20.105
1112 கோல வட்டவெண் கவிகையு நெடுங்கொடித் காடு
மால வட்டமுங் கேகயப் பீலியு மணியாய்
வேலை வட்டவெண் டிரையெனக் கவரியின் வீச்சும்
நீல வட்டவொண் விசும்பிட னறநெருங் கினவே.
3.20.106
1113 பேரி காகள மதிர்தர வபூஜகல் புறப்பட்
டார வாருதி முகம்மது திசையறி யாமற்
பாரின் மின்குலம் பரந்தென வேலொளி பரப்பி
வீரர் சூழ்வர வரவுகண் டவர்விளம் புவரால்.
3.20.107
1114 இகன்ம னத்தபூ ஜகல்பெரும் படையுட னெழுந்து
தகைவி னம்படை யுறைவது தனையறி யாம
லகல்வ தன்றிநம் மெதிரடுத் தடைந்தன னெனுஞ்சொற்
பகர்வ தாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே.
3.20.108
1115 ஒன்ன லார்படை யுறுவதென் றுரைவழங் கிடவே
கன்னி மாப்பெருந் தொகுதிக டமையலங் கரித்து
மின்னு குற்றுடை வாளெடுத் தரையினில் விசித்து
மன்ன ரியாவரும் போரமர்க் கோலங்கள் வனைந்தார்.
3.20.109
1116 உதித்த திங்களின் சவிகெடக் கவிகைக ளொளிரப்
பதித்த லத்தினும் விண்ணினும் கொடித்திரள் பறப்பக்
கதித்த வெம்பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதி
னிதத்த நன்மறை முகம்மது நபியுட னெழுந்தார்.
3.20.110
1117 சின்னம் பூரிகை பேரிகை தவில்பறை திடிம
னின்னி யம்பல முழக்கலிற் புவிசெவி டெடுப்ப
மன்னர் பேரணி கலனொளி பருதியின் மலிய
நன்ன யசல வாத்தொடும் வாழ்த்தொடு நடந்த
3.20.111
1118 கொதிகொள் வேலினர் வரிப்புலிக் குழுவெனக் குழுமப்
பதலை யின்புறம் விடுத்தடற் படைகொடு நடத்தி
யெதிரி லான்றுணை யொடுமொரு திடரைவிட் டிறங்கிப்
பதுறெ னுந்தலத் தாயினர் முகம்மது நபியே.
3.20.112
1119 ஹபீபு தம்பெருஞ் சேனையுங் கவிகையுங் கொடியு
மபூஜ குலுடன் வருபவ ரெவருங்கண் டறிந்தா
ரபூஜ கல்பெருந் தானையுந் துவசமு மார்ப்பும்
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவிற்கண் டறிந்தார்.
3.20.113
1120 திருகு வெஞ்சினக் கடகரி யனைவர் திரளை
யரசர் கேசரி யெனவரு மகுமது நோக்கி
யிருநி லத்தினிற் றருவெனு மிருகர மேந்திச்
சுருதி வல்லவன் றனையிரந் தொருமொழி சொலுவார்.
3.20.114
1121 உன்னு முன்றிரு மறைபடி றெனவுமிவ் வுலகி
லென்னை யுந்திருத் தூதனு மலவென விழிவாய்ச்
சொன்ன காபிர்க ளடைந்தன ரிவருட றுணிப்ப
மின்னும் வாள்வலி யெனக்கரு ளெனவிளம் பினரால்.
3.20.115
1122 இந்த நன்மொழி யிறையவ னிடத்திரந் தேத்தி
யந்த ரத்தினி லமரரா மீனொலி யதிரக்
கந்து கத்திருந் தருமறை பாத்திஹா வோதிச்
சுந்த ரப்புயத் துணைவரை யருளொடு நோக்கி
3.20.116
1123 பேத வஞ்சமன் னவர்கடம் பெயர்களைக் குறித்துச்
சோதி மென்கர மெடுத்திரு நிலத்தினைச் தூண்டி
யேத முற்றுயிர் விடுமிட மிஃதிஃ தெனவே
பூத லம்புகழ் திருநபி வாக்கினிற் புகன்றார்.
3.20.1173
1124 கருத லார்படு களமிது தலமெனக் காட்டிச்
சுருதி நூன்முறை பெருக்கிய நாவினர் சூழ
விருது நீள்கொடி யிருபுற முலவிமேல் விளங்கப்
பருதி போற்பெரும் புகழ்நபி படையணி வகுப்பார்.
3.20.118
1125 கடகரித்திர ளெறிந்தரும் புலவறாக் கதிர் வேற்
பிடிக்கும் வெற்றியஸ் ஹாபிக ளினிற்சில பெயரை
வடிக்கு மாமறை யவரிடத் தினில்வர வழைத்து
நடிக்கும் வெம்பரி யினருளந் தெரிதர நவில்வார்.
3.20.119
1126 செறுநர் வெம்படை யடரினு மிவண்சித காமல்
விறள்கொள் வில்லினிற் பொருவதல் லதுகதிர் விரிவா
ளுறையை நீக்கலென் னுறைபிறந் ததற்பினென் றுரைத்து
நெறியி னோரிட நிறுத்தினர் நிலைதவ றாதார்.
3.20.120
1127 நிகரின் மன்னவர்க் கினிதுரைத் தொருதல நிறுத்திச்
செகத லம்புக ழபூபக்கர் செழுமுக நோக்கி
யிகல றுந்தனி முதலவ னுதவிகோ டிவணிற்
ககனி ழிந்தம ராதிபர் வரவுகண் டனனால்.
3.20.121
1128 ஒங்கல் போலுமை யாயிர மலக்குக ளுடனே
நீங்கில் பஞ்சகலி யாணியிற் றமனிய நிறத்த
பாங்க ரின்சரு வந்தணிந் தரும்படைக் கலன்க
டாங்கி விண்ணிடை யெதிர்ந்தன ரிருவிழி தழைப்ப.
3.20.122
1129 எந்த னாருயிர் ஜிபுறயீ லிவணம ரடுத்து
வந்து நின்றனர் வெற்றியும் பிடித்தவாள் வலியு
மந்த நாயக னமக்களித் தனனென வறைந்தா
ரிந்து வந்தெதிர் பகிர்தரப் பகர்தரு மிறசூல்.
3.20.123
1130 அலியை யும்புகழ் தரும்ஹமு சாவையு மடல்வாள்
வலிமை மிக்குபை தத்தையு மூன்றணி வகுத்துச்
சிலைகொள் வெம்பரி வீரர்கள் கணம்பல செறிய
நிலைகொ ளும்படி தாமுமோ ரணியென நின்றார்.
3.20.124
1131 அபுஜ கல்முத லுத்பத்து மவன்மக னொலீதும்
பவுரி வாம்பரி சைபத்தும் பெருபடைக் கடலு
நவுரி பம்பைக ளார்த்திட நாலுகை யாகப்
புவன மெங்கணு நடுங்குற நடத்தினர் புரவி.
3.20.125
1132 முதிரும் பூசல்கொண் டிருபெரும் படைகளு முன்னி
யெதிருங் காலையி லபூஜகல் கரமெடுத் தேந்திப்
பதியி ருந்துற முறைகளைப் பழித்தபா தகரைச்
சதிப டுத்திறை வாவெனத் தனியிரந் தனனால்
3.20.126
1133 எட்டிக் கொண்டெமக் குமக்கென விருக்குமவ் விடத்திற்
சுட்டிக் கொண்டவ ரிவரெனப் பெயர்களைத் தொகுத்துத்
தட்டிக் கொண்டுகை யேந்திநின் றிரந்தவன் றனைத்தான்
றிட்டிக் கொண்டது போலிருந் தனசொலுந் திறனே.
3.20.127
1134 உறுசி னத்துத் பத்துசை பத்துட னொலீது
முறுகு வெஞ்சின வெகுளியிற் புருவங்கண் முரியத்
தெறிக னற்பொறி தெறித்திமை விழிக்கடை தீயத்
தறுகி லாதுமுன் னடத்தினர் துரகதத் தளத்தை.
3.20.128
1135 தேன் றிகழ்ந்தபொற் புயவரைச் செழுந்திற லலியு
மூன்ற தும்புவே லுபைதத்து மடையல ருடலங்
கீன்ற வேல்ஹமு சாவும்வெம் படைகொடு கெழுமி
மூன்று பேருமம் மூவர்க ளெதிரின்முன் னினரால்.
3.20.129
1136 படர்தென் கீழ்த்திசை யிறையவன் சுடுகனற் படையும்
வடவை யும்வெகுண் டெதிர்மலைந் தெனவளை கிரியும்
புடவி யுள்விழக் கடல்சுவ றிடப்பணி புரள
விடன றத்தனி தாக்கின வெதிரிரு படையும்.
3.20.130
1137 முரசு துந்துமி திண்டிம முருடுமெல் லாரி
பெரிய காகள நவுரிபூ ரிகைதவில் பேரி
யிருவ கைப்படை யினுங்கிடந் தெழுந்தபே ரோதைக்
குரவு நீர்ப்பெருங் கடலொலி காண்கிலா தொளித்த.
3.20.131
1138 பரிக்கு ரத்தினு மாடவர் தாளினும் பரித்துத்
துரக்குந் திண்வளை யுருளினும் பிறந்தவத் தூளி
யெரிக்கும் வெங்கதிர் வெய்யவ னிடந்தெரி யாம
னெருக்கி நின்றது திசையினும் விசும்பினு நிறைந்தே.
3.20.132
1139 படல தூளிகண் மேகத்தி னிறைந்தபஃ றிசையு
மிடிக ளொத்தவின் னாணொலி வீரர்க ளெதிர்ந்து
தொடுகை வாளொலி மின்னெனப் பலதுடி துடிப்பக்
கடிகொண் மாமழை சொரிந்தெனச் சொரிந்தன கணைகள்.
3.20.133
1140 பரவை யொத்தன சேனையி னிரைநிரை படர்ந்த
திரைக ளொத்தன வாவுமெம் பரித்திரைச் சுறவின்
விரைவை யொத்தன வேந்தர்க டிரிந்தவை விரிநீ
ரரவ மொத்தன நெருங்கிய படைதரு மரவம்.
3.20.134
1141 மிதித்துஞ் சோடணி முகத்தினிற் றாக்கியும் விரவிற்
குதித்த கொட்பியினும் வீதியிற் றிரிந்துங்கொன் னுனைவாள்
பதித்த திண்கர வீரர்க ளுடலுயிர் பதைப்பச்
சதித்துத் தாவின திரிந்தன சிலசில சடிலம்.
3.20.135
1142 இடியி னொன்றொலி யெனவெழுந் தனுமனித் திமைப்பிற்
படியின் மட்டிகி ரிகளெனக் கறங்கெனப் பலகா
னெடுநி லஞ்சுழல் வளியென நினைந்ததிக் கனைத்துங்
கொடிய வெம்படை யிடைதிரிந் தனசில குதிரை.
3.20.136
1143 வெடித்து மண்டையின் மூளைகள் சொரியமெல் லிதழைக்
கடித்த பற்பல வுதிர்தரக் கனல்விழி கலங்கப்
பிடித்த கையொடும் வின்முறி தரக்குடர் பிதுங்க
வடித்த பந்தெனத் திரிந்தன வாடலம் பரிமா.
3.20.137
1144 வேலிற் றாக்கினர் வில்லினிற் றாக்கினர் விரிமுக்
கோலிற் றாக்கினர் வாளினிற் றாக்கினர் குடங்கைத்
தோலிற் றாக்கினர் சுரிகையிற் றாக்க்கினர் துரத்திக்
காலிற் றாக்கினர் தாக்குறும் பேரமர்க் களத்தில்.
3.20.138
1145 உரத்தி னுஞ்செழுந் தோள்வரை யிடத்தினு முயர்வேற்
கரத்தி னுமலர் முகத்தினுங் கழுத்தினுங் கரிய
சிரத்தி னுமிதழ் கறித்திடும் வாயினுஞ் சினமங்
குரித்த கண்ணினு மொழுகின வருவியொத் துதிரம்.
3.20.139
1146 கால சூறையி னொத்தெதிர்ந் தெழுகுர கதத்தின்
மேல றுந்தன வளைமுக மறுந்தன மிதிகா
னால றுந்தன காயத்திற் குருதியி னனைந்து
வால சூரிய னெனநின்ற வீரர்கை வாளால்.
3.20.140
1147 காந்து வெவ்வழ லெனப்படைக் கலன்களைக் கடிந்து
போந்த மள்ளர்க ளாவியை விசும்பிடைப் போக்கிப்
பாய்ந்த மாக்களி னுரங்களை யிருவகிர் படுத்தி
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர்கை வேல்கள்.
3.20.141
1148 கேட கத்தையுந் தாங்கிய கரத்தையுங் கிடந்த
சோடி ணைப்படு மிரும்பையு முரத்தையுந் துளைத்துள்
ளூடு றப்புகுந் திருந்தவல் லுயிரையு முருவிச்
சாடி யப்புறம் போயின வீரர்கைச் சரங்கள்.
3.20.142
1149 கொடியொ டிந்தன விரிகுடை நுறுங்கின குணிலா
லடிப டும்பறை பேரிகை யுடைந்தன வரசர்
முடித கர்ந்தன சோடுக ளுதிர்ந்தன மூரித்
தடமு றுங்கரத் தேந்திய வீரர்கைத் தடியின்
3.20.143
1150 மூசி வண்டுடைத் தும்பையந் தொடையலை முடித்துத்
தூசி நின்றவர்த் துணித்துவெங் கொடிப்படைத் துரத்தி
வாசி யின்குழுக் குறைந்திடப் பிணக்குவை மலிய
வீசி நின்றனர் சிலசில திறல்வய வீரர்.
3.20.144
1151 வாடை கொண்டுறும் பரியொடும் வீரரை மாய்த்து
நீடும் வேல்கெட விடுத்தவ ணிலத்திடைக் கிடந்த
ஆடல் வெம்பரித் தாளெடுத் தொருகையி லாக்கிச்
சாடு கின்றனன் வயவரை யதிலொரு தலைவன்.
3.20.145
1152 வெற்றி வாட்கணை பொருதழிந் திடலும்வெஞ் சினத்தின்
முற்றி நின்றனன் கண்டொரு திறலவன் முன்னி
யிற்று வீழ்ந்திடத் தோளினை வாளினா லெறிந்தா
னற்ற தோளெடுத் தவன்றனைச் சிதைத்தன னவனே.
3.20.146
1153 அடுத்துப் பிற்புறத் தூணியிற் கிடந்தவம் பனைத்துந்
தொடுத்து மள்ளரைத் துணித்தறத் தொடுசர மிலவான்
மடுத்து மர்பகங் கிடந்தவம் பனைத்தையும் வாங்கி
விடுத்து நின்றனன் சிலைகுழைந் திடவொரு வீரன்.
3.20.147
1154 பம்பு மாக்கடற் றானைக ளிரிதரப் படுத்தி
வெம்பு மாத்திர ளொன்றொடொன் றடித்தற வீழ்த்திக்
கம்ப மூடெறிந் திருகவுண் மதசலங் கரைக்குந்
தும்பி யில்லெனச் சலித்துநின் றனனொரு வீரன்.
3.20.148
1155 கூரும் வெங்கணை யனைத்தையுந் தொலைத்துக்குற் றுடைவான்
வாரி சச்செழுங் கரங்கொள வெகுண்டொரு வயவ
னார மார்பினில் வேல்கொடு தாக்கின னவனை
வீர வேலுற நடந்துகொன் றனனொரு வீரன்.
3.20.149
1156 பாரின் வெங்களத் திடைவெறுங் கயனெனனப் பரியை
யூரவிட் டடர்ந் தெதிர்த்தனை வெகுண்டுவண் டுறுக்கி
மூரி வெம்பரி யுடனவன் வாயினு மூக்குஞ்
சோரி கொட்டிடப் புடைத்தன னதிலொரு சூரன்.
3.20.150
1157 அச்சு வத்தினும் வீரர்கள் புயத்தினு மழுந்தத்
தச்ச வாளியும் வேலும்பைங் குருதிகள் சாய்ப்ப
விச்சை யின்களத் திடனறத் திரிந்தவ ரெவரு
மெச்சி லென்றுறை வாள்கழற் றிலனொரு வீரன்.
3.20.151
1158 நீல மாமுகிற் றுணியெனுங் கேடக நிரையின்
பால்பு குந்துட றலைகர மிருவகிர் படுத்திக்
கோலி நின்றமன் னவன்றனை யெதிரினிற் குறுகி
வேலி னாலெடுத் தேந்தின னொருவய வீரன்.
3.20.152
1159 பெய்யும் வில்லிதென் மல்லின ரெவரெனப் பேசி
யைய மற்றவன் றனையொரு வீரன்சென் றடுத்துச்
செய்வ தீதென வீழ்த்திவன் சிரத்தினைச் திருகிக்
கையி னேந்திநின் றாடின னெதிரமர்க் களத்தில்.
3.20.153
1160 ஆவி யோசின மோபெரி தெனவறி கிலன்போர்த்
தாவிப் போக்கினன் கரத்தொடு மிருதுணைத் தாளும்
பூவின் மேற்கிடந் தார்ப்பொடும் வயவரைப் புகழ்ந்து
கூவி யோய்ந்திலன் போர்வரு கெனவொரு குரிசில்.
3.20.154
1161 முடக்கு வாற்பகு வாயரி யேறென முனியுஞ்
சுடர்க்கண் வேங்கைக ளெனச்சில வீரர்க டுறுமிக்
கடக்கும் வெற்றியி னினையன வமர்செயக் கடிதி
னுடைக்கும் வெம்பரி வீரருக் காகவந் துற்றார்.
3.20.155
1162 கால மாருதப் பரியினை விசையினிற் கடவி
யால காலமொத் தரசரைப் பிணக்குவை யாக்கி
மேலுந் தாக்கிவெம் பரியினந் தரையினில் வீழ்த்திக்
கோல மார்கதிர் வாளினிற் கூறுசெய் தனரால்.
3.20.156
1163 கருக்கொள் காரிடி யெனக்கரு தலர்கள்கட் டழிய
முருக்கும் வேளையுக் காசகை யாயுத முறிந்து
செருக்கொ டுந்திரிந் துலவிய பரியினைத் திருப்பி
யருக்க னொத்தநம் முகம்மது நபியிடத் தானார்.
3.20.157
1164 பால டுத்தவுக் காசசெம் மலர்முகம் பார்த்தோர்
கோலெ டுத்துநந் நபியவர் கரத்தினிற் கொடுப்ப
மால டுத்தகைக் கேந்திய வுடன்வடி வாளாய்ச்
சூல டுத்தமை மின்னினுஞ் சுடரிலங் கியதே.
3.20.158
1165 மன்னர் மன்னபி கொடுத்தகைக் கோலொரு வாளா
யிந்தி லம்பெற விருந்ததைக் கரத்தினி லேந்திப்
பொன்னி லங்கிய குசைப்பரி யொடும்படைப் புகுந்து
முன்னர்த் தாக்கினு மும்மடங் கெனமுருக் கினரால்.
3.20.159
1166 நீளும் வேலறுந் தனகதை யறுந்தன நிருபர்
தோள றுந்தன சோடறுந் தனதுர கதத்தின்
றாள றுந்தன கேடக மறுந்தன தவைர்
வாள றுந்தன குடைகொடி யறுந்தன மாதோ.
3.20.160
1167 மாறு பட்டவர் சிரத்தினு முரத்தினு மலிய
வூறு பட்டன வுதிரங்க ளூற்றெடுத் தொழுகிச்
சேறு பட்டன நெடுநில மணியொடு திறனும்
வேறு பட்டன பட்டன காபிர்கள் வீரம்.
3.20.161
1168 தலைகு விந்தன கரத்துணி குவிந்தன தரியார்
சிலைகு விந்தன படைக்கலங் குவிந்தன திரளி
னுலவு வெம்பரி யுடனடல் வேந்தர்க ளுடல
மலைகு விந்தெனக் குவிந்தவுக் காசகை வாளால்.
3.20.162
1169 உக்கி ரப்பரி நடவிவெள் ளுருமென வுரறிக்
கைக்க டுத்தலை விதிர்த்துவெங் காபிர்கள் சூழ
மிக்க சைபத்தென் றோதிய விறலரி வீரன்
புக்கி னன்றிரு நபிதுணை யவர்பொரு மிடத்தில்.
3.20.163
1170 அடர்ந்து சைபத்து வரவுகண் டடலரி ஹமுசாத்
திடந்த ருங்கதிர் வாளினை நோக்கிக்கண் சிவந்து
தொடர்ந்து சூறையிற் றிரித்துவெம் பரியினைத் துரத்தி
யிடந்த ரும்பெருங் களத்திலங் கவன்முன மெதிர்ந்தார்.
3.20.164
1171 மாறி லான்றிரு நபிக்குரைத் திடுங்கலி மாவை
வேறு கொண்டனை புந்தியற் றனைமுனம் விதித்த
வீறு நாளிவை யோவினை சூழ்ந்ததோ வெதிர்ந்தாய்
கூறு கூறென நகைத்தவன் முனங்குறு கினரால்.
3.20.165
1172 நீங்க ருங்கிளை யிழந்துமுன் னெறிநிலை தவறித்
தீங்கி னுட்படும் பதகவென் றிருவிழி சிவப்ப
வோங்கும் வாளெடுத் தசைத்திகழ் கறித்துவண் டுறுக்கிப்
பாங்க ரிற்கரங் கெனத்திரித் தனன்வயப் பரியை.
3.20.166
1173 வாவு லெம்பரி யிழிந்தெனை யொருதரம் வணங்கிச்
சேவ கத்தினைத் தவிர்பிழை யலவெனிற் றீங்கி
னேவல் கொண்டுனை விடுத்தபொய் முகம்மதி னிடத்திற்
போவ தற்கிட மிலையிறந் தனைநொடிப் போதில்.
3.20.167
1174 ஈது முத்திரை யறிகென சைபத்தென் பவனங்
கோதி நின்றனன் கேட்டனல் வெகுளியிற் றுனைப்போல்
வாது ரைப்பதின் றமரறி குவனென வகுத்துக்
காதும் வாளையுந் தோளையு நோக்கிக்கண் சிவந்தார்.
3.20.168
1175 கொதித்த கண்ணெரி தவழ்தரக் கொடுங்கதிர் வாளான்
மதித்த மன்ஹமு சாதிரு மணிமுடி யிலக்கா
யெதிர்த்துக் தாக்கினன் றாக்கலுங் கேடகத் தேந்தி
யதிர்த்து வீசினர் வீசலுந் தாங்கின னவனே.
3.20.169
1176 கையின் வேலெடுத் தெறிந்தனன் கதிர்முடி ஹமுசா
மெய்யிற் சோட்டினிற் றாங்கின கடுப்பினில் வெகுண்டு
செய்ய வெங்கதை யெடுத்தடித் தலும்படச் சிதறி
யைய மற்றற நொறுங்கின கேடக மன்றே.
3.20.170
1177 கட்டு வாம்பரி யினைப்பரி முகத்தொடுங் கடவி
வெட்டு வாரெறி வார்மணி வேலினை வேலிற்
றட்டு வார்புடைப் பார்திரி வார்தடக் கதையா
லொட்டு வார்திறஞ் சாய்த்தில ரொருவருக் கொருவர்.
3.20.171
1178 மடித்து வாயிதழ் கறித்துச்செம் மணிக்கதை யோங்கிப்
புடைத்த னன்ஹமு சாதிருக் கொடிவிலாப் புறத்தி
லிடிக்கு நேரெனு மடியினிற் சினந்துவா ளெறிந்தா
ரடற்ப ரிக்குசை யொடுமவன் கரமறுந் தனவால்.
3.20.172
1179 கரந்த றிந்திட வோங்கினன் மறுத்துமக் கதையு
முரந்தி கழ்ந்தவன் சிரமும்பொற் சோடுட னுடலும்
பரிந்த பக்கரைக் குதிரையு மிருபகுப் பாக்கி
விரிந்த பாரிடத் தினிற்கிடத் தினரொரு வீச்சில்.
3.20.173
1180 வீரன் சைபத்து மடிந்தன னெனும்வெகு ளியினாற்
கோர மாமத கரடவெங் களிறெனக் கொதித்துக்
காரின் மின்னெனு மயிலொடும் பரியினைக் கடவிச்
சாரும் வெம்படை யதிர்தர வொலீதுவந் தனனால்.
3.20.174
1181 பச்சி ரத்தச்செஞ் சேற்றழ றெழுநெடும் பாரின்
வச்சி ராயுதங் கொடுவரு மொலீதுள மறுக
வச்சு வத்தொடு முதன்முறைச் செருவிளை யாட்டுக்
கிச்சை யின்படிக் கிடைத்ததென் றலியும்வந் தெதிர்ந்தார்.
3.20.175
1182 கலின வாம்பரி வீரரி லெனதுகை யறிய
வலிய வஞ்சக முகம்மதே யெதிர்வரல் வேண்டுஞ்
சிலையுந் தண்டமுங் கட்கமுந் தரித்தொரு சிறுவ
னலிவி லாதிவ னோவெதிர் பவனென நகைத்தான்.
3.20.176
1183 படைக்க லத்தொடு முனையும்வெம் பரியையும் படியி
னடித்து வீழ்த்துவ தரிதல வெதிர்ந்தனை யாயிற்
பிடித்து நோக்குவ திலையுன துயிர்க்கொரு பிழையா
யிடுக்க ணெய்துமுன் சார்பிடத் துறைகவென் றிசைத்தான்.
3.20.177
1184 அறிவின் செய்வினை தவிர்வினை யறிகிலா தவரே
சிறுவர் பூவினிற் சிறுவரா யிருந்துஞ்செவ் வியதீன்
முறைமை நின்றுநல் வணக்கமு மொழுக்கமு முதிர்ந்தோர்
மறனு மாண்மையும் பெரிதென அலிவகுத் துரைத்தார்.
3.20.178
1185 தரும மென்றுரை வழங்கின னம்மொழி தனைநீ
வரும மென்றுகொண் டிகழ்ந்தனை யுனைவரைந் திறுக்கி
யெரிமு னாக்குவன் காண்டியொல் லையினென விசைத்தான்
பொரியுஞ் செந்தழல் கெழுமிய குழியிடைப் புகுவான்.
3.20.179
1186 நாய கன்றிருத் தூதெனு முகம்மது நபியைக்
காயும் வஞ்சகக் கொடியனென் றுரைத்தகட் டுரைக்குந்
தீயி னிற்புகுத் திடுவனென் றெனைச்செறுத் ததற்கும்
வாயி னைக்கிழித் தெறிவன்கண் டறியென வகுத்தார்.
3.20.180
1187 இசைத்த வாசகங் கேட்டலு மிருவிழி கனலக்
கசைத்த லம்பொடி படப்பரி புடைத்திதழ் கடித்து
விசைத்தி டக்கரக் கேடகங் குலுக்கிவெங் கதிர்வா
ளசைத்தெ றிந்தன னாடல்வெம் பரிப்புலி யலியை.
3.20.181
1188 எறிந்த வாளலி கதையினிற் றாக்கவெண் பகுப்பாய்
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல்கொடு முனிந்து
பறிந்து போம்படி விடுத்தனன் பன்மணிக் கதிரி
னிறைந்த கேடகத் தெற்றவு மிற்றதந் நெடுவேல்.
3.20.182
1189 அயிலுங் கட்கமு மறுந்தன வெனமன மழுங்கி
யெயிற துக்கிநாக் கடித்துநின் றவன்றனை யெதிர்ந்து
பயிலும் வெம்படைக் கலனுள வெனிலினம் பாரென்
றியற ருந்திரு மறைநபி மருகர்நின் றிசைத்தார்.
3.20.183
1190 உற்ற வாசகங் கேட்டலும் வலியதண் டோ ங்கிச்
சுற்றி விட்டெறிந் தனன்பிடித் திடக்கையாற் சுழற்றி
மற்ற வன்புயத் தெறிந்தனர் வனைதுடர்ச் சோடு
மற்றி றுந்தத் தண்டமு நுறுங்கிய தன்றே
3.20.184
1191 பின்னு மோர்வடி வாளினைக் கரத்தினிற் பிடித்து
மன்னு வாம்பரி யலியின்மே னீட்டினன் மறுத்துங்
கொன்னு னைக்கதிர் வாளினிற் றாங்கினர் கொதித்துச்
சின்ன பின்னங்கள் படுத்திடப் பரியினைத் திரித்தார்.
3.20.185
1192 ஒலிதும் வெம்பரி துரத்திட வூழிவெங் காலு
மலியும் வெவ்வழல் வடவையு மெதிர்ந்தன மலைந்து
கலினெ னும்படைக் கலத்தொனி திசைதிசை கதுவப்
புலனு றைந்தவ ரதிசயித் திடும்படிப் பொருதார்.
3.20.186
1193 கன்றி லாமனத் திறத்தவ ரிடுபடைக் கலன்க
ளொன்றொ டொன்றெறிந் தழற்பொறி தெறித்திட வொளிரும்
வென்றி வாளலி செழுங்கர விசைதரும் விரைவிற்
குன்று போல்விழுந் தவிந்தன னொலீ தெனுங் கொடியோன்.
3.20.187
1194 கலின வாம்பரி மிசைகரக் கடுத்தலை யுடனு
மொலிது வீழ்ந்தது கண்டுத்து பத்தெனு முரவோன்
புலியெ னும்படி சினந்தெழுந் தடற்பரி புடிஅத்து
வலிய வீரர்கள் பொருமமர்க் களத்திடை வந்தான்.
3.20.188
1195 உதுபத் தென்னுமக் கொடியவ னடந்தவுக் கிரத்தி
னெதிரெ ழுந்துபை தத்தெனும் புரவல ரேகிக்
கதிர்கொள் வாள்கொடு தாக்கினர் கதையினிற் பிடித்து
முதிரும் வெங்கதி ரயில்கொடு முனிந்துமோ தினனால்.
3.20.189
1196 அள்ளி லைக்கதிர் வேலினை வாளினா லறுத்து
வள்ள றாக்கலுந் தாக்கினன் செழுங்கதிர் வாளால்
விள்ள ரும்படி யொருவருக் கொருவர்வாள் விதிர்ப்பக்
கொள்ளி வட்டங்க ளெனத்திரிந் தனகுர கதங்கள்.
3.20.190
1197 காற்றை யொத்தன விசையினிற் றாக்கினிற் கருவா
னேற்றை யொத்தன வெகுளியி னெரியையொத் தனவாற்
சீற்ற முட்கொடு மெழுந்தன பறந்தன தெரிந்து
சாற்றும் பேரெவ ரிருவர்தங் குதிரையின் சாரி.
3.20.191
1198 சக்க ரத்தினும் வேலினும் வாளினுந் தாக்கு
முக்கி ரத்தினி லிருவர்மெய் யினுமொழு குதிரங்
கக்கி நின்றன வூறுக ளிடனறக் கலிப்ப
மிக்க வெஞ்சமர் விளைத்தன ரிருவரும் விரைவின்.
3.20.192
1199 விரைவி னிற்பெரும் போரினை யிருவரும் விளைப்ப
வரியெ னுந்திற லலியும்வெம் பரிஹமு சாவு
மொருநொ டிக்குள்வந் தடுத்தன ருத்பத்தென் பவனை
யிருநி லத்திடை வீழ்த்தின ருதிரங்க ளிழிய.
3.20.193
1200 வேந்தர் மூவரு மிறந்திட வபூஜகில் வெகுண்டு
காந்து வெங்கனல் விழியெரி தரக்கரம் பிசைந்து
மாய்ந்தி டும்பெருங் களத்திடை தீனவர் மறுகப்
பாய்ந்தி டும்புலிக் குழுவென நடத்தினன் படையை.
3.20.194
1201 ஆட லம்பரி யொடுந்திறற் பரிசுகள்வந் தடர்த்த
நீடும் வேலுடன் வேலவ ரடர்த்தனர் நெருங்கிச்
சாடும் வாலுடன் வாளின ரடர்த்தனர் தாக்கிக்
கோடும் வில்லுடன் வில்லின ரடர்த்தனர் குழுமி.
3.20.195
1202 விடுகை யம்பினுங் கதையினு மழுவினும் விடமார்
நெடிய வேலினுஞ் சக்கரத் தினுமுட னெரியப்
படுக வண்கலி னெறியினு முரத்தினிற் பதியத்
தொடுச ரத்தினும் விசும்பினை யிடனறத் தூர்த்தார்.
3.20.196
1203 வன்பி றந்திடச் செலுந்திறத் தவர்செழு மார்பிற்
பொன்பி றந்தபன் மணிசிறி திமைத்தன பொருபா
ரின்பி றந்தசெந் தூளியி னிடைபல கோடி
மின்பி றந்தெனப் பிறந்தன வாளொளி விளக்கம்.
3.20.197
1204 பெருகும் பல்லியத் தொலிப்பினும் படைக்கலன் பிணங்கி
மருவு மார்ப்பினும் வருஞ்சிலைக் கலிப்பினு மலிந்த
புரவி யார்ப்பினும் வீரர்க ளார்ப்பினும் போரி
னிருதி றத்துமன் னவர்களுந் தலைமயங் கினரால்.
3.20.198
1205 முருகி ருந்தபைந் தொடையலுஞ் சருவந்த முடியுங்
கருகும் வட்டவொண் பரிசையு மணிபல கலனும்
விரித ருஞ்செழுந் துகிலுங்கஞ் சுகியும்வெம் பரியுங்
குருதி நீரினி னனைந்துசெந் நிறத்தினைக் கொடுத்த.
3.20.199
1206 வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு
மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல்கொடு மார்பிற்
கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினிற் கலிமாச்
சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரிவெங் களத்தில்.
3.20.200
1207 படர்ந்து கொன்றனர் சிலர்சில ரிழிந்துவெம் பரியை
நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையுமற் றொழிந்து
கடந்தி ருந்துகொன் றனர்சிலர் சிலர்மனங் கனன்று
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி.
3.20.201
1208 அண்டனர் நாயகன் மறைநெறித் தீனிலை யவரு
மிண்டு பேசிய அபூஜகல் காபிர்வெம் படையு
மண்டு பேரமர் விளைத்திட முகம்மது நயினார்
கண்டு வேகமற் றுண்டெனச் சிவந்தகட் கடைகள்.
3.20.202
1208- வேறு
சேவைசெய் தமரர் நிதமடி பரவுஞ்
- செவ்வியர் கருத்தினை யறிந்தின்
றேவலுக் கியைவ னியானெனப் புடவி
- யிருவிசும் பிடத்தவர் கேட்பக்
கூவிய துணர்ந்து மாமறை யளித்த
- கொற்றவன் றனைப்புகழ்ந் தேத்தித்
தாவரு வேகந் தனைக்கடிந் துலவுந்
- தடப்பரி விடுத்திறங் கினரால்.
3.20.203
1210 திருமொழிக் கியைவ னியானெனப் பணிந்து
- செப்பிய புடவிமண் ணதனி
லொருபிடி கரத்தி னெடுத்தினி தேந்தி
- யுடையவன் றிருமறை யுரைத்துப்
பொருமமர்க் களத்திற் காபிரை நோக்கி
- புழுங்கிய சினத்தொடு மெறிந்து
குரகதத் தேறி வேல்வலந் தாங்கிக்
- குரைகடற் படைநடத் தினரால்.
3.20.204
1211 எறிந்தமண் டாவித் திசைதிசை செருகி
- யிருவிசும் பிடனறப் பரந்து
செறிந்தவெங் களத்திற் காபிர்கள் முகத்துஞ்
- செவந்தகண் களினும்வா யினும்போய்
மறைந்தன விழுந்து வலிகளுங் கெடுத்து
- மண்டின வதிற்றலை மயங்கி
யறைந்தபே ரொலியுஞ் செவிகளிற் றோன்றா
- தறப்பயந் தறிவழிந் தனரால்.
3.20.205
1212 பொருப்பிடை கிடந்த வரிப்புலிக் குழுவும்
- பொருவரா மடங்கலேற் றினமு
மொருப்படத் திரண்டு நடந்தெனத் தீனோ
- ரியாவருங் மொருமுக மீண்டத்
தெரிப்பருந் தொகுதித் தலைவரும் பரியுந்
- திரளுறுஞ் சேனையு மிடைந்து
மருப்புடைக் கரட மதகரி யனைய
- மன்னர்கண் முறிந்தனர் மயங்கி.
3.20.206
1213 நிரைநிரைப் பரியின் பிணக்குவை மலிந்த
- நிருபர்க ளுடற்குறை மலிந்த
விரிகதிர்ப் பூணு மாரமு மலிந்த
- வெற்றிவெம் படைக்கலன் மலிந்த
குருதியு மலிந்த குடர்த்துடர் மலிந்த
- கொற்றவர் மணிமுடி மலிந்த
முரிதருஞ் சிரசின் மூளைகண் மலிந்த
- மொய்த்தவெண் ணிணங்களு மலிந்த.
3.20.207
1214 முரசமு மவிந்த காகள மவிந்த
- மூரிவெம் பேரியு மவிந்த
பரிகளு மவிந்த வாவணத் தொகுதிப்
- பாசறை முழக்கமு மவிந்த
திரைகட லெனும்பே ரோதையு மவிந்த
- வீரர்கள் சேவக மவிந்த
அரசரு மவிந்த வாகையுந் திறனு
- மாண்மையு மவிந்தன வன்றே.
3.20.208
1215 சம்பினம் பரந்த வோரியும் பரந்த
- தசையினுக் கொன்றொ டொன்றடர்ந்து
வெம்பிய ஞமலிக் குலங்களும் பரந்த
- விசும்பிடத் திடனற நெருங்கிச்
செம்பருந் தினமுஞ் சகுந்தமும் பரந்த
- திரள்கருங் கொடிபல பரந்த
பம்புவா ருதியி னலகைகள் பரந்த
- பாசறைப் பெரும்பறந் தலையின்.
3.20.209
1216 வரைகளி னேறிப் பொதும்பரிற் புகுந்து
- மறைந்தனர் சிலரயிலெ றிந்து
புரவிவிட் டிறங்கி முள்ளுடை நெடுங்கான்
- புகுந்தனர் சிலர்பிணக் குவையி
னிரைகளிற் பதுங்கிக் கிடந்தனர் சிலர்தந்
- நினைவழிந் துழன்றவர் சிலரா
லெரியழற் பாலை யிடந்தொறு மோடி
- யிளைப்பினி லிறந்தவர் சிலரால்.
3.20.210
1217 தெறுகளத் துயிரை முதலிடு பருவந்
- திசைதிசை சிலவழிந் தவரு
முறுகொலைக் களநின் றூர்புகுந் தவரு
- மன்றியொண் சிலையயில் கதிர்வா
ளெறிதர வெதிர்ந்த தலைமைமன் னவரி
- னெழுபது பெயரினைச் சினந்து
மறுவறு மறைநந் நபிதமக் குரிய
- மன்னவர் பிடித்தனர் மாதோ.
3.20.211
1218 அடிநிலந் தெரியா முகம்மதின் பிதாபின்
- னானஅப் பாசையு நிகரா
வடிவுறு மபித்தா லிபுதரு மலிமுன்
- வந்தவுக் கயிலையுங் கதியி
னடவுவாம் பரியா ரிதுதரு திருச்சேய்
- நெளபலென் பவனையு முன்னர்
பிடிபடும் பெயரி னிவரையு நபிமுன்
- பிடித்துவந் தனர்வய வேந்தர்.
3.20.212
1219 பிடித்தமன் னவரை முன்னுற நடத்திப்
- பெரும்படை யனைத்தையுந் திரட்டி
முடித்தவெம் போரிற் காகள முழக்கி
- யுறைந்திடும் பாசறை முன்னி
யடித்துடைத் திறந்த தீனவர் பதினான்
- கமருறுந் தலைவர்க டமையு
மெடுத்தினி தடக்கித் தொழுதிருந் தனர்மே
- லிரவியு மறைந்தன னன்றே.
3.20.213
1220 விடிந்தபின் காலைக் கடன்கழித் திறசூல்
- விரைவினி லிபுனு மஸ்வூதைத்
திடந்தரு மொழியா லழைத்தரு கிருத்தித்
- தீயவன பூஜகு லென்போ
னுடைந்தொழு கினனோ வலதிறந் தனனோ
- வூறுபட்டி டைந்தன னோவென்
றிடந்தரும் பெரும்பா சறையினுங் களத்துந்
- தெரிந்திவண் வருகவென் றிசைத்தார்.
3.20.214
1221 தூயவ னிறசூல் நபியினி துரைத்த
- சொல்லினைச் சிரசின் மேலேற்றிச்
சீயமொத் தெழுந்து வரிப்புலி யனைய
- தீனவர் நால்வர்க ளுடனு
மாயிரு விசும்பும் புவனமும் புகழார்
- மன்னவ ரிபுனு மஸ்வூது
போயினர் பறவைப் பந்தரிற் கிடந்த
- பொங்குசெங் குருதிவெங் களத்தில்.
3.20.215
1222 மெய்யுழன் றிறந்து கிடந்தவ ரொருபால்
- விலாப்புடை திறந்தவ ரொருபாற்
கையிழந் தரிதிற் கிடந்தவ ரொருபாற்
- காற்றுணை யிழந்தவ ரொருபான்
மையுறுஞ் சிரசற் றுறைந்தவ ரொருபான்
- மணிக்குடர் சரிந்தவ ரொருபா
லெய்யும்வன் சரங்க டுளைத்திடக் குருதி
- யிழிந்திருந் திறந்தவ ரொருபால்.
3.20.216
1223 காலினை மடக்கி வாயித ழதுக்கிக்
- கவ்விவெள் ளெயிறுகளி லங்கப்
பாலுறும் பரியின் குலம்பல வீழ்த்திப்
- படருயிர் விசும்பினிற் படுத்தி
மாலுறுங் கரட மதமலை துளைக்கும்
- வயிரவொள் வேலினை யூன்றி
மேலுறு மமருங் கொல்வனென் பவன்போ
- லிருந்தபல் வீரருங் கண்டார்.
3.20.217
1224 குற்றுடைக் கதிர்வாள் குரகத வயிற்றிற்
- குளித்திடச் சாய்ந்தவண் கிடந்த
முற்றிய முனையின் றிறத்தவ னலகைக்
- குலத்தொடு மருந்திட முரணிப்
பற்றிவெங் கரத்தா னிணக்குடர் பிடுங்கும்
- பான்மையொத் தனன்பல நோக்கி
வெற்றிவெண் மலர்த்தார்ப் புயத்தவர் மகிழ்ந்து
- திரிந்தனர் வீரவெங் களத்தில்.
3.20.218
1225 கந்துகக் கழுத்தை முரிதர நெருக்கி
- யெறிந்தவன் களனறக் கவப்பட்
டிந்தெனு முகம்வா ளிலங்கிட வவண்சாய்ந்
- திருந்திறந் தவன்றனை நோக்கி
நந்தின னலனென் றிகலனுஞ் சுணங்கு
- நடந்தருந் திடக்கடி தொதுங்கிச்
சிந்தையின் வெருவுற் றடிக்கடி நோக்கித்
- திரிவன பலவுங்கண் டனரால்.
3.20.219
1226 எள்ளிட விடமற் றளந்தறி யெண்சா
- ணுடம்பினு மிடனற நெருங்கி
யள்ளிலை நெடுவா ளிகளுறைந் திருந்த
- ஆடவர் தோற்றமங் கடைந்த
வள்ளுகிர் சுணங்கு மிகலுனுந் திரிந்த
- விடத்தின்முண் மாவும்வந் திணங்கி
யுள்ளுறுங் களத்திற் கிடப்பன போன்றுங்
- கண்டனர் பலபல வொருங்கே.
3.20.220
1227 பறவைகள் குலவுஞ் சிறைநிழற் பந்தர்ப்
- பக்கரைப் பரியணை சாய்ந்து
மறமுதிர் சினக்க ணிமைப்பில விழித்து
- மணிவிரன் மீசையிற் சேர்த்திக்
குறைவற வலகை நடம்பல பயிலக்
- கொடுங்களக் குருதிநன் னிலத்தி
னிறையுயிர் போக்கி யரசுவீற் றிருந்த
- விடங்களு நிறைந்தன கண்டார்.
3.20.221
1228 இடருறு மிகல னொன்றொடொன் றிகலி
- யிரைத்தெழுங் குரைப்பினுக் கஞ்சித்
துடர்படுங் குடர்வாய்க் கவ்விவிண் ணிடையிற்
- சுழன்றெழும் பறவையின் றோற்ற
மடிபடுங் கொடிய மாருத விசையி
- னாயிடைப் புரிமுறுக் கறுந்து
விடுநெடுங் கயறும் படமுமொத் தெழுந்து
- விளங்குதல் பலவுங்கண் டனரால்.
3.20.222
1229 மல்லுயர் திணிதோள் விடலைக டாங்கும்
- வட்டவொண் கரியகே டகங்க
ளெல்லையி னிழிந்த குருதியிற் கிடந்தங்
- கிலங்குவ தெழிறரச் சிவந்த
வல்லிசே தாம்பற் றடத்திடை மிதந்த
- வாமையின் புறமென வொளிர
வில்லணி தடக்கை மறத்தில்தீன் விளைத்த
- வெற்றிமன் னவர்கள்கண் டனரால்.
3.20.223
1230 அலர்நகை முகங்க ளெண்ணில பரந்து
- கிடந்திடுங் குருதியஞ் சேற்றி
னிலவுவெண் கவிகை யிடையிடை பதிந்து
- நிறைந்திலங் குவனபைந் தடத்துட்
பலவிதழ் விரித்துச் செந்நறாத் துளித்த
- பதுமமென் காட்டிடை புகுந்து
குலவிய வனத்தின் குலங்கள் வீற்றிருந்த
- கோலமொத் தனவுங்கண் டனரால்.
3.20.224
1231 அரசர்க ளணிந்த முத்தவெண் மணிக
- ளுதிர்ந்துபைங் குருதியஞ் சேற்றில்
விரிகதி ருமிழ்ந்து கிடப்பன வென்றூழ்
- விழுங்கிய செக்கர்வா னிடத்தினிற்
பெருகிய தாரா கணம்பல கோடி
- பிறந்தொளி விரிப்பன போலுந்
தெரிதர நோக்கி யடிக்கடி மகிழ்ந்து
- திரிந்தனர் சிலவய வீரர்.
3.20.225
1232 கங்கமுங் கொடியுஞ் சகுந்தமு மோரிக்
- கணங்களு மிகலனுஞ் சுணங்குஞ்
செங்களத் திடைக்குற் றுயிருட லருந்தத்
- தெறித்திடுங் குருதியிற் றிரிவ
வெங்கதிர் நெடுவே லூறுகள் படமெய்
- வருந்திடா வீரரைப் போன்று
மெங்கணும் பலகண் டடுபடைக் கலன்க
- ளிடுநெடும் புலத்திடைத் திரிந்தார்.
3.20.226
1233 ஏற்றிய சிலைக்கை தறித்திடப் பறிபட்
- டெழுந்தவம் பூறுபட்டி டைந்து
சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கித்
- திகைப்பன வோரிகள் பலவு
மாற்றரும் வீரர் கதைபடத் தெறித்த
- மண்டைகண் மூளையின் வழுக்கிக்
காற்றுணை முடிர்ந்து பயப்பயத் திரியு
- நரிக்குலம் பலவுங்கண் டனரால்.
3.20.227
1233 ஒலிதெனும் வேந்த னிறந்தபே ரிடமு
- முக்குபா வீந்தவெங் களமும்
பலியென வுத்பத் திறந்திடு மிடமும்
- சைபத்து படும்பறந் தலையும்
நலிதலில் வீரச் செருக்கினி லுமையா
- நடந்தெதிர்ந் திறந்திடு மிடமும்
வலிதரு முமாறா விறந்தசெங் களமும்
- வகுப்புற வினிதுகண் டனரால்.
3.20.228
1235 மறமுதிர் வீரர் தாண்மடித் தெதிர்ந்து
- மண்டமர் கடந்துசூழ்ந் திறந்து
புறமிடங் குவிய வுறவின ரெவரும்
- போர்க்கடன் கழித்தவண் கிடப்பக்
குறையுயி ருடலங் குருதிகொப் பிளிப்பக்
- கொடுஞ்சமர் பலவிளை யாடித்
தெறுகள நாப்ப ணபூஜகல் கிடப்பத்
- தீனவ ரினிதுகண் டனரால்.
3.20.229
1236 கண்களிற் சேப்பு நுதலினில் வியர்ப்புங்
- கரியமை மீசையின் முறுக்கும்
புண்பட விதழிற் பற்பல்காற் சினந்து
- பூட்டிய கொடியவெள் ளெயிறு
மண்பட வொழுகுங் குருதியி னனைவும்
- வடுப்படு முடலமு முயிர்ப்பும்
பண்பொடுந் தெரியக் களத்திடை கிடந்த
- பாதக னிடத்தினுற் றனரால்.
3.20.230
1237 செல்வமுந் திறனும் புறத்தளித் தனையே
- தீவினைப் பயிர்விளைத் தனையே
நல்வர மனைத்தும் பாழ்படுத் தினையே
- நடுநிலை தனைத்தவ றினையே
பல்பொருட் சுவனப் பதியிழந் தனையே
- பாழ்ங்குழிக் குடல்வளர்த் தனையே
சொல்விதம் விடுத்துப் பவமெடுத் தனையே
- சூழ்வினை தனையறிந் திலையே.
3.20.231
1238 வீர்வெங் களிறே யடலரி யேறே
- விறற்பெருஞ் சமர்க்குறும் புலியே
பாரினிற் சிறந்த மக்கமா நகரிற்
- பரிவுறும் வீரருக் கரசே
காரணக் குரிசின் முகம்மது நபிதங்
- கட்டுரை மறைக்கலி மாவை
யீரமுற் றிசைந்து மனத்தினி லிருத்தா
- திடும்பெனு மிடர்விளைத் தனையே.
3.20.232
1239 மேலுமின் கலிமா வுரைத்துறுந் தீனை
- விரும்புவை யெனின்முகம் மதுதம்
பாலினிற் கொடுபோய்ப் பருவர றவிர்த்துப்
- பரிவுறுந் தலைமைசெய் குவநீ
கோலிய பகையை விடுத்துநன் குரையைக்
- கூறெனக் கூறலுங் கொதித்து
வாலெயி றிலங்க நகைத்தட லிபுனு
- மஸ்வூதளம் வெகுண்டிட மவுல்வான்.
3.20.233
1240 இறுதியிற் கலிமா வுரையென வெதிரி
- னுரைத்தனை யிழிந்தசா திகளிற்
றொருவரின் குலத்துக் குறுமதி யெடுத்துச்
- சொல்லினை யுனைவிசும் பேற்றப்
பெறுமவ ரிலையென் னிடத்தினி லென்றா
- லியாவர்தா னென்னினிப் பேசார்
தெறுகொலை விளைத்தி யெனவிழி சிவந்து
- செவிக்கொளா வசையொடு முரைத்தான்.
3.20.234
1241 வசைமொழி யுரைப்பக் கடிதினில் வெகுண்டு
- மருங்குடை வாளினை வாங்கி
விசையுடன் றாடி தனைப்பிடித் தீழ்த்து
- விறற்கொழுங் கரத்தினிற் சுற்றி
யசையுறுஞ் சிரசை யறுத்துவே றாக்கி
- யவனுடனெ ழுவர்க டமையும்
பசையறும் பாழ்ங்கூ வலினிடைப் படுத்தி
- விட்டனர் பலன்படை யாமல்.
3.20.235
1242 அபுஜகல் சிரத்தைக் கரத்தினிற் றூக்கி
- யள்ளலங் குருதியிற் றிரிந்த
கவிசிறைப் பறவைக் குலங்களு மிரியக்
- கணத்தொடு நரிக்குல மொதுங்கச்
சவிதருங் கொடியுங் கவரியுங் குடையுந்
- தாளிணை யிடறிட நடந்து
புவியிடைப் பரந்த பறந்தலை கடந்து
- போயின ரிறங்குபா சறையின்
3.20.236
1243 மறத்தினைத் தொடுத்துத் தீவினை விளைத்து
- வஞ்சகம் பலபல வியற்றி
யறத்தினை வெறுத்த கொடும்பெரும் பதக
- னபூஜக றலையிஃ தென்ன
நிறுத்திய தீனி லுலகெல்லாம் புரந்த
- நீணபி முகம்மது வென்னுந்
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர்வே
- லேந்திய செழுங்கர தலத்தார்.
3.20.237
1244 ஆதியைப் புகழ்ந்து காபிர்தம் வலியு
- மற்றது தீனெனும் பயிரின்
கோதறுங் கொழுந்துங் குவலயம் படர்ந்த
- தின்றென யாவர்க்குங் கூறித்
தீதுறுங் கொடிய பாதகன் சிரசை
- யகற்றுமி னெனச்செழு மறையின்
மூதுரை தெரிந்த புரவல ருடனு
- மிருந்தனர் மூன்றுநா ளவணின்.
3.20.238
1245 வற்றுறா வளமை மக்கமா நகரார்
- வந்தது மெதிர்மலைந் தவணி
லுற்றது மெழுவ ருடனபூ ஜகல்த
- னுயிரிழந் ததுவும்வெண் சமரில்
வெற்றியு மியாவும் வரிப்பட வெழுதி
- விரைவினின் மாருத மியையா
வொற்றர்கைக் கொடுத்து மதீனமா நகருக்
- கனுப்பின ரெவரினு முயர்ந்தோர்.
3.20.239
1246 வடிவுறுஞ் சாயை வெளியுறா நபிதம்
- மக்களில் றுக்கையா வென்னுங்
கொடியிடை யுதுமான் மனைவிய ரென்னுங்
- குயின்மொழித் திருமயி லிறந்து
படியினி லடக்கி யாவருந் திரண்டு
- பள்ளி யினிருக்கு மப்போதி
லுடைபட பதுறிற் பொருதுவென் றெழுது
- மோலையைக் கொடுத்தன ரோட்டர்.
3.20.240
1247 புவியினிற் புதுமைக் காரண மதீனா
- புரத்தினி லுறைந்தவ ரெவரு
மபுஜகல் படைகொண் டெதிர்ந்திறந் தனனென்
- றழகுறு வாசகம றிந்து
நபிதிரு மகளா ரடைந்தன ரெனுமந்
- நடுக்கமுங் கலக்கமு மகற்றிக்
கவலுதற் கரிய வாநந்தப் பெருக்கின்
- களிக்கடல் குளித்துமூழ் கினரால்.
3.20.241
1248 பதுறெனும் புடவி வரையடி விடுத்தம்
- மாற்றல ரிடத்தினிற் பறித்த
கதிர்கொளுந் துல்புக் காறெனும் வாளைக்
- கரதலத் தெழிறர வேந்திக்
கொதிநுனை வடிவேன் மன்னவர் சூழக்
- குதிரையின் றொகுதிக ளீண்ட
வதிர்முர சமும்பே ரிகைகளு மார்ப்ப
- வகுமது நபியெழுந் தனரால்.
3.20.242
1249 தானைக ளீண்டக் கொடித்திரண் மலிய
- வருநபி தமைமுக நோக்கிக்
கானகம் விடுத்தோர் காவதத் திடத்திற்
- கடற்கரைப் புறத்த பாசுபியா
னூனுடல் வதைத்து மாநிதி யனைத்து
- மொல்லையிற் கொள்வமென் றினிதின்
தீனவ ரொருவ ருரைத்தனர் கேட்டுச்
- சிந்தையிற் பொருந்தின ரன்றே.
3.20.243
1250 எழுந்திவண் வருமு னிரண்டிலொன் றுங்கைக்
- கிறைவசப் படுத்தின னெனுஞ்சொன்
மொழிந்தினி ரவையே முடிந்தன வினிமேன்
- மூளும்வெஞ் சினத்தினை முற்றி
யழுந்திடப் பொருத லறிவல வெனஅப்
- பாசெனுந் தந்தையர் மொழியச்
செழுந்திற னபியு மிஃதுநன் றென்ன
- நிதியின்மேற் சேறலை விடுத்தார்.
3.20.244
1251 நுதிகொளுங் கதிர்வேற் காபிரை பதுறி
- லடர்ந்தமுந் நூற்றுடன் பதினான்
கிதமுறுந் தலைவர்க் கும்பர்மா ராய
- முண்டென வியல்பொடு முரைத்துக்
கதிகொளும் பரியுந் தானையு நெருங்கக்
- கானகம் பலபல கடந்து
சதுமறை முழக்க மார்த்தெழ மலீக்கு
- சபுறாவாந் தலத்தில்வந் திறுத்தார்.
3.20.245
1252 குறைந்திட ரொடுங்கிப் போயின மருவார்
- பாசறைக் கொள்ளையின் றொகையு
மிறந்திடு மெழுப தருந்திறல் வேந்த
- ரிடுகலன் களும்படைக் கலனுஞ்
சிறந்தவெம் பரியும் ஸகுபிக ளெவர்க்குந்
- தெரிதரப் பகுந்தெடுத் தளித்தார்
புறந்தரு களத்தின் முத்திரை படைத்துப்
- புகழ்பெறு முகம்மது நபியே.
3.20.246
1253 அறபினின் மலீக்குச் சபுறாவாந் தலம்விட்
- டறப்பெரும் படைபுறஞ் சூழ
இறௌகா வெனுமத் தலத்தினில் வரும்போழ்
- தியல்பெறு மதீனமன் னவரும்
புறநக ரவருந் திரண்டெதிர் பணிந்து
- பொங்கிய முழக்கொடுஞ் சூழ
நறவுகொப் பிளிக்குந் துடவைசூழ் நகரி
- னண்ணினர் முகம்மது நபியே.
3.20.247
1254 மறையவர் வாக்கின் பயித்தொலி முழங்க
- வானவ ரினிதுவாழ்த் தெடுப்பக்
கறைகொளுங் கதிர்வேற் காளையர் சூழக்
- கவிகையுங் கவரியு மலிய
முறைமுறை பேரி தவில்பறை திடிமன்
- முருடுசச் சரிமுர சதிர
விறையவ னருளால் வெற்றிகொண் டிறசூ
- லிலங்கிய நகரின்வந் தனரால்.
3.20.248
1255 மடலவிழ் வனச வாவிசூழ் மதினா
- வந்தபின் மற்றைநாள் பதுறிற்
பிடிபடு மவரைக் கொணர்கெனக் கூறப்
- பெருஞ்சிறை சாலையி னண்ணிக்
கடிதினி லெழுப தரசர்க டமையுங்
- கையினிற் றளையொடுங் கொடுவந்
தடல்பெருங் குரிசின் முகம்மது நபிமுன்
- விடுத்தன ரணிவய வீரர்.
3.20.249
1256 ஆரிது புதல்வ னலுறையும் பதக
- னுக்குபத் தென்பவன் றனையு
மூரினிற் புறத்திற் பாதையி னாப்பண்
- டலைகளைந் திடுகவென் றுரைப்ப
வீரர்கள் வெகுண்டு பிடித்தகைக் கயிற்றின்
- விரைவொடு நடத்தியவ் வுழையிற்
சோரிநீ ரொழுக விருவர்க டலையுந்
- துணித்தருங் கழுவினிட் டனரால்.
3.20.250
1257 நற்றவ முடைய முகம்மதின் கலிமா
- நாவினி லியற்றிடா தெதிர்ந்த
பற்றல ருழையி னிருவர்க டமையும்
- பாழ்ங்குழி யிடைப்படர் படுத்தி
மற்றவ ரறுபத் தெண்மர்க டமையு
- மாசில் அஸ்காபிக ளென்னுங்
கொற்றவ ரெவருங் களித்தினி துவப்பக்
- கொடுத்தனர் பகுந்துபங் கியற்றி
3.20.251
1258 உறுதலை விலைநா லாயிரந் திருக
- மொவ்வொரு வருக்கினி தளித்து
மறுவற மீண்டு மக்கமா நகரார்
- போயினர் மன்னரப் பாசு
மறிவுறு மபித்தா லிபுமகன் றனக்கு
- மாரிது மகனவு பலுக்கு
முறைமையின் றமக்குந் தலைவிலை யாக
- மீண்டனர் முதுபொரு ளளித்தே.
3.20.252
1259 அண்ணலங் களிற்றை முகம்மதை வளர்த்த
- வடலபுத் தாலிபு திருச்சேய்
வண்ணவொண் புயனுக் கயிலையுஞ் சிறந்த
- ஆரிது மகனவு பலையு
நண்ணிய புகழ்சேர் மக்க மாநருக்
- கனுப்பிநந் நெறியி னப்பாசு
முண்ணிறை கலிமா வோதியீ மான்கொண்
- டுவந்தினி துறைந்தன ரன்றே.
3.20.253
1260 தருவுரை பகர வெதிருரை பகர்ந்த
- தருநபி சிறியதந் தையரு
மருவுநன் மலரு மெனவரு புறுக்கான்
- மார்க்கநன் னெறிமுறை பயின்று
செருவடன் மலியன் ஸாரிக டமக்குஞ்
- செவ்விய முகாஜி ரீன்களுக்கு
மருமருந் தனைய வுயிரெனப் பொருந்தி
- யன்புட னினிதிருந் தனரால்.
3.20.254
1261 வரத்தினிற் சிறந்த ககுபத்துல் லாவி
- னாபுசம் சத்தினீர் வழங்குந்
துரத்தி னுக்குரிய ராதலாற் பிரியாத்
- தொன்முறை வருதலா னபிக்கும்
புரத்தினுற் ரவர்க்குந் தனித்தனி யுரைத்துப்
- புதியவன் றனைப்புகழ்ந் தேத்திக்
கரத்தடக் களிறப் பாசெனு முரவோர்
- கடிகொடம் பதியிடை புக்கார்.
3.20.255
1262 முதலவன் விதித்த விறமலா னோன்பு
- முடிவினி லியாவரு மறிய
அதிசயம் பிறப்பப் பித்துறாப் பறுலென்
- றாய்த்தும் நபிக்கிறங் கியதான்
மதிவல ரெவரு மவ்வழி முடித்து
- மகிழ்ந்தனர் தீனெனும் பயிரும்
பதிவுபெற் றிருந்து தழைத்தன செல்வம்
- படர்ந்தினி தோங்கின வன்றே.
3.20.256
பதுறுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 20க்குத் திருவிருத்தம் ---- 1262
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.21 சவீக்குப் படலம் (1263-1319)
1263 ஆரண முறையின் தீனெறி பெருக்கி
- யகுமதுற் றுறையுமந் நாளிற்
காருறை பொழில்சூழ் மதீனமா நகரிற்
- சூதரிற் கயினுக்கா கென்னும்
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து
- வேற்றொரு தலத்திடைப் புக்கிப்
பாரினில் தீனுக் கிடர்நடத் தினர்க
- ளெனுமொழி பகர்தரக் கேட்டார்.
3.21.1
1264 நாயகர் செவியிற் புகுதலுந் தலைமை
- நண்பருங் கடுவிசைப் பரியுஞ்
சாயகக் சிலைக்கை வீரருஞ் சூழத்
- தடக்கதிர் வேலெடுத் தேந்திப்
போய வருறைந்த பதியினை வளைந்து
- புரிசைக டுகளெழப் படுத்தி
மாயவன் காபி ரெவர்களு நடுங்க
- மண்கொளா விடுக்கண்செய் தனரால்.
3.21.2
1265 பொருளெனப் படுத லியாவையுங் கவர்ந்து
- புறம்படர்க் கயினுக்கா கென்னும்
விரிபெருங் கூட்டத் தவரினை யுபைசேய்
- விறல்பெறு மப்துல்லா விடத்திற்
பரிவுறச் சாட்டிக் கொடுத்து விட்டதற்பின்
- பண்புறு மதீனமா நகரின்
மருமல ரணிந்த தீனவர் சூழ
- வந்தனர் முகம்மது நபியே.
3.21.3
1266 கோதுறுங் கயினுக் காகெனு மவர்கள்
- கூட்டத்தின் காரண மாகக்
காதிய நசுறா னிகளெஹூ திகளாங்
- காபிர்க ளுடன்படக் கலப்ப
வோதிய மறையி னுண்மையென் றுரைக்கு
- முறவுகள் வேண்டலி ரென்ன
வாதித னாயத் திறங்கின நபியு
- மன்புட னினிதுவந் தனரால்.
3.21.4
1267- வேறு
வலிகொடு காபிரை பதுறின் மாய்த்துநன்
னிலைகெடுங் கயினுக்கா கவரை நீத்திடர்
நலிவற முகம்மதாண் டிருக்கு நாளினிற்
பொலிவுறச் சிலமொழி புகலு வாமரோ.
3.21.5
1268 ஷாமினிற் புக்கிமா நிதியந் தன்னொடு
மாமதிண் மக்கமா புரத்தின் வைகிய
சூமன பாசுபி யான்வன் சொல்லினாற்
றாமவொண் புயத்தவர்க் கெடுத்துச் சாற்றுவான்.
3.21.6
1269 பொன்னுநன் மணியுமொத் திலங்கும் பொற்பினாற்
கன்னியர் காமுறுங் காளை வீரர்க
ளென்னுயி ரனையரிப் புரத்துக் காதியா
மன்னவர் பதுறினின் மடிந்திட் டாரரோ.
3.21.7
1270 பொழிதருஞ் செழுமுகிற் பொருப்பின் சார்பினிற்
கழுதுக ணடம்பல காண வீணினில்
வழுவுறு மொருவனுக் காக மன்னவ
ரெழுவரும் படையுட னிறத்தல் வேண்டுமோ?
3.21.8
1271 வயமுறு முதவியி னிறந்த மன்னரோ
டியல்புற வுயிரினை யீந்தி டாதொளித்
தயல்புகுந் தனனென வணுகி லாவவப்
பயனுற வுலகமும் பழிக்கு மேகொலாம்.
3.21.9
1272 துனிதவிர்த் துதவிசெய் தவர்க டுஞ்சயா
னனிபல பொருளுட னகர நண்ணிமென்
பனிமலர்ப் பஞ்சணை படுத்து நாடொறு
மினியன வுண்டியுண் டிருத்தல் நன்றரோ ?
3.21.10
1273 வீணினி லவருயி ரிறத்தன் மேயினன்
பூணரும் பழியெனும் பொறையுந் தாங்கின
னாணினை வீழ்த்தின னகைக்கு மாயின
னாணினில் வலியனென் றறைய வேண்டுமோ ?
3.21.11
1274 உதவிசெய் பவர்க்குயி ருதவி செய்குதல்
விதியுயி ருதவியின் வீழ்த்தி நின்றவர்க்
கிதமுறப் பழிகொளா திருத்த லும்பரின்
பதவியு மிலையிவண் பலனு மில்லையால்.
3.21.12
1275 போருறும் பெரும்படை யுடனும் புக்கியச்
சேரல ரணிகெடச் சிதைத்துத் தீனெனும்
வேரற முகம்மதை வீழ்த்திடே னெனிற்
பாரிதன் முகத்தினைப் பார்ப்ப தில்லையால்.
3.21.13
1276 வாரியின் பெருங்கிளை மலிவி னாலுமிப்
பாரினிற் பலபொருள் படைத்த மாண்பினுங்
கூரும்வை வேற்படைக் கூட்டத் தாலுந்தன்
வீரியத் தினுமிவை விளம்பி னானரோ.
3.21.14
1277 இன்னன பலவெடுத் திசைத்த வாசக
நன்னிலை மக்கமா புரத்தி னண்புறு
மன்னிய வேந்தர்க ளெவர்க்கு மார்புறுங்
கொன்னுனை வேலினுங் குளித்து நின்றதே.
3.21.15
1278 இவர்மொழிக் கின்னண மியைந்தி லோமெனிற்
புவியினிற் செல்வமும் புகழும் வீரமு
மவமென யாவரு மகத்தி னுட்கொடு
குவிதருங் கணத்தொடுங் கூற லுற்றனர்.
3.21.16
1279 அருந்திற லபூஜகு லுடனம் மாண்மையும்
பொருந்திறல் வீரமும் பொன்றிப் போயதென்
றிருந்தன மின்றுநீ யியம்பு மாற்றத்தான்
விரிந்தநங் குலத்தவர் வெற்றி வீரமே.
3.21.17
1280 இன்றுநீ துணிந்தனை யிறந்த மன்னவர்
வன்றிறற் பழியினை வாங்கி னோமினி
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாடொறும்
வென்றியுண் டென்பதும் விளம்ப வேண்டுமோ ?
3.21.18
1281 செழுந்திறற் சேனையுஞ் சேனை வீரரும்
வழிந்திடுங் குருதிவேன் மன்னர் தம்மொடு
மொழிந்திடு முரைவழி முன்னி யிற்றையி
னெழுந்திட வேண்டுமென் றிசைத்திட் டாரரோ.
3.21.19
1282 நள்ளுற நகரவர் நவிலும் பெற்றியின்
வள்ளுரத் தபாசுபி யானு மாசிலா
வள்ளிலை வேலெடுத் தாடன் மாவொடும்
புள்ளெழ விரைவினிற் புறப்பட் டானரோ.
3.21.20
1283 குரகதப் பேரணி குழுமிச் சூழ்தர
விரிகதி ரெஃகினர் விரைவின் முன்செலச்
சொரிகணை விற்கதை சுரிகை வாள்சுமந்
தரசர்கள் சிலர்திரண் டரியி னீண்டினார்.
3.21.21
1284 அடற்பரி யிரண்டுநூற் றரசர் தம்மொடும்
படைக்கலன் வீரரும் பரந்து முன்செலக்
கொடிப்படைக் குழுவொடுங் குடைகண் மொய்த்திடக்
கடற்படு பல்லியங் கறங்கப் போயினான்.
3.21.22
1285 கைத்தபுன் மனத்தினன் ஹறுபு தன்மகன்
மொய்த்தெழும் பெருந்துகண் முகிலின் விம்மிடப்
பைத்தல நெளிதரப் படைகொண் டீண்டியே
யெய்த்திடாத் திறத்தொடும் சவீக்கி னெய்தினான்.
3.21.23
1286 வயமுறு நபியுறை மதீன மாநகர்க்
கியல்புறக் காதநான் கென்னு மெல்லையி
ணுயர்சவீக் கெனுந்தலத் துழையின் மாவொடு
பயமற விறங்கினான் வகுத்துப் பாசறை.
3.21.24
1287 பரித்திர ணிரைநிரை படுத்திப் பாங்கரின்
விரித்தொளிர் படங்குகள் விளங்கக் கோட்டிநல்
லரித்திர லரசருக் கமைதி காட்டியூ
டிருத்துமங் காடியு மிருத்தி னானரோ.
3.21.25
1288 கறங்கிய மேற்கடற் கனலி புக்கபி
னிறங்கிய பாசறை யிடத்திற் சூழ்தர
மறங்கிளர் வீரரை வைத்தி யாவரு
முறங்கிய காலையி னொருவ னாயினான்.
3.21.26
1289 தன்னுரு வகற்றிவேற் றுருவந் தாங்கிவிற்
கொன்னுனை வாளொடுங் குந்த மேந்திப்பின்
முன்னிடந் தெரிகிலாக் கங்குன் முன்னிநற்
பொன்னியன் மதீனமா புரம்புக் கானரோ.
3.21.27
1290 அரசர்தம் வீதியு மாவ ணங்களுங்
குரிசிறன் வாயிலுங் கடந்து கோமகன்
வரும்அகுத் தபுமக னில்லின் வாயிலின்
கரைபுரள் கதிர்மணிக் கபாடந் தீண்டினான்.
3.21.28
1291 புதுமணிக் கதவினிற் புடைத்தி டத்தொனிக்
கதழ்வுறச் செவியினிற் கலப்பக் கேட்டெழுந்
துதிர்நறைத் தொங்கன்மார் புலவ வந்துநின்
றிதமுறக் கவிழ்ந்திருட் டறுத்து நோக்கினான்.
3.21.29
1292 கதிபிறி தொன்றிலா ஹறுபு பெற்றிடும்
பதகனென் றறிந்தவன் பகரும் வாசகத்
தெதிர்கொடுத் தழைத்திடல் பழுதென் றெண்ணிமா
மதியொடு மெழுந்துதன் மனைபுக் கானரோ.
3.21.30
1293 நின்றனன் கூயின னெடிது தன்மனங்
கன்றியிங் கொருவருங் காண்கி லோமென
மின்றிக ழயிலொடு வேறு வீதியிற்
சென்றனன் றனித்தொரு வாயில் சேர்ந்தனன்.
3.21.31
1294 பலதிசை யினுமெலப் பார்த்திவ் வில்லினு
மிலருளர் மாந்தர்க ளென்ன வெண்ணிய
மலைவொடு மசுக்கமின் மகனில் வாயிலி
னிலையுறுங் கதவினைப் புடைத்து நின்றனன்.
3.21.32
1295 கங்குலங் காலையிற் கதவைத் தீண்டுதற்
கிங்கடைந் தவரெவ ரென்ன வில்லுறை
மங்கையர்க் குரைத்தெழுந் தரிதின் வந்தொளி
நுங்கிய விருளிடை நோக்கி னானரோ.
3.21.33
1296 கலைப்பவ னெனவரும் ஹறுபு மைந்தனைத்
தலைக்கடைக் கண்டுகை படித்துத் தானுறை
யிலத்தினிற் கொண்டுசென் றிருத்தி யின்புறு
நலத்தொடுஞ் சுவையொடும் பொசிப்பு நல்கினான்.
3.21.34
1297 உண்டிலை தின்றபி னுறுதி யாகவிம்
மண்டலத் துளவையு முகம்ம தென்னும்பேர்
கொண்டவற் குறும்படைக் குறிப்புங் கொள்கையும்
விண்டெமக் குரையென விளம்பி னானரோ.
3.21.35
1298 முகம்மதின் மார்க்கமும் வலியும் வெற்றியு
மிகலவர் பணிவும்போ ரியற்றுஞ் செய்கையும்
பகைபிறி திலையெனப் பகரும் பெற்றியும்
வகைவகை தெரிதர மசுக்கஞ் சொல்லினான்.
3.21.36
1299 சாற்றிய தனைத்தையும் ஹறுபு தன்மகன்
றேற்றமுற் றுணர்ந்துசிந் தித்து நன்கென
மாற்றவ ரறிகிலா தெழுந்து வல்லிரு
ளாற்றிடை குறுகிப்பா சறையி னாயினான்.
3.21.37
1300 உதித்ததன் கிளையினுக் குரிய ரியாவரு
மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரைக்
கதித்தபுன் மனத்தினன் ஹறுபு தன்மக
னிதத்தொடு மழைத்தரு கிருத்திச் சொல்லுவான்.
3.21.38
1301 முகம்மதி னுறைமதி னாவிற் சூழ்தருந்
திகைதிகைச் சிறுகுடி நிரைகள் சேர்த்தவண்
டுகள்படப் பலபொருள் சூறை யாடிநின்
றிகலவ ருயிர்செகுத் திடுமி னென்றனன்.
3.21.39
1302 மன்னன பாசுபி யான்சொல் வாசகஞ்
சென்னியிற் கொடுசில பெயர்க டம்முடன்
மின்னயில் வேலொடும் வீரவா ளொடும்
பன்னருங் கங்குலிற் பரந்து போயினார்.
3.21.40
1303 பரிசுகளைக் கங்குலிற் கரந்து பற்றியும்
நிரைகளிற் றொருவரை நெருக்கித் தாக்கியும்
விரைவொடு மெதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும்
தெரிதரா தொளித்தருங் குறும்பு செய்தனர்.
3.21.41
1304 கல்லடர் பொருப்பிடைக் காலிக் காரரும்
பல்லரும் திரிதரும் பாதை யோர்களு
மெல்லையிற் சிறுகுடி யிருக்கின் றோர்களுஞ்
சில்லறை பெரிதென நபிமுன் செப்பினார்.
3.21.42
1305 தேங்கமழ் தெரியலா ரீதென் செய்கையென்
றாங்குறு மொற்றரை யறியக் கேட்டலும்
பூங்கழ லிறைஞ்சிவாய் புதைத்து மென்மெலப்
பாங்குறுஞ் செவிகொளப் பகரு வாரரோ.
3.21.43
1306 குரகதத் தொடும்சில படையுங் கூட்டியோர்
வரையிடை சவீக்கெனுந் தலத்தில் வந்திருந்
திருமன ஹறுபுத னிளவ லிவ்வணம்
விரைவினிற் பகைபல விளைக்கின் றானென்றார்.
3.21.44
1307 பற்றல ரெனுமொழி செவியிற் பற்றலும்
வெற்றிய பாலுபா னாவை வீறொடு
மற்றையி னகரினுக் காதி யாகவைத்
துற்றவெஞ் சமர்ப்படை யுடனெ ழுந்தனர்.
3.21.45
1308 குவிபெருஞ் சேனையும் பரியுங் கூட்டமுங்
கவிகையுந் துவசமுங் கலப்பப் பல்லிய
முவரியி னொலித்திட முகம்ம துஞ்செழும்
புவிதிசை யதிர்தரக் கடிது போயினார்.
3.21.46
1309 பொழின்முகில் வரையிடை பதுறிற் போரினில்
வழிநிண மறாதவேன் மன்னர் வெம்படைக்
குழுவொடுங் கறுக்கறா வென்னக் கூறிய
வெழிறருந் தலத்திடை யிறங்கி னார்களால்.
3.21.47
1310 மறைநபி முகம்மது மற்ற யார்களுந்
தெறுகொலை வீரருஞ் சேனை மாக்களு
மறைகட லெனவடுத் தனர்க ளீண்டென
கறுபுதன் றிருமகன் காதி லோதினார்.
3.21.48
1311 அள்ளிலை வேலொடு மகும தின்படைப்
புள்ளெழக் கறுக்கறாப் புலத்தி னுற்றவை
விள்ளலுங் கறுபுதன் விடலை யாக்கமு
முள்ளமும் வீரமு மொடுங்கி னானரோ.
3.21.49
1312 பொங்கிய தானையும் புரவிக் கூட்டமுந்
தங்கிய பொருளுமத் தலத்தின் விட்டுவிட்
டங்கவ ரொருவரு மறிகி லாநடுக்
கங்குலங் காலையிற் கார்ந்து போயினான்.
3.21.50
1313 கரந்துபோ யினனா சென்னுங் கட்டுரை
பரந்தன பாசறை முழுதும் பாய்கதிர்
விரிந்தன விடிந்தன விரைவி னெங்கணுஞ்
சரிந்தனர் குழுவொடுந் தறுகண் வீரரே.
3.21.51
1314 சரந்தரு தூணியுந் தனுவுந் தண்டமு
மரந்தட வயிலுந்தா வச்சு வங்களும்
பரந்தவெண் படங்குபா சறையும் வீதியு
மிருந்தன போயின ரியாரு மென்பவே.
3.21.52
1315 வானவர் பரவிய வள்ளன் மானபி
யீனமில் கறுக்கறா வெல்லை நீத்துவந்
தானதோர் சவீக்கினி லரிகள் காண்கிலார்
கானலர் படங்கும்பா சறையும் கண்டனர்.
3.21.53
1316 கருஞ்சகுந் தமுங்கொடிக் கணமுங் கங்கமு
முரைஞ்சிடக் கொடியொடு நடந்த வொள்ளியோர்
பெருஞ்சம ரெனுமொரு பெற்றி காண்கிலா
ரருஞ்சுர வழியிளைப் பாறி னாரரோ.
3.21.54
1317 கட்டுவாம் புரவியும் படைக்க லன்களும்
வட்டவெண் கவிகையு மிரச வர்க்கமு
மொட்டகைத் திரள்களு மொளிர்நி சானியும்
விட்டபல் பண்டமும் விரைவின் வாரினார்.
3.21.55
1318 சிறியரும் பெரியருஞ் சேனை வீரருங்
குறியொடும் பலபொருள் கொள்ளை கொண்டதிற்
றறுகிலா கறுபுசேய் தருமத் தாலன்றோ
வறியவ ரெவர்களும் வலிய ராகினார்.
3.21.56
1319 கொள்ளையின் பலபொரு ளனைத்துங் கைக்கொடு
கிள்ளையின் றிரளொடுங் கிளரும் வாளயின்
மள்ளர்கள் சூழ்தர வள்ள னந்நபி
நள்ளுறை யரியென நகர நண்ணினார்.
3.21.57- சவீக்குப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 21-க்குத் திருவிருத்தம்.......1319.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.22 குதிரிப் படலம் (1320-1331)
1320 கொற்றவெண் கவிகை நீழ லுலகெலாங் குளிரச் செய்து
வெற்றிகொண் டிசுலா மோங்க விறனபி யிருக்கு நாளிற்
பற்றலர் தேயந் தோறும் பற்பல்கா லிருந்து சாவு
மொற்றரி லொருவர் தோன்றிச் சிலமொழி யுரைப்ப தானார்.
3.22.1
1321 மதினமா நகரிற் றென்கீழ்த் திசையினில் வளமை யோங்கக்
குதிவரால் வனச வாவி சூழ்தரு குதிரி யென்னும்
பதிபனி சுலைமுக் கூட்டத் தாரினிற் பல்லர் கூண்டு
விதிமுறை மறையின் மாற்றம் பொய்யென வெறுத்து மன்னோ.
3.22.2
1322 நன்னயச் கலிமா வென்னு நாமநா நாட்டு மாக்கள்
சொன்னெறி வழுவ தாக்கித் தூடணித் திகல தாக
மன்னநும் பெயருங் கூறும் வாய்மையு மதித்தி டாமற்
பன்னருங் குறும்பு மேற்கொண் டிருந்தனர் பரிவற் றென்றார்.
3.22.3
1323 புவியிடந் திரிந்து நாளும் புகலுவோ ருரைத்த மாற்றஞ்
செவிவழி புகுத லோடுஞ் செவ்விய ரிறசூ லுல்லா
இபுன்ம்மி மக்த்தூ மென்னு மிளவலை நகரி னாட்டிக்
கவனவெம் பரியுந் தானைக் கணத்தொடுங் கடிது போனார்.
3.22.4
1324 மதிதவழ் சிகர கோடி வரைபல கடந்து நன்னீர்
நதிசில கடந்து மாறா நள்ளிருட் கான நீந்திக்
கதிரவன் கதிரி னாலெண் காவதங் கடந்து வல்லே
குதிரியென் றோங்குஞ் செல்வக் கொழுநக ரடுப்பப் புக்கார்.
3.22.5
1325 பூவலர் பொய்கை வேலிப் புறம்படர்ந் திலங்கச் சூழ்ந்த
காவணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டுக்
கோவுடன் குடியுங் கூடுங் கூட்டமுங் குலைந்து தத்தஞ்
சேவக மிழந்து நான்கு திசையினுஞ் சிதறிப் போனார்.
3.22.6
1326 பற்றலர் பதியை நீங்கிப் பஃறிசை படர்ந்தா ரென்ன
வுற்றவ ருரைப்பத் தீனோ ரொண்புயங் குலுங்க நக்கிக்
கற்றைவெண் ணிலவு காலுங் கவிகையுங் கொடையு மோங்கச்
கொற்றவ ருடனு மேகிக் குதிரியி னிடத்தி லானார்.
3.22.7
1327 கூறிய குதிரி வாழ்ந்தோ ரொட்டகங் குதிரை காலி
யேறுமே ழகங்க ளெல்லா மினத்தொடு மொருங்கு சேர்த்து
மாறரு மணியும் பொன்னு மாடையு மினிதின் வாரி
வேறினி யில்லை யென்னக் கவர்ந்தனர் விரைவி னன்றே.
3.22.8
1328 மட்டறும் பண்ட மியாவு மலிதரச் செறிந்து வைகு
மொட்டகைத் திரளி னேற்றி யுறுநிரை யனைத்துஞ் சேர்த்து
விட்டுமுன் னடத்தி வேந்தர் வீரர்வெம் பரியிற் சூழக்
கட்டழ கெறிக்குஞ் சோதிக் காவலர் புறப்பட் டாரால்.
3.22.9
1329 ஓலவா ரியின்ற டாரி முரசங்க ளொலித்துப் பொங்க
நீலவொண் கவிகை மேக நிழறர சலவாத் தார்ப்பக்
கோல்வளை யாது செய்து குவலய முழுதுங் காத்த
மாலையொண் புயத்து வள்ளன் மதீனமா புரத்தின் வந்தார்.
3.22.10
1330 கருதலர் பதியிற் புக்கிக் கவர்ந்தபல் பொருளும் பங்கிற்
பிரிவிலா யார்கட் கீந்து பிடித்தவொட் டகையைந் நூற்றின்
வரிமறை முறைநா னூறும் வரன்முறை யினிதி னல்கிப்
பரிவினின் மற்ற நூறுந் தம்வசப் படுத்தி னாரால்.
3.22.11
1331 கோதுறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்க ளெல்லா
மாதவ தீனர்க் கீந்து வானவர் பரவி வாழ்த்தத்
தீதறச் செல்வ மோங்கச் செழுமறை நாளும் பொங்க
வாதிதன் கிருபை தாங்கி யகுமது விருந்தா ரன்றே.
3.22.12
- குதிரிப் படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 22-க்குத் திருவிருத்தம்.....1331.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.23 தீயம்றுப் படலம் (1332-1343 )
1332 பானலங் கழனி சூழ்ந்த நசுதெனும் பதியி னாளுங்
கோனிலை பொருந்தி வாழுங் கத்துபான் கூட்டத் தாரை
தீனிலைப் படுத்த வேண்டுஞ் செயலினைக் கருத்துட் கொண்டார்
மானிலம் பாதந் தோயா வள்ளன்மா முகம்ம தன்றே.
3.23.1
1333 மலர்தலை யுலகம் போற்று மதீனமா நகார்ந் தன்னி
லிலகிய புகழ்சேர் வள்ள லியலுது மானை வைத்துப்
பலகதிப் பரியி னோடும் படைக்கலத் தரசர் சூழப்
புலவர்க ளினிது வாழ்த்த முகம்மது புறப்பட் டாரால்.
3.23.2
1334 குறைவற நசுதில் வாழுங் கத்துபான் கூட்டத் தாரை
மறைவழி யிசுலா மாக்கி மாதமொன் றிருந்த பின்னர்
கறைநிணங் குருதி மாறாக் கதிர்வைவேல் வீரர் சூழ
நறைமலர்த் துடவை போர்த்த மதீனமா நகரில் வந்தார்.
3.23.3
1335 நறாக்கனித் துடவை சூழ்ந்த மக்கமா நகரின் வாழ்வோ
ரறாக்கதிர் புரிசைக் சாமி னியாத்திரை யகற்றிப் பின்ன
ரிறாக்கினிற் றொழில்செய் கின்றா ரென்னுமச் செய்தி யாவு
மறாக்கனக் கவிகை வள்ளன் முகம்மதுக் குரைத்தார் மன்னோ.
3.23.4
1336 சிலையயிற் படைக டாங்குஞ் செல்வரும் பரியுங் கூட்டிப்
புலியெனும் காரி தாதன் புதல்வரைத் தலைமை செய்து
நலிவற மக்க நாட்டார் வரும்வழி நாப்பண் வைகி
வலியுட னிருந்து வெட்டிப் பறித்திவண் வருக வென்றார்.
3.23.5
1337 காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்தென் றோதும்
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றிக்
கூரிலைக் கதிர்வே லேந்திக் கொலைமதக் களிறு போலப்
பூரிகை பேரி யார்ப்பப் படையொடும் புறப்பட் டாரால்.
3.23.6
1338 கனவரை கடந்து கான்யா றுகள்பல கடந்து மாறாச்
சினவரிப் புலியு லாவித் திரிவனம் பலகண் டேகி
நனைபொழில் சூழி றாக்கு நாட்டுக்கும் வரிசை மக்க
மெனுநக ரதற்கு நாப்ப ணிருந்ததீ யம்றைச் சார்ந்தார்.
3.23.7
1339 கொய்யுளைப் பரியும் வீரர் குழுவுமோர் வனத்தி னாக்கி
மையலங் களிறு போன்ற காரிதா மதலை நான்கு
பையல்க ளோடுந் தாமப் பதியிடை யிருக்குங் காலைப்
பொய்யுறாச் செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார்.
3.23.8
1340 அடவியி னிருந்த சேனைத் திரளுமச் சுவமுங் கொண்டு
கடிதினி லெழுந்து மாறாக் கதிர்ப்படைக் கலன்க ளேந்தி
வடிவுறும் காரி தாதன் மதலையங் கெதிரி னேகி
நெடிபடு கானஞ் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார்.
3.23.9
1341 பன்னருங் கதியிற் றாவும் பரியொடுஞ் சேனை யோடு
மன்னபா சுபியா னென்னும் பெயரினன் வந்து தாக்கி
யுன்னுமுன் சைதுக் காற்றா துடைந்துமற் றெவையும் போக்கித்
தன்னகங் கலங்கி மக்க மாநக ரொல்லை சார்ந்தான்.
3.23.10
1342 ஏட்டலர் சோலை சூழி றாக்குமா நகரைச் சார்ந்த
நாட்டுவா ணிபத்துக் கேற்ற நன்னயப் பொருள்க ளியாவுங்
கூட்டிய பரியி னோடு மொட்டகைத் திரளுங் கொண்டு
தீட்டும்வே லவர்கள் சூழ மதீனமா நகரஞ் சேர்ந்தார்.
3.23.11
1343 பாதையிற் பறித்த வெற்றிப் பலன்படு பொருள்க ளெல்லா
மாதவன் காரி தாசேய் முகம்மதி னிடத்தி னீட்ட
வேதநன் மறையி னுற்ற விதிப்படி தீனர்க் கீந்து
பூதல மனைத்தும் போற்றப் புகழ்நபி யிருந்தா ரன்றே.
3.23.12- தீயம்றுப் படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 23-க்குத் திருவிருத்தம்....1343
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.24 அபீறாபிகு வதைப் படலம்(1344-1383)
1344 மக்கமா நகரில் வாழுங் காபிரி லொருவன் மாறா
விக்கின மென்ப யாவும் விளைத்திடுங் கொடிய நீரான்
மைக்கலந் துயருஞ் சோலை கைபறில் வாழ்வோ னாளுந்
துக்கமு மிழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன்.
3.24.1
1345 கள்ளமுங் கொலையும் பொய்யு நிந்தையுங் கள்ளு நீங்கா
துள்ளகத் திருத்தி வாழு முயிர்த்துணை யாகக் கொண்டோ ன்
வள்ளனந் நபிதந் நாமம் வழுத்திய மாந்தர்க் கெல்லா
மெள்ளள விரக்க மில்லா திடும்புகள் விளைத்த சூமன்.
3.24.2
1346 கதிபெறுந் தீனுள் ளோரைக் கண்ணினுன் காண மேவான்
பதிதொறு மருவார்க் கேயப் பண்புறு முதவி யானோன்
சதிமனத் திபுலீ சென்போன் றனையரி லொருவன் போல்வான்
அதபறி வென்ப தில்லா வகத்தபீ றாபி கென்போன்.
3.24.3
1347 இனையன பண்பி னோன்றன் செய்கையு மியற்கை யாவு
மனனுற வைக றோறும் வரிசையங் குரிசில் கேட்டுப்
புனைகழ லுதைக்குத் தந்த புதல்வரில் அப்துல் லாவைத்
தனியழைத் திருத்தித் தோன்றா மறையினிற் சாற்று வாரால்.
3.24.4
1348 அழிவுறு நெறிமேற் கொண்ட காபிர்க ளறித றோன்றா
வழியபீ றாபி தன்னைக் கைபறிற் புகுந்து வல்லே
யிழிவுமற் றிடரு நீங்கக் கோறல்செய் திவணி னீவிர்
குழுவுடன் வருக வென்றா ரன்னது கருத்துட் கொண்டார்.
3.24.5
1349 ஆரண நெறிம றாவன் ஸாரிகள் பதின்மர் சூழ
வாரணி முலையார் சிந்தை மயக்குறும் வனப்பு வாய்ந்த
தாரணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்குங் காந்திக்
கூரயில் கரத்திற் றாங்கிக் குரகத மேற்கொண் டாரால்.
3.24.6
1350 குரிசினந் நபியைப் போற்றிப் பதின்மர்தங் கூட்ட நீங்கா
விரைவுட னெழுந்து போந்து விலங்கலும் வனமு நீந்திக்
கருதல னிருந்து வாழுங் கைபறென் றோது மூரின்
புரிசையின் புறத்தி னுற்றார் வணிகரைப் போன்று மாதோ.
3.24.7
1351 புரிசையுள் ளுறைந்த பேர்க்கும் புறநகர் புகுது வோர்க்கும்
வரன்முறை வேட்ட யாவும் வாணிபத் தொழிலின் மாறி
யொருவரு முழையிற் புக்கி யுசாவுதற் கிடங்கொ டாம
லிருளினும் பகலு நீங்கா திரண்டுநா ளிருந்து மாதோ.
3.24.8
1352 மாசறப் பின்னர் மூன்றா நாளில்விண் மணிவில் வீழ்த்தி
யோசைமேற் கடலிற் புக்கி யுலகமு மிருளுங் காலைக்
காசறு மப்துல்லா வென் றோதிய களிறு காலிற்
றூசியிற் றொருவி னோடுங் கரந்துசூழ் புரிசை புக்கார்.
3.24.9
1353 செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் றிறவு கோல்வைத்
திருக்குமவ் விடத்தைக் காணா திரவினிற் கரந்து நோக்கி
யுருக்கறுத் திலங்கும் வேலோ ருறையிட மனைத்து நோக்கி
மருக்கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ.
3.24.10
1354 மன்னவர் மனைக ணோக்கி மாநகர்க் காவ லாளர்
துன்னுமவ் விடங்க ணோக்கித் துரத்தபீ றாபி கென்போன்
றன்னகப் புரிசை வாயிற் றன்னையு நோக்கி நோக்கிப்
பொன்னணி மனையு மந்தப் புறத்தையு நோக்கி னாரால்.
3.24.11
1355 மரவங்கள் கிடந்து லாவு மணிப்புய வரையின் வள்ள
லிரவங்குப் புகுந்து சாவி யெவ்விட மனைத்து நோக்கி
யரவங்க ளொடுங்கு மட்டு மாயத்துப் பலகா லோதிக்
கரவங்க மிதுகொ லென்னக் களித்தொரு புறத்தி னின்றார்.
3.24.12
1356 நள்ளிருட் காலை யாய திஃதென நடந்து சாவி
யுள்ளுறைந் துறங்கு மொன்னார் தமைக்கடந் தொளித்தோர் பாலி
றள்ளரும் பலகை தாங்கிப் பேழையிற் றடக்கை நீட்டிக்
கொள்ளருங் காப்பு வாய்ந்த திறவுகோ லனைத்துங் கொண்டார்.
3.24.13
1357 அவ்விட மகன்று மெல்ல வடிபெயர்த் தொதுங்கி நீங்கிக்
கௌவைக டோ ன்றா நீண்ட கபாடத்தின் வாயி னண்ணிச்
செவ்விய திறவு கோலாற் பூட்டினைத் தீண்டி நீத்து
நொவ்விதிற் றிறந்துள் ளாய கரப்பையார் நுவல வல்லார்?
3.24.14
1358 செறித்த பொற் கதவ மெல்லா மிமைப்பினிற் றிறந்து மூடிக்
குறித்தவன் வாயில் புக்கிக் கூண்டவர் துயிற னோக்கி
யெறித்தவெண் காந்திமாட மெங்கணுந் திரிந்து பள்ளி
யறைத்தலந் திறந்துள் ளாகி யடுத்தொரு புறத்தி னின்றார்.
3.24.15
1359 திரைத்துகி லடுத்தன் னோனித் திரையினை யுணருங் காலை
விரித்தசெங் காந்திச் செவ்வி யெரிவிளக் கவிந்த பின்னர்
வரித்தடங் கண்ணி னாளு மன்னனும் விழிப்பதாக
விருத்தல்கண் டிருந்தா ராங்கோ ரிளம்புலி யிருந்த தொத்தே.
3.24.16
1360 இருவருந் துயிறல் கொள்ளா திருந்தன ரிருளு மாய
வுருவிவாட் டடக்கை நீட்டி யோங்கினோ மாகி லம்ம
வரிவையோ வவனோ வாவி யளிப்பவ ரென்ன வின்னே
தெரிவரி தென்ன மாழ்கிச் சிந்தையிற் றேம்பி னாரால்.
3.24.17
1361 கங்குலி னெதிர்ந்து தாவும் போதினிற் கடிதி னாவி
மங்கையே வழங்கி னாளேல் மாநில முழுதுங் கொள்ளாப்
பங்கமும் பவமுந் தூறும் பழியும்வந் தடையு மென்ன
வங்கையிற் பிடித்த வாளை யணிநிலஞ் சேர்த்தி னாரால்.
3.24.18
1362 கொல்வதற் கிசைந்து நின்றேங் காலையுங் குறுகிப் போய
மல்வளர் புயத்தி னானு மங்கையுந் தெரித றோன்றா
வில்விடுத் தகன்று சார்பி னெய்திங் குறைந்து நாளைச்
செல்வதெவ் வண்ண மென்ன வடிக்கடி தெருமந் தாரால்.
3.24.19
1363 கொற்றவ னாவி போவ தன்றிவை குறித்து நோக்கி
னிற்றனம் மாவி யென்ன விடைந்திடைந் தெண்ணுங் காலைக்
கற்றையங் கரிய கூந்தற் கன்னியை விளித்து மன்ன
னுற்றறி யென்பான் போலச் சிலமொழி யுரைப்ப தானான்.
3.24.20
1364 பன்மணிக் கலன்கள் பூண்டு பரிமளந் திமிர்ந்து வாசச்
சின்மலர் செருகுங் கூந்தற் சேயிழை யொருத்தி யென்பாற்
பின்முகந் திரும்பி யேறா மொழிபல பிதற்றிப் பேசி
வன்மமுற் றிருப்பக் கண்டேன் கனவென வழங்கி னானால்.
3.24.21
1365 கூறிய மொழியைக் கேட்டுக் கொவ்வையங் கனிவாய்ப் பேதை
வேறொரு மாதை யுள்ளம் விரும்பினை யதனா லிந்தப்
பேறுடன் கனவு காணப் பெற்றனை யென்ன வூடிச்
சீறிய வெகுளி பொங்க விருவிழி சிவந்து நின்றாள்.
3.24.22
1366 அறக்கடிந் துரைப்பக் கேட்ட வாடவ னவளை நோக்கிப்
பெறற்கரும் பெண்மை நல்லாய் பிறிதொரு மாதையாவி
யிறக்கினு மிறப்பதல்லா னினைத்தில னெளியே னென்னத்
திறக்கரும் வெகுளி மாற வூடலைத் திருத்தி னானால்.
3.24.23
1367 ஊடலைத் திருத்தி யன்னோ னுரைத்திடுந் தொனியும் வாய்ந்த
பேடைமா மயிலன் னாள்வாய் பிறந்தசொற் றொனியு நீங்கிக்
கூடுறா திருக்குந் தானக் குறிப்பினை யுணர்த்தக் கேட்டுப்
பீடுற நலிதல் போக்கி மனத்தினிற் பிரிய முற்றார்.
3.24.24
1368 இருந்தவ ரெழுந்து வீழ்த்த திரையினை யீழ்த்துட் புக்கி
யரிந்திடுங் கதிர்வெள் வாளை யங்கையிற் பூட்டி யன்னோன்
றிருந்தவங் கவளுக் கோது மொழிவழி சென்று செந்நீர்
சொரிந்திட வெறிந்து நின்றார் சூரர்க டிலத மன்னார்.
3.24.25
1369 ஊறுபட் டெழுந்து வாய்விண் டுரப்பியாங் கரித்திவ் வில்லின்
வேறுபட் டெவரோ கொன்றா ரென்னவாய் வெருவிக் கூவ
வேறுபட் டவரியார் கொன்றா ரெவரென விடைந்து மாந்தர்
தேறுபட் டிலராய் மாழ்கி மனையிடஞ் செறிந்தார் மன்னோ.
3.24.26
1370 எறிந்தொளித் திருந்தோர் காயஞ் சிறிதென மனத்தி னெண்ணி
யுறைந்துசா வுவர்போ லாங்கி னுற்றவா ளோங்கிப் பின்னுங்
குறைந்துயிர் மீளத் தாக்கிக் கூரிருட் காலை கூண்டு
நிறைந்தவ ருடனு நின்று பயப்பய நீங்கி னாரால்.
3.24.27
1371 மறந்தருங் கொடிய வஞ்ச மனத்தபீ றாபி கின்னே
யிறந்தன னுயிர்பெற் றானென் றிரண்டிலொன் றறிவோ மென்னத்
திறந்தரு மப்துல் லாவென் றோதிய திருப்பேர் மன்னர்
நிறந்தரந் தெரியாக் கங்கு னின்றன ரொருபா லன்றே.
3.24.28
1372 இருந்தன ரெவர்கொ லென்பா ரியாவரிற் புகுந்தா ரென்பார்
தெரிந்திலன் காணு மென்பார் தீபமு மிலையோ வென்பார்
கரந்தவ ருளரோ வென்பா ரொருவருங் காணோ மென்பார்
சொரிந்தது குருதி யென்பார் சோர்ந்தனன் மன்ன னென்பார்.
3.24.29
1373 உண்டிலை யாவி யென்பா ருயிர்துடிக் கின்ற தென்பார்
விண்டனன் மாற்ற மென்பார் விழித்தனன் காணு மென்பார்
கண்டவ ருளரோ வென்பார் காயத்திற் பிழைப்பி லென்பார்
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்த தென்பார்.
3.24.30
1374 என்னினிச் செய்வோ மென்பா ரிடைந்திடைந் தேங்கி நிற்பார்
பன்னுவ தென்கோ லென்பார் பழிமுடித் தவரா ரென்பார்
முன்னையூழ் விதிகொ லென்பார் முனையகத் திறந்தி டாது
மன்னவ னாவி வீணில் வழங்கினான் காணு மென்பார்.
3.24.31
1375 மடிந்தன னென்னு மாற்றம் வழங்கிடக் கடலி னாப்பண்
படர்ந்தவெண் டிரையிற் றத்திப் பன்மணி நிதியத் தோடு
முடைந்திடுங் கலம தொப்ப மன்னவன் மனையு ளெங்கு
மிடைந்திடைந் திரங்கி யேங்கி யெழுந்துகொல் லென்ற தன்றே.
3.24.32
1376 மாற்றல னிறந்தா னென்ன மனமகிழ்ந் துவகை பொங்கிப்
போற்றிநன் னபியை வாழ்த்தி யப்துல்லா பூரிப் போடுந்
தோற்றிடா தொதுங்கி வாய றொறுங்கடந் தெளிதி னேகித்
தீற்றிவெண் ணிலவு காலும் புரிசையின் வாயிற் சேர்ந்தார்.
3.24.33
1377 புரிசையின் வாயி லாலும் பொதி யிருட் காலையாலும்
வரிமுறைப் படியிற் காலை வைத்திடத் தவறி வீழ்ந்து
தரிபடற் கரிதா யோர்தா ளொடிந்ததத் தாளி னோடும்
விரைவொடு மெழுந்து சாரும் விடுதியை நண்ணி னாரால்.
3.24.34
1378 மூரியங் கணைக்காற் கீழ்பான் முகிழ்தரும் பரட்டின் மேல்பாற்
சார்பற வொடிந்த காலைத் தன்றலைப் பாகிற் சுற்றி
யூரினி லெவர்க்குந் தோன்றா துறைந்தன ருறைந்த பின்னர்
பாரிருட் படல நீத்துப் பகலவ னுதயஞ் செய்தான்.
3.24.35
1379 கதிரவ னெழுந்தோர் சாம மிருந்தவண் கடந்து வல்லே
பதின்மருந் தாமு மாக வேறொரு பாதை பற்றி
முதிர்தரு முளரி நீந்தி முகிலுறை வரைக ணீங்கி
மதுரமென் மறையோர் வாழ்த்த மதீனமா நகரின் வந்தார்.
3.24.36
1380 நகரினிற் புகுந்து வேத நாயகர் பதத்தை நண்ணிப்
புகுமிடத் துறைந்த செய்தி யாவையும் புகன்று காலிற்
றகைபடுத் தொடிந்த வாறு தன்னையு முரைத்து நின்றார்
மகிதலம் புகழுங் கீர்த்தி மன்னவ ரப்துல் லாவே.
3.24.37
1381 கொடியவஞ் சகத்தைச் சூழ்ந்த குணத்தபீ றாபி காவி
முடிவினைக் கேட்டு தீனின் முரட்பகை தவிர்ந்த தென்ன
நெடியவ னிறசூ லுல்லா நேரலர்க் கரியே றன்னா
ரொடிபடுந் தாளை நோக்கி யோதிச்செங் கரத்திற் றொட்டார்.
3.24.38
1382 என்பற முறிந்து தோலு மிழ்ந்தொரு நரம்பிற் றூங்கித்
துன்புறுந் தாளி னீண்ட திருக்கரந் தொட்டு நீவ
வன்புறப் பொருந்திக் காய மென்பதோர் வடுவு மின்றி
முன்பிருந் ததனிற் செவ்வி மும்மடங் காயிற் றன்றே.
3.24.39
1383 கடங்கரைத் திறைக்கும் வெற்றிக் களிறெனு மப்துல் லாவை
யிடம்பெற விருத்திச் செய்யும் வரிசைக ளனைத்து மீந்து
தடங்கடற் புடவி காத்துத் தரியலர்க் கரியே றென்ன
மடங்கலா சனத்தின் வைகி முகம்மதாண் டிருந்தா ரன்றே.
3.24.40- அபீறாபிகு வதைப் படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 24-க்குத் திருவிருத்தம் .....1383.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.25. அசனார் பிறந்த படலம் (1384-1403 )
1384 மருந்தெ னுங்கலி மாவுரை விதைத்துமக் காவி
லிருந்து மாமதீ னாவிடத் தினிதெழுந் தருளித்
திருந்த வாண்டொரு மூன்றினில் தீன்பயிர் விளைத்துப்
பொருந்து நாளினி னுற்றவை யினிற்சில புகல்வாம்.
3.25.1
1385 ஒலிகொண் மாக்கடன் மணியெனு நபியுயிர்க் குயிராய்
வலியும் வீரமும் வெற்றியுந் திரண்டொரு வடிவாய்
நிலனு தித்துய ரும்பரின் வரிசையி னிறைந்த
குலவு நீள்புக ழுமறுகத் தாபெனுங் குரிசில்.
3.25.2
1386 அருந்த வத்தினி லீன்றெடுத் துவந்தபெண் ணரசைக்
கருந்த டங்கயற் கண்ணியை நறுமொழிக் கனியை
வருந்து மெல்லிழைக் கொடியைமென் பிடிநடை மயிலைப்
பொருந்து மாரமு தையபு சாவெனும் பூவை.
3.25.3
1387 குறைஷி யங்குலக் காவினி லுறைந்தகோ குலத்தைப்
பொறையு நீதியு மொழுக்கமும் விளைத்தபொன் னிலத்தை
யுறையுங் கற்பினுக் குறையிடத் தினையொளிர் மணியை
மறையி னேர்நபி முகம்மது வதுவையின் மணர்ந்தார்.
3.25.4
1388 புரந்த ராதிபர்க் கரியும றருள்புதல் வியரைத்
தெரிந்த நன்மொழி தரும்ஹபு சாவெனுந் திருவை
வரைந்து நந்நபி யின்புறும் வாரியின் மூழ்கிப்
பிரிந்தி டாநலம் பொருந்தியுண் டிருந்ததற் பின்னர்.
3.25.5
1389 பூத லம்புகழ் தருங்கதீ ஜாபுதல் வியரின்
மாத ருக்கர சும்முக்குல் தூமணி விளக்கைக்
கோதி லாவுது மான்மனங் களிப்புறக் கொடுத்தா
ராத ரத்துடன் மகிழ்ந்தினி துறைந்தன ரன்றே.
3.25.6
1390 மறமும் வீரமு மிலகிய வேலுது மானுக்
குறையு மாவியின் மிக்குயிர் புதல்வியை யுதவிக்
கறைகொள் வெங்குபிர்க் குலங்கடிந் தருங்கலி மாவை
நறைத ரும்புவி யிடத்தினி னடத்துமந் நாளில்.
3.25.7
1391 மல்வ ளர்ந்தெழும் புயன்உசை மாவரத் துதித்த
செல்வி யையெழில் ஸெயினபைப் பொறைச்செழு மமுதைப்
பல்வி தத்தொடுந் திருமண முடித்திசை பரப்பி
யில்வ ளத்தொடு முறைந்தனர் ஹபீபெனு மிறசூல்.
3.25.8
1392 செருகு பூங்குழற் ஸெயினபைத் திருநபி மணந்த
வருட மங்கையர்க் கரசெனும் பாத்திமா வயிற்றிற்
கருவெ னத்தரித் தும்பரின் பேரொளி கவின
முரியு மெல்லிடை தெரிதரக் கருப்பமு முதிர்ந்த.
3.25.9
1393 கடைந்த வேல்விழி வட்டணித் தெழின்முகங் கசங்க
நடந்து நாலடி வைத்திடிற் பசந்தமெய் நலியத்
திடந்த ராதுள மிடைந்திடத் தெரியல்க டுயல
மடந்தை யர்க்கர சியர்க்கரும் வருத்தமுற் றனவால்.
3.25.10
1394 இறம லான்பதி னைந்தினில் வெள்ளியி னிரவின்
மறுவில் கற்புடை பாத்திமா வெனுந்திரு மடமா
னறமும் வெற்றியு மோருரு வெடுத்தென வரிதிற்
பொறையு யிர்த்தன ரொளிதர வொருபுதல் வனையே.
3.25.110
1395 பொருவி லாமுத லவன்றிருப் புலியெனு மலிக்குப்
பெருகுஞ் செல்வத்துட் பிறந்தது மகவெனக் கேட்றி
முருகு லாவுமெய் புளகெழ முகமதி யிலங்க
வரிசை நந்நபி வந்தன ரவர்திரு மனையின்.
3.25.12
1396 ஆர ணத்திரு நாவினர் சூழ்தர வடுத்த
கார ணக்கட லெனுமுகம் மதுசெழுங் கரத்திற்
பூர ணக்கதிர் பிறங்கிய புதல்வனை யேந்திக்
கூரும் வேல்விழி மடந்தையர் விரைவினிற் கொடுத்தார்.
3.25.13
1397 தீங்க கற்றிய மகள்மகன் வலத்திருச் செவியின்
வாங்கு ரைத்திடக் காதினிக் காமத்தும் வழங்கிப்
பாங்கு றக்கமழ் தருநறும் பரிமள மெடுத்துத்
தாங்கு மென்சிரத் தினிலழ குறத்தட வினரால்.
3.25.14
1398 பொன்னி லத்துறு மவர்களா மீனெனப் புகல
வின்னல் போக்கிய முதியவ ரிருகையேத் திரப்ப
வுன்னு மாமறை வாழ்த்தொடு மொருதுஆ வோதி
மன்னர் மன்னபி கொடுத்தனர் போந்தனர் மனையில்.
3.25.15
1399 தெரித ரத்தின மேழினிற் செழும்புவி புரக்கு
மரசர் நாயகர் மகள்மனை யடுத்தரும் புதல்வன்
கரிய மென்சிர மயிரினைக் களைவித்தவ் விடையி
னிரசி தஞ்சதக் காவென வெடுத்தினி தளித்தார்.
3.25.16
1400 கொறியி ரண்டறுத் துடன்அக்கீக் காவினைக் கொடுத்துப்
பொறையின் மிக்குயர் மருத்துவப் பூங்கொடி தனக்குத்
தறுகி லாதொரு குறங்குமோர் தமனியக் காசும்
பெறுக வென்றினி தளித்தனர் தூதரிற் பெரியோர்.
3.25.17
1401 முசுலி மானவர் செயுந்தொழிற் சடங்குகண் முடித்துக்
திசையெ லாம்புகழ்ந் துரைதரப் பேசிய செம்மல்
வசைய றுங்கரத் தெடுத்தரும் பேரனை வாழ்த்தி
யசனெ னச்செழுந் திருப்பெயர் தரித்தன ரன்றே.
3.25.18
1402 உருவு மந்தமு நிறமுநந் நபியென வொளிரு
மரும கச்செழுங் குழவியுஞ் ஜிபுரியீ லணுகி
யிருடொ றுமணித் தொட்டிலை யசைத்தரு கிருந்து
வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த.
3.25.19
1403 இந்த மானில மடந்தைய ரெவருமீ டேற
வந்த நாயகி பாத்திமா தருதிரு மகவைச்
சிந்தை கூர்தரு முவப்பொடுந் தினந்தினம் போற்றி
யந்த நாயகன் றூதுவ ரிருக்குமந் நாளில்.
3.25.20- அசனார் பிறந்த படலம் முற்றிற்று.
- ஆகப் படலம் 25க்குத் திருவிருத்தம் .... 1403
- ஓநாய் பேசிய படலம் முற்றிற்று.
3.12 ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்
கவினுறும் பைத்துல் முகத்தி சென்னுமத்
தவிசினை நோக்கியே தக்கு பீறொடும்
புவியிடைத் தொழுகையைப் பொருந்தி நின்றனர்.
3.12.1
609 தூவத்தண் டுளிமழைக் கவிகைத் தூதுவர்
தீவத்தும் புகழ்தர வணக்கஞ் செய்யுநாட்
பாவத்தின் றிரள்கெடப் படுத்துத் தோன்றிய
காபத்துல் லாவைப்பின் காட்ட வில்லையால்.
3.12.2
610 மகிதலத் தினிலுயர் மக்க மாகிய
நகர்விடுத் தணிமதி னாவை நண்ணிச்சூழ்
புகழொடுந் தீனெறி புரந்து வைகுநாட்
டிகழ்சகு பானென விளங்குந் திங்களில்
3.12.3
611 மிக்கநற் றேதிமூ வைந்தின் மேவியே
தக்கசெவ் வாயினி லுஹறு நேரத்தில்
ஹக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான்றொழு
தொக்கலோ டிசைநபி யுறையு மொல்லையில்.
3.12.4
612 நிரைமணித் தடச்சிறை யொடுக்கி நீள்கதிர்
விரிதரு வெள்ளிடைப் படர்ந்து வேதநூ
லுரைதருந் திருநபி யிடத்தி னோர்நொடி
வரையினில் ஜிபுறயீல் வந்துற்றா ரரோ.
3.12.5
614 இறையவன் ககுபத்துல் லாவென் றெய்திய
துறவுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ
மறையுரை வழங்கின னென்ன மன்னபி
முறையிதென் றாநந்தக் கடலி மூழ்கினார்.
3.12.6
615 முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய
பின்னரிற் ககுபத்துல் லாவைப் பெட்புற
வுன்னினர் நோக்கின ரோதும் பாதியுந்
துன்னிய குழுவுடன் றொழுது வைகினார்.
3.12.7
616
ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் முற்றிற்று.
This file was last revised on 10 March 2004